Skip to main content

பா.ஜ.க.வின் அஜெண்டா... ரகசிய பேரம்? ராகுல் அதிர்ச்சி!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

dddd

 

சட்டமன்ற தேர்தலில் ‘மிஷன் 200' என்கிற இலக்கை அடைவதற்கான திட்டத்தில் செயலாற்றி வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். 200 தொகுதிகளில் உதயசூரியன் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் டார்கெட். இதனைப் பக்குவமாக கூட்டணி கட்சிகளிடமும் தெரிவித்து வருகிறது அறிவாலயம்.

 

இதில் காங்கிரசுக்கு மட்டும் இரட்டை இலக்க அளவில் சீட் என்றாலும், தி.மு.க. சொல்லும் எண்ணிக்கையை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸ் இல்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டை பார்வையிட மதுரைக்கு வந்த ராகுல்காந்தி, சீட் பற்றி தி.மு.க. தலைமையிடம் பேசி முடிக்கலாம் என்கிற ப்ளானும் நிறைவேறாததால் அவர் அப்செட் என்கிறார்கள்.

 

ராகுல் காந்திக்கு நெருக்கமான தமிழக எம்.பி. ஒருவர், “தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுக்க அதி.மு.க. - பா.ஜ.க. கட்சிகள் ஏகப்பட்ட திட்டங்களைப் போட்டுள்ளதாகவும், அதை முறியடிக்க வேண்டுமானால் அதிகபட்சமாக 190-200 இடங்களில் போட்டியிட தி.மு.க. தீர்மானித்திருப்பதால் காங்கிரசுக்கு 15 இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் தி.மு.க. தரப்பிலிருந்து ராகுல் காந்திக்கு தெரியப்படுத்தப்பட்டுவிட்டது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை. 2011-ல் 63 சீட்டுகளும், 2016-ல் 41 சீட்டுகளும் தி.மு.க. கூட்டணியில் பெற்ற காங்கிரஸ், அதே எண்ணிக்கையைக் கேட்டு அடம்பிடிக்கவில்லை. ஆனால், 30 சீட்டுகளுக்கு ஒப்புக்கொள்ள முடிவு செய்திருந்தார் ராகுல். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் மட்டும் கூட்டணி; புதுச்சேரிக்கு வேண்டாம் அல்லது தமிழகம் போல புதுச்சேரியிலும் தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி எனவும் தி.மு.க. தெரிவித்ததில் ராகுலுக்கு கூடுதல் அதிர்ச்சி.

 

இப்படிப்பட்ட சூழலில்தான், ஜல்லிக்கட்டைப் பார்ப்பதற்காக தனி விமானத்தில் மதுரைக்கு வந்த ராகுல்காந்தி, மதுரை தாஜ் ஹோட்டலில் மு.க.ஸ்டாலினை சந்திக்க நினைத்தார். அதுகுறித்து தி.மு.க. தலைமைக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இந்த விசயங்கள் எதுவுமே தமிழக காங்கிரசுக்குத் தெரியாது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு ராகுல் வருவதே முதல்நாள்தான் கே.எஸ்.அழகிரிக்கு தெரியப்படுத்தப்பட்டது.

 

மதுரையில் ஜல்லிக்கட்டைப் பார்க்க ராகுல் வந்தபோது, அவர் அருகில் இருந்தார் உதயநிதி. சாதாரணமாக பேசிக்கொண்டனர். சீட் பற்றி ஸ்டாலினுக்கு பதில் உதயநிதி பேசுவார் என சொல்லப்பட்டதால் அப்செட்டாகி, தாஜ் ஹோட்டல் விசிட்டை ரத்து செய்து, பொது மக்களுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு டெல்லிக்குப் பறந்துவிட்டார் ராகுல். அவரை ஸ்டாலின் சந்தித்திருந்தால், சீட் விஷயத்தைத் தாண்டி கூட்டணியின் கௌரவம் வெளிப்பட்டிருக்கும். தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்ற வேண்டும் என்கிற பா.ஜ.க.வின் அஜெண்டாவுக்கு தி.மு.க. சம்மதிக்கிறதோ என்கிற சந்தேகம் இருக்கிறது.

