Skip to main content

காவிரி அரசியல்; ஆளும் கட்சிகளின் சவால்! 

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Cauvery issue that challenges the ruling parties

 

இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் நதிநீர் பிரச்சனை கூட இங்கு தீர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் காவிரி நதிநீர் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. பல வருடங்களாகத் தொடர்ந்து வரும் இந்தப் பிரச்சனையில் இரு மாநிலங்களிலும் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. எல்லாரும் இந்தியர்கள் தான் என்று வெளியில் நாம் சொல்லிக்கொள்கிறோம் ஆனால் எதார்த்தம் வேறாக இருக்கிறது. காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதையும், தமிழகத்தில் கர்நாடகாவினர் தாக்கப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா. 

 

தமிழகம், கர்நாடகா இடையே இருக்கும் காவிரி பிரச்சனையை பேசி தீர்க்க முடியாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது, அதன்பிறகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடந்த 1990 ஆம் ஆண்டு மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. பல்வேறு விவாதங்களுக்கு பிறகு நடுவர் மன்றம் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 205 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. நடுவர் மன்றம் தீர்ப்பளித்தாலும் கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தது. இதையடுத்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகால விசாரணைக்கு பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில், தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீரை மாதாந்திர அடிப்படையில் திறந்துவிட வேண்டும்; மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க வேண்டும் எனத் உத்தரவிட்டிருந்தது. 

 

2017 ஆம் ஆண்டு மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் வழங்கிய 192 டிஎம்சி தண்ணீர் அளவிலும் 14.75 டிஎம்சி யை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இந்த தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை ஆணையத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவுப்படியோ, நடுவர் மன்றத்தின் உத்தரவுப்படியோ தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட்டதில்லை. இதற்காக பல போராட்டங்கள் பேச்சுவார்த்தைகள், அழுத்தங்கள் என என்ன நடந்தாலும் கர்நாடக அரசு மறுப்பு நிலையிலேயே உள்ளது.

 

Cauvery issue that challenges the ruling parties

 

6 வாரத்திற்குள் அமைக்கப்பட்டிருக்க வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையம், 2018 ஆம் அண்டு அமைக்கப்பட்டது. அதன்பிறகு காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை வரும்போது தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை நாடுவதும், அவர்கள் நமக்கு குறிப்பிட்ட தண்ணீரை தர உத்தரவிடுவதும், அதனை கர்நாடகா மதிக்காமல் இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது. 

 

இப்படியான சூழ்நிலையில்தான் கர்நாடக அரசு ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நீரை திறக்க உத்தரவிட வேண்டியும், செப்டம்பர் மாதம்  திறந்துவிட வேண்டிய 37.76 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் மனுதாக்கல் செய்தது. இருமாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என செப்டம்பர் 18 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், பருவ மழை பொய்த்து போனதால் கர்நாடக மாநிலத்தில் வறட்சி பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கரநாடக அரசு உடனே அமல்படுத்த வேண்டும்; தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி கடந்த 23 ஆம் தேதியிலிருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டு வருகிறது. 

 

தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்ட 23 ஆம் தேதியில் இருந்து கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் தற்போது திறக்கும் தண்ணீரே பற்றாக்குறை தான் என்று தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  கர்நாடகா தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக திமுகவினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்படி இருக்கையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைமையிடம் பேசி கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்துவிட முயற்சி செய்யலாமே என்றும் சிலர் பேசுகின்றனர்.

 

Cauvery issue that challenges the ruling parties

 

காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில், கர்நாடகாவில் தண்ணீர் திறக்க கூடாது என்று உறுதியாக காங்கிரஸ், பா.ஜ.க. உள்பட அனைத்து கட்சி கூட்டங்கள் நடத்தி தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தண்ணீர் பிரச்சனையில் அரசியலாளர்களுடன், கர்நாடகா சினிமா துறையும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் போக கூடாது என்று குரல் கொடுத்து வருகிறது. நேற்று கர்நாடக மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து திதி கொடுத்து போராட்டம் செய்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு மாநிலத்தின் முதல்வரை இப்படி அவமதிக்கலாமா என்று சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். அதேசமயத்தில், திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி திதி கொடுத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளனர். 

