Skip to main content

டாஸ்மாக்கில் விற்பது கரோனா தடுப்பு மருந்தா? சிவசங்கர் கடும் கண்டனம்!

Published on 18/08/2020 | Edited on 19/08/2020

 

tasmac

 

 

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுக்கடைகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இருப்பினும் தமிழக அரசு அறிவித்தப்படி, இன்று டாஸ்மாக் கடைகளைத் திறந்தது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு சென்னையில் பெண்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.  

 

tasmac

 

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது குறித்து அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் நம்மிடம் பேசுகையில், 

 

"அவசர, அவசரமாக அறிவிப்பை வெளியிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகளை இன்று திறந்திருக்கிறது எடப்பாடி அரசு. கடந்த வாரம் இ-பாஸ் தளர்வுகள் அறிவித்தபோது, இந்த அறிவிப்பை வெளியிடாமல் விட்டுவிட்டு, இப்போது மதுக்கடையைத் திறந்திருக்கிறார்கள்.

 

இன்றே சென்னை ராயபுரத்தில் டாஸ்மாக் கடையைத் திறக்கக்கூடாது என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்கள் உணர்வைப் புரிந்து கொள்ளாமல் அரசு டாஸ்மாக் கடையைத் திறந்திருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

 

சென்னையில் கரோனா வேகமாக பரவியபோது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையின் அமைப்பு குறித்து விளக்கினார், தெருக்கள் எல்லாம் நெருக்கமாக இருக்கிறதென. "சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் கரோனா வேகமாக பரவுகிறது", என்ற கண்டுபிடிப்பையும் வெளியிட்டார். ஆனால், இப்போது டாஸ்மாக் கடையைத் திறக்கும்போது இது மறந்து போனது தான் கொடுமை. டாஸ்மாக் கடையில் மக்கள் நெருக்கமாக நிற்பார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமி நினைத்து பார்க்கவில்லை போல. 

 

சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடையைத் திறப்பது என எடப்பாடி பழனிசாமி அறிவித்தபோதே, திறக்கக்கூடாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். டாஸ்மாக் கடையைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழகம் முழுதும் தி.மு.க சார்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் எடப்பாடி அலட்சியம் செய்தார்.

 

tasmac

 

 

இதை எல்லாம் தாண்டி, சென்னை தவிர்த்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடையைத் திறந்த பிறகு தான், மாவட்டங்களில் கரோனா பரவல் வேகம் பிடித்தது. இன்னும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

 

இதுகுறித்து மருத்துவர்கள் சொல்லும்போது, மதுக்கடைக்கு வருவோர் முகக்கவசம் அணிவதில்லை. அணிந்து வருவோரும், குடித்த பிறகு முகக்கவசம் அணிவது குறித்து கவலை கொள்வதில்லை. மதுகுடித்த போதையில், கரோனா குறித்த பயம் போய், சகஜமாக நடமாடுகின்றனர். எனவே டாஸ்மாக் கடை திறப்பு, கரோனா பரவலை அதிகப்படுத்தும் எனக் கருத்து தெரிவிக்கிறார்கள்.

 

s. s. sivasankar

 

எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி தலைவர்களின் கருத்தை கேட்க வேண்டும் என கூறியபோது, அவர்கள் என்ன மருத்துவ வல்லுநர்களா?, அவர்களிடம் என்ன ஆலோசனை கேட்பது என்று நக்கல் செய்தார் முதலமைச்சர் பழனிசாமி. இப்போது டாஸ்மாக் கடை திறப்பு குறித்து மருத்துவர்கள் கருத்தை கேட்காமலே செயல்படுகிறார்.

 

தமிழகம் முழுதும், தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் அரசின் கட்டுப்பாட்டால் வருமானம் இன்றி தவிக்கிறார்கள். டாக்ஸியில் 3 பேருக்கு மேல் பயணம் செய்தால், கரோனா பரவும் என்றால், டாஸ்மாக் கடைகளில் கூடும் கூட்டத்தால் கரோனா பரவாதா?

 

Nakkheeran AD

 

சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் போது, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டையும் திறக்க வேண்டுமென வணிகர் பேரவையின் தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் வாழ்வாதாரமாகக் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் விளங்குகிறது. கோயம்பேடு மார்க்கெட் திறந்தால், சென்னை மக்களுக்கும் நியாயமான விலையில் காய்கறிகள் கிடைக்கும்.

 

டாஸ்மாக் கடையில் கூடும் கூட்டத்தால் கரோனா பரவாது என்றால், காய்கறி மார்க்கெட்டில் சேரும் கூட்டத்தால் மட்டும் கரோனா எப்படிப் பரவும். அப்படி என்றால், டாஸ்மாக்கில் விற்பது கரோனா தடுப்பு மருந்தா? எனக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

மலைப்பகுதியில் ‘விடியல் பயணத் திட்டம்’ தொடக்கம் 

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Dawn Trip begins in hills

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 19 ஆம் தேதி (19.02.2024) தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில், “அரசு நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் மகளிருக்கான 'விடியல் பயணம்’ திட்டம் நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவிக்கையில், “மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் பிப்ரவரி 25 ஆம் தேதி உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் மலைப்பகுதியில் மகளிருக்கான விடியல் பயணத்தினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுடன் அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், திமுகவினர், தொ.மு.ச நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.

Next Story

“பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம்” - அமைச்சர் சிவசங்கர்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Beef can be transported in buses Minister Sivasankar

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வசித்து வரும் பாஞ்சாலை என்ற பெண் அந்த பகுதியில் சிறிய அளவில் மாட்டிறைச்சி பக்கோடா விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். அதோடு அரூருக்கும் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். அதன்படி அண்மையில் வழக்கம்போல் தனது சொந்த ஊரிலிருந்து மாட்டிறைச்சியை எடுத்துக்கொண்டு அரூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறி சில கிலோமீட்டர் சென்ற பின் நடத்துநர் ரகு, என்ன எடுத்து வர்றீங்க... என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மாட்டிறைச்சி எடுத்து வருவதாகப் பாஞ்சாலை பதிலளிக்க, இதெல்லாம் பேருந்தில் எடுத்து வரக்கூடாது என்று கூறி மோப்புப்பட்டி என்ற வனப்பகுதியில் பேருந்தை நிறுத்தி பாஞ்சாலத்தை இறக்கி விட்டுள்ளார். பாஞ்சாலை அடுத்த பேருந்து நிறுத்தத்திலாவது இறக்கி விடுங்கள்; இங்கே இறக்கி விடாதீர்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாத நடத்துநர் ரகு, பாஞ்சாலையை பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து பாஞ்சாலை நடந்தே பேருந்து நிறுத்தம் சென்று வேறு பேருந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீட்டிற்குச் சென்ற அவர், நடந்த சம்பவத்தைத் தனது உறவினர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அந்த பேருந்து திரும்பி அந்த வழியாக வந்த பிறகு வழிமறித்து நியாயம் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பெண் பயணியின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நடுவழியில் இறக்கி விட்டதற்காக ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துநர் ரகு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில், பாதிக்கப்பட்ட மூதாட்டி பஞ்சாலை கொடுத்த புகாரின் பேரில் பேருந்து நடத்துநர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமார் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Beef can be transported in buses Minister Sivasankar

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளிக்கையில், “அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை. பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை. மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும், “மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.  500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.