Skip to main content

''சென்னை சலோ!'' - தமிழக போர்க் குரல்! 

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

tttt

 

தலைநகர் டில்லியில் மத்திய அரசின் பாராமுகத்துக்கு நடுவிலும் 35-வது நாளாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் டிசம்பர் 29-ஆம் தேதி மாலை 'வேளாண் சட்டங்கள் ரத்து', 'மின்சார திருத்தச் சட்டம் 2020 -ரத்து' என்ற கோரிக்கைகளுடன் தஞ்சை திலகர் திடலில் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்திருந்தது.  

 

தமிழ்நாடு முழுவதும் இருந்து விவசாயிகள், விவசாய சங்கங்கள் அணியணியாக திரண்டுவரத் தொடங்கினர். தமிழக காவல்துறையோ அவர்களைக் கைது செய்வதில் மும்முரமானது. காவல்துறையின் கெடுபிடியை அறிந்த விவசாயிகள், கல்யாண நிகழ்ச்சிகளுக்குப் போவதுபோல திலகர் திடல் வந்துசேர்ந்தனர். கைது செய்யப்படும் விவசாயிகளைத் தங்கவைக்க தஞ்சையில் மட்டும் 15 திருமண மண்டபங்களை முன்பதிவு செய்து வைத்திருந்தனர். பேரணிக்கு அனுமதி வழங்காததால், பொதுக்கூட்டம் மட்டும் நடத்தப்பட்டது. திலகர் திடல் நிரம்பி வெளியேயும் விவசாயிகள் திரண்டு நின்றனர்.

 

வரவேற்புரை நிகழ்த்திய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், "எமர்ஜென்சி காலத்தில்கூட இதுபோன்ற அடக்குமுறை நடந்ததில்லை. அத்தனை அடக்குமுறைகளையும் கடந்து, எடப்பாடி முகத்தில் அடிக்கும் விதமாக விவசாயிகள் திரண்டிருக்கிறார்கள். அனைவரையும் வரவேற்கிறேன்'' என்றார்.

 

மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், "தமிழக முதலமைச்சர் எடப்பாடி, தான் ஒரு விவசாயி என்கிறார். இந்தச் சட்டத்தை ஆதரிப்பதிலிருந்தே அவர் ஒரு கார்ப்பரேட் விவசாயி என்பது தெளிவாகத் தெரிகிறது'' என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சண்முகம், "இன்று தமிழக அரசின் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு தடைகளைத் தகர்த்து மாநில அளவிலான விவசாயிகளின் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் கடுங்குளிரில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக் கிறார்கள். தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சிபோல போராட்டத்திற்கு வருவோர்களின் வாகனங்கள் செல்லவிடாமல் மிரட்டுவது, வாகன உரிமையாளர்களை மிரட்டுவது, கரோனாவைக் காரணம் காட்டி விவசாயிகளை மிரட்டி கைதுசெய்வது போன்றவை இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.

 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி சென்னையில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கூட்டத்தைக் கூட்டினார். அங்கே கரோனா பரவாதா? விவசாயிகள் போராடினால் மட்டும் தான் கரோனா பரவுமா? 

 

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி? விவசாயிகளுக்கு ஒரு நீதியா? அந்தச் சட்டங்களை ஆதரிக்க உங்களுக்கு உரிமை உண்டு என்றால் அதை எதிர்க்க எங்களுக்கும் உரிமையைக் கொடுத்திருக்கிறது இந்திய அரசியல் சாசனம். நாற்பது உயிர்களைப் பறிகொடுத்து போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மோடி கண்டுகொள்ளவில்லை.. இந்தச் சட்டம் வந்தால் விவசாயிகள் கையேந்தும் நிலை ஏற்படும். இந்தச் சட்டத்தால் 22 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் ரத்துசெய்யப்படும். இந்தப் போராட்டம் முடிவுக்கு வரவேண்டும் என்றால், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும்'' எனப் பேசினார்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கத்தைச் சேர்ந்த துரைமாணிக்கம், "இதேபோல பத்து மடங்கு கூட்டத்தைக் கூட்டுவோம். அ.தி.மு.க. - பா.ஜ.க.வில் உள்ள சிறுகுறு விவசாயிகள் தங்களின் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். இந்தச் சட்டத்தால் பாதிப்புகள் இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். வேளாண்மைக்கு எதிரான அரசுகளைத் தூக்கி எறிய வேண்டும்'' என்றார்.

 

cnc

 

"இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தைப் பார்த்து மத்திய-மாநில அரசுகள் அச்சத்தில் உள்ளன. மத்திய அரசுப் பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படவில்லை என்றால், டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக 'சென்னை சலோ' என்ற பெயரில் சென்னையில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தத் தயாராவோம்' என்று தீர்மானம் வாசித்தனர்.

 

டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்ட போராட்டக் காரர்களை 'தரகர்கள்' என்ற முதல்வர் எடப்பாடி, அடுத்த பிரச்சாரக் கூட்டத்தில், தஞ்சைத் திடல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை என்ன பெயரில் அழைப்பாரோ!
 

 

 

Next Story

“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.32 கோடி ஆகும். இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். 80 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் ஆவர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியும், திருநர் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் (65 சதவிகிதம்) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 950 ஆகும். இதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேரும், பெண் வேட்பாளர்கள் 76 பேரும் ஆவர்.

வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லலாம். ஆனால் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 வகையான அரசு ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முதல்கட்ட வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
First Phase Voting; Preparations are intense

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தின் 950 வேட்பாளர்கள் உள்பட 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த முதல் கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, கிரன் ரிஜிஜு, எல். முருகன், ஜிதேந்திர சிங், சர்வானந்த் சோனோவால், அர்ஜுன்ராம் மேக்வால் மற்றும் சஞ்சீவ் பல்யான் என 8 பேர் போட்டியில் உள்ளனர். தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் களத்தில் உள்ளார். மேலும் திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ், அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகி, தமிழகத்தின் முன்னாள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதே சமயம் முதற்கட்ட தேர்தலுடன் தமிழகத்தின் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது. இதே போன்று திரிபுரா மாநிலம் ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பதற்றமான 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பதற்றமான 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளில் நவீன ஆயுதங்களுடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியும் தீவிரமடைந்துள்ளது.