 

 

Cauvery issue that challenges the ruling parties

 

காவிரி பிரச்சனையை வெறும் அரசியலில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தவில்லை; சினிமாவிலும் அதன் பிடி நீண்டிருக்கிறது. காவிரி பிரச்சனைக்கு எப்படி கர்நாடக திரைப்பிரபலங்கள் குரல் கொடுத்திருக்கிறார்களோ, அதேபோல தமிழக திரைப்பிரபலங்களும் குரல் கொடுத்திருக்கிறார்கள். அதன் விளைவாக அரசியல் கட்சி தலைவர்களின் உருவ பொம்மைகளுடன் தமிழ் திரைப்பிரலங்களின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டு அவர்கள் நடிக்கும் படங்களை திரையிடக் கூடாது என்று போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் காவிரி விவகாரம் குறித்து கர்நாடக அரசியல் கட்சி தலைவர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டிருக்கிறதே தவிர, எந்த கர்நாடக திரை பிரபலங்களின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டு அவர்களின் படங்கள் திரையிடக் கூடாது என்று தமிழகத்தில் இதுவரை எந்த குரலும் எழவில்லை என்று சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

 

Cauvery issue that challenges the ruling parties

 

காவிரியில் தண்ணீரை திறந்தால் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும் என்றும், அதே சமயம் காவிரியில் தண்ணீர் வாங்கி தரவில்லை என்றால் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும் என தொடர்ந்து அரசியல் செய்யப்பட்டு வருகிறது.

 

 

Next Story

2000-க்கும் மேல் ஆபாச வீடியோக்கள்? பென் டிரைவ் முழுவதும் பெண்கள்; சிக்கிய பாஜக கூட்டணி வேட்பாளர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Controversial BJP alliance candidate and devegowda grandson for Over 2000 videos?

கர்நாடகா மாநிலத்தில், நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாஜக 25 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா அவரது மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி ஆகியோரைத் தொடர்ந்து தேவகவுடா பேரன்கள் நிகில் குமாரசாமி, பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோரும் தீவிர அரசியலில் உள்ளனர். இவர்களில், ஹாசன் தொகுதியில் எம்.பியாக உள்ள பிரஜ்வால் ரேவண்ணா, இந்த முறை பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்டார். இவர், தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணாவின் மூத்த மகனும் ஆவார். 

இதனால், இவர் போட்டியிடும் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் தீவிர பரப்புரை நடைபெற்று முதற்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. ஆனால், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 300-க்கும் அதிகமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் ஹாசன் தொகுதி முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. அதுவும், ஹாசன் தொகுதி வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் அத்தொகுதி முழுவதும் வாட்ஸ் அப்களில் வலம் வந்தன. இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், அரசுத் துறையைச் சேர்ந்த சில பெண் அதிகாரிகளும் ஆபாச வீடியோவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, சமூக ஊடகங்களிலும் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ பரவ இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனிடையே, அம்மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி, அந்த வீடியோ தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் எக்ஸ் பக்கத்தில், ‘பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த வீடியோ கிளிப்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. கர்நாடக மாநில மகளிர் ஆணையம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கர்நாடகவின் ஹோலநரசிப்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவின் கீழ் பிரஜ்வல் ரேவண்ணாவின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஜே.டி.எஸ் கட்சியின் ஹாசன் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது என கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. ஆபாச வீடியோ விவகாரம் மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெங்களூரில் இருந்து ஜெர்மனுக்கு தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த கையோடு பிரஜ்வல் ரேவண்ணா புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆதரவாளர்கள் அந்த ஆபாச வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டது என கூறி வருகின்றனர். பதிலுக்கு, பிரஜ்வல் ரேவண்ணாவும் தனது புகழைக் கெடுக்கும் நோக்கில் ஆபாச வீடியோக்கள் பரப்பப்படுவதாக புகார் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Controversial BJP alliance candidate and devegowda grandson for Over 2000 videos?

ஆனால், பாஜக தரப்பு பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறிவருவது சந்தேகத்தை கிளப்புவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வேண்டும் என போராட்டமும் நடைபெற்று வருகிறது. முன்னதாக பென் டிரைவ் மூலமே பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச படம் பரப்பப் பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. ஆனால், விரிவான விசாரணைக்கு பிறகே முழுப் பின்னணி தெரிய வரும். அந்த பென் டிரைவில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்னும் வட கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் முடியாத சூழலில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களும், கூட்டணியில் உள்ளவர்களும் ஆபாச வீடியோக்களில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.

Next Story

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய அமலாக்கத்துறை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கிடையே பலமுறை செந்தில் பாலாஜிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இத்தகைய சூழலில் மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 1 ஆம் தேதி (01.04.2024) உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக  அமலாக்கத்துறை சார்பில் நேற்று (28.04.2024) இரவு தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இதனையடுத்து செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடுகையில், “வழக்கில் விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது. தனிநபர்களுக்குள் நடந்த கொடுக்கல், வாங்கல் விவகாரத்தை நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மோசடியாக கட்டமைக்கின்றனர்” என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. முன்னதாக அமலாக்கத்துறை மிகத் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு மே 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.