Skip to main content

பணியிடத்தின் தன்மைக்கேற்ப பேரம்!!! தாறுமாறு போஸ்டிங்! எல்காட் தகிடுதத்தம்! 

Published on 25/09/2020 | Edited on 25/09/2020
elcot

 

தமிழக அரசின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஐ.டி. பூங்காக்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்களை கவனிக்கிறது எல்காட் நிறுவனம். அரசின் இலவச மடிக்கணினிகளை கொள்முதல் செய்து தருவதும் அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள எல்காட் தான். இதில் பல்வேறு பதவிகளுக்காக தகுதியானவர்களை தேர்வு செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக டெல்லி வரை புகார்கள் பறந்துள்ளன. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளால் அதிர்ந்து போயிருக்கிறது எல்காட் நிறுவனம்.

 

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான எல்காட்டின் நிர்வாக இயக்குநராக இருக்கும் விஜயகுமார் ஐ.ஏ.எஸ்., அடுத்தமாதம் ஓய்வு பெறவிருக்கிறார். ஓய்வு பெறுவதற்கு முன்பு, எல்காட்டில் பல்வேறு பணியிடங்களை நிரப்பிவிட்டு செல்வது என அண்மையில் முடிவெடுத்த அவர், ப்ரைவேட் செக்ரட்டரி, ட்ரைவர், அட்டெண்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை அறிவித்திருந்தார். இதற்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 17-ந் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. இதுதவிர மேனேஜர், டெபுடி மேனேஜர் பணியிடங்களும் நிரப்பப்படவிருக்கிறது.

 

எல்காட் நிறுவனத்தில் தற்போது ஒப்பந்த ஊழியர்களாக இருப்பவர்களை நிரந்தரப்படுத்தவும், அவர்களின் உறவுகளை உள்ளே கொண்டு வருவதும்தான் இதன் நோக்கம். பணியிடத்தின் தன்மைக்கேற்ப 15 முதல் 30 லட்சம் வரை பேரங்கள் நடந்து வருகின்றன. மேற்படி பேரங்களை நடத்தி முடிக்க, எல்காட்டில் பணி நீட்டிப்பில் இருக்கும் ஒரு மேலாளர், ஓய்வுபெற்ற பிறகு ஒப்பந்த ஊழியர்களாக இருக்கும் 2 துணைநிலை மேலாளர்கள் மற்றும் ஒரு பெண் துணை மேலாளர் ஆகிய 4 பேர் மீடியேட்டர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

 

பொதுவாக, குரூப் -3 சர்வீஸ் தொடங்கி அதற்கு மேலான பணியிடங்களுக்கு டி.என்.பி. எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், எல்காட்டில் தற்போது இத்தகைய பணியிடங்களுக்கான தகுதியானவர்களை எல்காட் அதிகாரிகளே ஒரு இண்டர்வியூ மாதிரி நடத்தி பணம் கொடுத்தவர்களை நேரடியாக தேர்வுசெய்ய துணிந்துள்ளனர். எல்காட்டில் எந்தெந்த பணியிடங்கள் காலியாக இருக்கிறது என வெளிப்படையாக தெரிவிப்பதே இல்லை.

 

கடந்த பிப்ரவரியில் மேனேஜர், டெபுடி மேனேஜர் (ஃபைனான்ஸ், அக்கவுண்ட்ஸ்), டெபுடி மேனேஜர்(லீகல்) பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் அறிவிப்பு வெளியிடாமல் எல்காட் நிறுவனமே அறிவிப்பு செய்தது. இதற்கான நபர்களையும் மறைமுகமாக தேர்வு செய்துள்ளனர். ரகசிய பேரங்களில் இழுபறி இருப்பதால் நியமன அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறது எல்காட். இப்படி நிறைய தில்லுமுல்லுகள் எல்காட்டில் தலைவிரித்தாடுகின்றன'' என்கின்றனர் தகவல் தொழில்நுட்ப துறையினர்.

 

இப்படிப்பட்ட சூழலில், செப்டம்பர் 17-ந்தேதியை கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட மேற்கண்ட பணியிடங்களுக்கான தேர்வினை திடீரென தற்போது தள்ளிவைத்துள்ளது எல்காட் நிறுவனம். இதன் பின்னணி குறித்து விசாரித்த போது, "அறிவிக்கப்பட்ட எல்காட் பணியிடங்களில் நடக்கும் ஊழல்கள் குறித்த புகார்கள் மத்திய-மாநில அரசுகளுக்கும், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் பறந்துள்ளன. அதனடிப்படையில் உயரதிகாரிகள் நடத்திய விசாரணைகளும் உத்தரவுகளுமே இந்த நியமனங்களுக்கான நடவடிக்கைகளை உடனடியாக தள்ளிப்போட வைத்திருக்கிறது. இதற்கிடையே, அடுத்த மாதம் ஓய்வு பெற விருக்கும் விஜயகுமார், தனக்கு பணி நீட்டிப்பு வேண்டி சில முயற்சிகளையும் எடுத்துள்ளார். தவிர, அவருக்கு நெருக்கமான பணி நீட்டிப்பிலிருக்கும் மேலாளரை ஒப்பந்த அடிப்படையில் கன்சல்டண்டாக நியமிக்கும் திட்டமும் போடப்படுகிறது'' என்று விவரிக்கிறார்கள்.

 

இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து எல்காட் எம்.டி.விஜயகுமாரிடம் நாம் பேசியபோது, "எல்காட் நிறுவனம் பொதுத்துறை நிறுவனம் என்பதால் பணி நியமனங்களில் டி.என்.பி.எஸ்.சி.க்கு சம்மந்தமில்லை. கம்பெனி சட்டப்படி இயங்குவதால் எல்காட் பணியிடங்களுக்கான தகுதியானவர்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்ய முடியாது. செய்யவும்கூடாது. எல்காட் என்பது அட்டானமஸ் பாடி என்பதால் அரசுகூட தலையிடவும் முடியாது. எல்காட்டிற்கான பணியிடங்களை எல்காட் நிறுவனமே முறையாக இண்டர்வியூ நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அதனடிப்படையில்தான் தற்போது சில பணியிடங்களுக்கான அறிவிப்பு செய்யப்பட்டது.

 

ஆனால், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்ததால் இண்டர்வியூ நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்வதில் நிர்வாக சிக்கல்கள் இருப்பதை உணர்ந்து தேர்வு செய்வதை தள்ளி வைத்திருக்கிறோம். தங்களுக்கு வேலை கிடைக்காது என்கிற ஆத்திரத்தில் எனக்கு எதிராக ஜனாதிபதி தொடங்கி முதலமைச்சர்வரை மொட்டை கடிதங்களைப் புகார்களாக அனுப்பி வைக்கவே ஒரு கும்பல் சுற்றிக்கொண்டிருக்கிறது. என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது'' என்கிறார் விஜயகுமார்.

 

இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, "அரசு சார்ந்த பணியிடங்களை தேர்வாணையம் மூலமே நிரப்பவேண்டும் என நீதிமன்ற உத்தரவே உள்ளது. ஜெயலலிதா ஆட்சியின்போது (2016) மேனேஜர், டெபுடி மேனேஜர் பதவிகளுக்காக 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் மூன்று விதமான தேர்வுகள் நடத்தி தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனை எல்காட்டின் வெப்-சைட்டிலேயே பதிவும் செய்திருக்கிறார்கள்'' என்கிறார்கள் விபரமறிந்த அதிகாரிகள்.

 

 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.