Skip to main content

எதுக்கு சுங்கச்சாவடி? கொந்தளிக்கும் மக்கள்! உணர்வுகளை மதிக்காத அரசு!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

 

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசு பஸ் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியை வந்து அடைந்தது. அப்போது பஸ் டிரைவருக்கும், சுங்கச்சாவடியில் உள்ள ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுங்கச்சாவடி ஊழியர் பஸ் டிரைவரை தாக்க முயன்று, தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
 

பின்னர் பஸ் பயணிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே அது மோதலாக வெடித்தது. மேலும் சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

toll gate



இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுங்கச்சாவடி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, இதேபோல் டிரைவர் கண்டக்டர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்பிலும் தலா இரண்டு பேர் என 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் 3 மணி நேரம் காலதாமதம் ஆகியிருக்கிறது. சேதம் அடைந்த சுங்கச்சாவடியை சீரமைக்க ஒரு வாரம் ஆகும் என தெரிவிக்கிறார்கள். இதனால 3-வது நாளாக 28ஆம் தேதி இன்று வரை வாகனங்கள் கட்டணம் இல்லாமல் சென்றன.
 

இந்த நிலையில் சுங்கச்சாவடி சூறையாடப்பட்டபோது அங்குள்ள 12 பூத்துக்கள் மற்றும் அலுவலகத்தில் இருந்த ரூ.18 லட்சம் மாயமாகி இருப்பதாக சுங்கச்சாவடி பொறுப்பாளர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
 

இது தொடர்பாக கம்ப்யூட்டரில் பதிவான கணக்கு விவரத்தை வைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் சுங்கச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பணம் கொள்ளைப்போனதா? என்றும் விசாரித்து வருகிறார்கள்.

 

ramadoss


 

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சட்டத்தை மதிக்காமல் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. இருந்தாலும் கூட, எதிரி நாட்டு இலக்குகளுக்கு  இணையாக சுங்கச்சாவடிகள் கோபத்தை சம்பாதித்து வைத்துள்ளன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.
 

சுங்கச்சாவடியை கடப்பதற்கு முன்பாகவும், சுங்கச்சாவடியை கடந்த பிறகும் ஒரு வாகன ஓட்டியின்  ரத்த அழுத்தத்தை அளவிட்டு பார்த்தால் இரண்டுக்கும் இடையே மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பார்க்க முடியும். ஒரு பக்கம் கட்டணச் சுரண்டல்களில் ஈடுபடும் சுங்கச்சாவடிகள் மறுபுறம் வாகன ஓட்டிகளை மனதளவில் காயப்படுத்தும் இடங்களாக மாறி வருகின்றன. அதன் விளைவு தான் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி ஓட்டுனர்களாலும், பயணிகளாலும் நொறுக்கப்பட்டுள்ளது.


 

நீண்டகாலமாகவே சுங்கச்சாவடி பணியாளர்கள் மீது ஓட்டுனர்களுக்கும், பொது மக்களுக்கும் கோபம் இருந்து வந்தது. பரனுரில் நடந்த இந்த சம்பவம் பெரும் தீயாக மாறி சுங்கச்சாவடியை சூறையாடும் அளவுக்கு போயிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு சுங்கச்சாவடி பணியாளர்களின் பொறுப்பற்ற செயலும், சுங்கக்கட்டணக் கொள்ளையும் தான் முக்கிய காரணமாகும்.


தமிழகத்தின் நெரிசல் மிக்க சுங்கச்சாவடிகளில் பரனூர் சுங்கச்சாவடி முதன்மையானதாகும். ஒவ்வொரு நாளும் இந்தச் சுங்கச்சாவடியை இரு மார்க்கங்களிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. அவற்றில் பல வாகனங்களிடம் ரசீது கொடுக்காமல் கட்டணம் வசூலித்தல், வாகன ஓட்டிகளை மிரட்டுதல் உள்ளிட்ட செயல்களில் சுங்கச்சாவடி பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களின் இந்த அணுகுமுறை தான் சுங்கச்சாவடிகள் பதற்றம் மிகுந்தவையாக திகழ காரணமாகும்.


 

மற்றொருபக்கம் சுங்கச்சாவடிகள் சுரண்டல் மையங்களாக திகழ்கின்றன.  பரனூருக்கும்,  திண்டிவனம்  ஆத்தூருக்கும் இடையிலான 4 வழிச்சாலை அமைக்க 2005-ஆம் ஆண்டில் ரூ.536 கோடி மட்டுமே செலவானது. அதற்கு பிந்தைய 15 ஆண்டுகளில் இந்த சுங்கச்சாவடிகளில் மட்டும் ரூ.2,000 கோடிக்கும் கூடுதலாக சுங்கவரி வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான 13 ஆண்டுகள்  ஆறு மாத காலத்தில் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் ரூ.1098 கோடி மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, செலவுக்கணக்குகளும் உயர்த்திக் காட்டப்பட்டுள்ள நிலையில், இந்த நெடுஞ்சாலையில்  முதலீடு ஏற்கனவே எடுக்கப்பட்ட பிறகும், இன்னும் 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக சுங்கக்கட்டணம்  வசூலிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை விட மோசமான சுரண்டல் எதுவும் இருக்க முடியாது.
 

