Skip to main content

"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்!

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 1000-த்திற்கும் மேலான அப்பாவி மனிதர்கள் பத்தாண்டு காலமாக பொள்ளாச்சி-வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குள் வரும் காளியப்ப கவுண்டன்புதூர் சாலை, பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகம், கோவை கலெக்டர் அலுவலகம் என ஏக்கத்தோடு எங்கும் திரண்டு நிற்கிறார்கள்.

காளியப்ப கவுண்டன்புதூர் மக்களில் ஒருவராய் போராடிக் கொண்டிருக்கும் 70 வயதான மாரியப்பனிடம் "என்ன காரியத்திற்காக உங்கள் போராட்டம்?' என கேட்டோம். "இந்த ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களே அதிகம் இருக்கறாங்க சாமீ. சுமார் நாப்பது வருஷங்களுக்கு முன்னால ஆதி திராவிடர் நலத்துறை சார்பா தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடியிருப்பு மனைப்பகுதி குடுத்தாங்க. அதோடு சுமார் 15 சென்ட் நிலத்தை பொதுப் பயன்பாட்டிற்கு ஒதுக்கினாங்க.

 

politics



இங்குள்ள ஆதிக்க சாதிக்காரங்க 1990-ல எங்ககிட்ட வந்து "ஊர் பொதுக்கோவில்கள் புதுப்பிக்கப்படவிருக்கு. விநாயகர் நல்லாயன் கோவில்களுக்கு இடையில் இருக்கற புறம்போக்கு நிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் குடும்பமா குடியிருக்கறாங்க. குடமுழுக்கு நேரத்துல விழா நடத்த போதிய இடமில்லை. அதுனால அந்த கூலித்தொழிலாளர்கள் குடும்பங்களை உங்க சமுதாய மக்களுக்கு சொந்தமாய் இருக்கும் இந்த 15 சென்ட் நிலத்துல குடி வைக்கலாம்னு இருக்கறோம். அதுக்கு பதிலா உங்க பொதுப்பயன்பாட்டிற்கு சென்னியாண்டவர் கோவிலுக்கு வடபுறத்தில் உள்ள நிலத்தில் சமுதாய நலக் கூடம் கட்டிக்கோங்க' என ஊர் பெரி யவர்கள் கிருஷ்ணசாமி கவுண்டர், பொன்னுச்சாமி கவுண்டர், வரதராஜ் கவுண்டர் உள்ளிட்டவர்கள் சொல்லி வாக்குறுதியும் கொடுத்தாங்க.

 

incident



அதுனால எங்க சமுதாயத்திற்கு சொந்தமான அந்த 15 சென்ட் நிலத்தை கொடுத்துட்டோம். அவங்களும் அவங்களை குடி வச்சுட்டாங்க. அதுக்குப் பின்னால வாக்குறுதி கொடுத்த ஊர் பெரியவர்கள் சென்னியாண்டவர் கோவிலுக்கு பக்கத்துல இருக்கற நிலத்தை கொடுத்துரலாம்னு பேசுவதை அந்த சமுதாய மக்கள் ஏத்துக்கலை. வருஷங்கள் ஓடிக்கொண்டேயிருக்க... ஒரு தலைக்கட்டு ஆட்கள் இறந்தே போயிட்டாங்க. ஊர்ப் பெரியவர்கள் கிருஷ்ணசாமி, பொன்னுச்சாமி கவுண்டர்களும் இறந்தே போயிட் டாங்க. வரதராஜ் கவுண்டர் மட்டும் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்தணும்னு அவுங்க சமுதாய மக்கள்கிட்ட இப்பவும் பேசிக்கிட்டு தான் இருக்கறாரு.


ஆனா அந்த மக்களோ... "அது சென்னியாண்டவர் கோவிலுக்கு சொந்தமான இடம்'னு சொல்றாங்க. அது மிகப்பெரிய பொய்ங்க. எங்க சாதி மக்களுக்கு காதுகுத்து, கல்யாணங் காட்சின்னா எங்க சாமீ நடத்துறது? பொண்ணுக பெரியமனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது? அன்னாடங்காய்ச்சிக நாங்க எங்க சாமீ போறது? இப்ப நாங்க ரோட்டுலதான் நல்ல காரியங்களை நடத்திக்குறோம்'' என்கிறார் ஒருவித ஏக்கத்தோடு.

ஊர் பிரச்சனைகளுக்கு முன்னின்று போராடும் காசு.நாகராசன், பிரபாகரன் உள்ளிட்டவர்களிடம் பேசினோம். "சார்... கோவிலுக்கு பக்கத்துல ஊர்ப் பெரியவர்கள் கொடுக்கறதா சொன்ன நிலம் க.ச.எண்: (1052/20) நத்தம் புறம்போக்கு நிலம்தான். கோவிலுக்கு சொந்தமான இடம் அல்ல. இந்த நிலத்தை இந்த மக்களுக்கு சமுதாயநலக் கூடம் கட்ட கொடுக்க வேணும்னு எங்கள் வால்பாறைத் தொகுதி எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசுவிடம் சொன்னோம். அவர் ஆதி திராவிட நலத்துறையின் தனி வட்டாட்சியரால் புலத்தணிக்கை செய்ததில் நத்தம் வீதின்னு உறுதியானது.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் "ஆதி திராவிடர் நிலம்' என வகைப்பாடு மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் சொல்லி சமூதாயக்கூடம் கட்டித்தரச் சொல்லிக் கேட்டோம். அவரும் சட்டமன்றத்திலேயே "காளியப்ப கவுண்டன் புதூர் மக்களுக்கு சமுதாயநலக்கூடம் கட்ட 55 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது' என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கச் செய்தார். ஜி.ஓ. பாஸாகி நிதியும் வந்துருச்சு. ஆனா சமுதாயநலக் கூடம் கட்ட இடத்தை கொடுக்க முடியாதுன்னு இங்கயிருந்து கேரளாவுல செட்டிலாகிவிட்ட காளீஸ்வரன்ங்கற கேரளா காங்கிரஸ்காரரை வச்சு "சமுதாயக்கூடம் கட்ட நிலத்தை கொடுக்க மாட்டோம்'னு ஹைகோர்ட்ல கேஸ் போட வச்சிருக்கறது யார் தெரியுங்களா? அ.தி.மு.க.வின் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தின் மேற்கு பகுதி ஒன்றிய செயலாளராய் இருக்கும் சக்திவேல்தான். அந்த காளீஸ்வரன், இந்த சக்திவேலுவுக்கு மச்சான் உறவு முறை. அதோடு சக்திவேலு பொள்ளாச்சி ஜெயராமனின் ஆதரவாளர். அ.தி.மு.க. அரசாங்கம் கொண்டுவந்த திட்டத்தையே முடக்கறது எப்படி இருக்குதுன்னு பாருங்க?


இப்ப இந்த இடம் கோவில் நிலம்னு சொல்லிட்டு திரியறதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. அதுல ஒண்ணு சாதி. இந்த சென்னியாண்டவர் கோவிலை அடுத்தே இந்த நிலம் இருப்பதால், அங்கே சமுதாயநலக் கூடம் கட்டினால்... இந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அந்த கோவில் வழியேதான் வருவார்கள். அப்படி வந்தால் தீட்டுப் பட்டுவிடுமாம். அதுபோக கோவிலுக்கு எதிர்த்தாப்ல உள்ள ஆத்துக் கரையோரம் உள்ள ஒரு கோவில் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தின் குலதெய்வக் கோவில். அவுங்களும் இதுக்கு வேண்டியே இந்த மக்களுக்கு இடத்தை தர எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க. அவங்களுக்கு இந்த விசயத்துல பொள்ளாச்சி ஜெயராமன் உதவியா இருக்கறாரு. இதன்மூலமா வேலுமணி இமேஜை டேமேஜ் பண்ணுறதுன்னு உள்கட்சி பாலிடிக்ஸும் ஓடுது. இவர்களின் சாதி வெறி, அரசியல் தந்திரத்தால இந்த ஊர் மக்களான நாங்கள் எந்த வசதியும் கிடைக்காம அல்லல் படறோம்'' என்கிறார்கள் கோபமாய்.

பொள்ளாச்சி காளியப்பகவுண்டன் புதூர் பெண்கள் புவனேஸ்வரி, மல்லிகா, சரஸ்வதி, தனலட்சுமி, சாந்தி, மகேஸ்வரி உள்ளிட்ட பெண்கள்... "இந்தக் கிராமமே ரெட்டலை கிராமங்க தம்பி. இந்த பத்து வருஷமா எங்க ஊருக்கு ஒரு நல்லது நடக்க இருக்கறதை ரெட்டலை சக்திவேலே தடுக்கறதை தாங்க முடியாமத்தான் வந்த எம்.பி. தேர்தல்ல எங்க மக்க எல்லாமே சேர்ந்து உதயசூரியனுக்கு ஓட்டுப் போட்டோம்'' என்கிறார்கள் உணர்ச்சியாய். ஊர்ப் பெரியவரான முதியவர் வரதராஜிடம் பேசினோம். "முப்பது வருஷங்களுக்கு முன்னால இந்த அப்பாவி மக்களுக்கு செய்துகொடுத்த சத்தியத்தை நிறைவேத்த முடியாமப் போயிருமோங்கற பயம் குண்டூசியால குத்துற மாதிரி நெஞ்சை குத்திக்கிட்டே இருக்குது தம்பி. இந்த மக்களை அழைச்சுட்டுப்போயி கலெக்டர் கிட்ட மனு கொடுத்துட்டு இருக்கேன். விடிவுதான் வரமாட்டேங்குது. இந்த உசுரு என் உடம்பவிட்டுப் போறதுக்குள்ள சென்னியாண்டவர் கோவிலை ஒட்டி இருக்கற அந்த இடத்துல சமுதாயநலக் கூடம் கட்டுவதை பார்ப்பேனுங்க தம்பி'' என்கிறார்.

இதுபற்றி அ.தி.மு.க. ஒ.செ. சக்திவேலிடம் கேட்டதற்கு...

"எனக்கும், அந்த சமுதாயநலக் கூடத்திற்கும் சம்பந்தமில்லை. காளீஸ்வரன்தான் கோர்ட்ல கேஸ் போட்ருக்காப்டியா? அவருகிட்ட வேணா நான் கேட்டு சொல்லுறேன். எனக்கு எதிரா போராட்டம் பண்றாங்களா? எனக்கு அது தெரியாது. நான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்துல இருக்கேன்... அப்புறமா வந்து பேசிக்கலாம்'' என முடித்துக்கொண்டார்.

"தமிழக அரசு 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், சமுதாயநலக் கூடத்தை கட்ட விடாமல் தடுக்கும் ஆளுங்கட்சி ஒ.செ. மீது நடவடிக்கை எடுங்கள். தடைகளை தடுத்து சமுதாயநலக் கூடத்தை கட்டித் தரவேண்டும்...' போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 19-ந் தேதி பொள்ளாச்சியிலிருந்து உள்ளாட்சித்துறை அமைச்சர் இல்லம்வரை நடைபயணம் என கா.கவுண்டன்புதூர் மக்கள் அறிவித்திருப்பது எதிர் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கலெக்டர் ராஜாமணி தலையிட்டு சமாதானம் பேசினாலும் மக்களின் கோபமும் உரிமைக்குரலும் தணியவில்லை.

 

 

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.