அதுமட்டுமின்றி, சுங்கக்கட்டணங்கள் ஆண்டுதோறும் 15 முதல் 20% வரை உயர்த்தப்படுகின்றன.  ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சியும், பண வீக்கமும் 5 முதல் 7 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது. தனிநபர்களின் ஊதிய உயர்வு 5 முதல் 8 விழுக்காட்டுக்குள் தான் உள்ளது. ஆனால், சுங்கக் கட்டணம் மட்டும் ஆண்டுக்கு 20% வரை உயர்த்தப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது ஆகும். இதுபோன்ற வெறுப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தான் சுங்கச்சாவடி தாக்குதலில் முடிகின்றன.
 

பரனூர் சுங்கச்சாவடி மட்டும் தான் என்றல்ல. அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடியிலும் நேற்று சுங்கச்சாவடி ஊழியர்களால்  பயணிகள் தாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 45 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு சுங்கச்சாவடியில் ஒரு ஓட்டுனர் தாக்கப்படுவது வாடிக்கையாக ஒன்றாகிவிட்டது.  இதேநிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் சுங்கச்சாவடிகள் அனைத்தும் போர்க்களமாகிவிடும்.
 

இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு முழுமையாக முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மற்ற சுங்கச்சாவடிகளிலும் அளவுக்கு அதிகமான சுங்கக்கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். அதற்கெல்லாம் மேலாக வாகன ஓட்டிகளிடம் நட்பாக நடந்து கொள்வது என்பது குறித்து சுங்கச்சாவடிகளின் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கவும் மத்திய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 

seeman


 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், சுங்கச்சாவடி எனும் பெயரில் எவ்வித கணக்கும் வழக்கும் இல்லாமல் பகல் கொள்ளையடிக்கும் இந்தக் கட்டமைப்பையே முற்றாக எதிர்க்கிறோம். அதனை மூடக்கோரிப் போராடிக் கொண்டிருக்கிறோம். இருந்தபோதிலும், அதனை மத்திய, மாநில அரசுகள் பொருட்படுத்தவில்லை.
 

சுங்கச்சாவடி அமைப்பே வேண்டாம் என்று நாம் போராடிக் கொண்டிருக்கிற சூழலில் சுங்கச்சாவடி ஊழியர்களாக வடநாட்டவர்களைத் திட்டமிட்டு நியமித்து அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளிடம் வாக்குவாதம் செய்வது அவர்களை தாக்குவது எனத் தொடர்ச்சியாக நடைபெறும் செயல்கள் தமிழர்களின் தன்மானத்தை உரசிப் பார்ப்பதாகும்.
 

செங்கல்பட்டு சுங்கச்சாவடியிலும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தமிழக அரசுப் பேருந்து ஊழியர்களைத் தாக்கியிருக்கிறார்கள். தமிழகத்திற்குப் பிழைப்பிற்கு வந்தவர்கள் தமிழக மண்ணின் மக்களைத் தாக்குகிறார்களென்றால், இதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமைதியாகக் கடந்து செல்ல முடியாது.
 

முதற்கட்டமாகச் சுங்கச்சாவடி‌ பணிகளுக்காக வந்துள்ள வடமாநிலத்தவர்களை உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் எனவும், தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இது தொடருமேயானால், செங்கல்பட்டில் நடந்ததைப்போல் மக்கள் புரட்சி மூலம் சுங்கச்சாவடிகள் யாவும் மூடப்படும் என எச்சரிக்கிறேன் என கூறியுள்ளார் சீமான்.

 

velmurugan tvk


 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளும் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் விருப்பம். வாகன ஓட்டிகள் அனைவருக்கும் சுங்கச்சாவடிகள் இடைஞ்சலாகவும், மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
 

அதற்கு காரணம் ஒவ்வொரு வாகனத்தையும் வாங்குகிறபோது, அந்த வாகனம் ஆயுள் முழுவதும் அந்த சாலையில் பயணிப்பதற்கான கட்டணத்தை அரசுகள் எங்களிடத்தில் பெற்று விடுகிறார்கள். மீண்டும் ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம் என்கிற கேள்வியை ஒவ்வொரு வாகன உரிமையாளர்களும் வைக்கின்றனர். இதற்கு ஒரு தீர்வு என்று சொன்னால் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். அது ஒன்றுதான் இதுபோன்ற சண்டை சச்சரவுகள் வராமல் பாதுகாக்கும் என்றார்.
 

இதேபோல் பலரும் அளவுக்கு அதிகமான கட்டணங்களை வசூலிக்கும் சுங்கச்சாவடிகளை முறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். வாகன ஓட்டிகளோ சுங்கச்சாவடிகளே இருக்கக் கூடாது என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். 

 

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.