 

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களைக் காலி செய்து வரும் மோடியும் அமித்ஷாவும், புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க.விடம் ரகசிய பேரங்களை நடத்தியுள்ளதாகவும், அதனால்தான் அங்கே கூட்டணி இல்லை என்று சொல்வதாகவும் ராகுல், சோனியா உள்பட மூத்த தலைவர்களுக்கு சந்தேகம் இருக்கிறது. புதுச்சேரியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி இல்லையெனில், அது தமிழகத்திலும் கூட்டணி முறிவுக்கு வழி வகுக்கும்.

 

dddd

 

மதுரையிலிருந்து டெல்லி திரும்பியதும் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவின் அரசியல் ஆலோசகர் முகுல் வாஸ்னிக், ஏ.கே.அந்தோணி, வேணுகோபால் ஆகியோரிடம் விவாதித்துள்ளார் ராகுல்காந்தி. அப்போது, கூட்டணியிலிருந்து காங்கிரசே விலகிச் செல்ல வேண்டும்கிற சூட்சமத்தை தி.மு.க. கையாள்கிறது. அது அவர்களுக்குத்தான் நட்டம். புதுச்சேரியை நாம் விட்டுக்கொடுத்தால் தமிழகத்திலும் கூட்டணியை மறுபரிசீலனை செய்யலாம் என மூத்த தலைவர்கள் சொல்லியுள்ளனர். ராகுலும் அந்த யோசனையில் இருப்பதால் சோனியாவின் முடிவுக்காக காத்திருக்கின்றனர்'' என்று விரிவாக சுட்டிக்காட்டினார் காங்கிரஸ் எம்.பி.!

 

தி.மு.க. தரப்பில் நாம் விசாரித்தபோது, "காங்கிரஸை ஸ்டாலின் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், காங்கிரசுக்கு மட்டுமல்ல, தோழமைக் கட்சிகளுக்கு அதிக இடங்களில் சீட்டுகள் ஒதுக்குவது அதி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்குத்தான் சாதகமாகும். இதைத் தடுக்க, அந்த கூட்டணிக்கு எதிராக தி.மு.க. போட்டியிடுவதுதான் புத்திசாலித்தனம். காங்கிரஸ் அதிக எண்ணிக்கையில் போட்டியிட்டு சொற்ப எண்ணிக்கையில் ஜெயிப்பதை விட, குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட்டு அத்தனை சீட்டுகளும் ஜெயிப்பதுதானே லாபம்? புதுச்சேரியைப் பொறுத்தவரை, தனித்துப் போட்டியிடலாம் என அங்குள்ள தி.மு.க. சீனியர்கள் வலியுறுத்துகிறார்கள்.

 

தற்போதைய சூழலில், முதல்வர் நாராயணசாமியை மீண்டும் முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் நிச்சயம் பா.ஜ.க. - அதி.மு.க. கூட்டணி ஆட்சியைப் பிடித்துவிடும். அமைச்சர் நமச்சிவாயம் உட்பட 5-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவ தயாராகி வருகிறார்கள். பா.ஜ.க.வைத் தடுக்கும் வியூகத்தில்தான் தி.மு.க. உள்ளது. தி.மு.க.வின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் ஸ்டாலினிடம் இதனைச் சொல்லியுள்ளார். அதி.மு.க. - பா.ஜ.க. தலைவர்கள் போடும் கணக்குகளைக் கவனித்துதான், அதனை முறியடிக்க பல்வேறு வியூகங்களுடன் தோழமைக் கட்சிகளை அணுகுகிறது தி.மு.க.'' என்கின்றனர் தி.மு.க. எம்.பி.க்கள்.

 

புதுச்சேரியில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை உடைப்பதன் மூலம் பல்வேறு மாங்காய்களை அடிக்கத் திட்டமிடும் அமித்ஷா, புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்குள் கொண்டு வரும் அசைன்மெண்டை துவக்கியிருக்கிறார். கடந்த வாரம் டெல்லிக்கு ரகசிய விசிட் அடித்த நமச்சிவாயம், அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டாவை சந்தித்து ஆலோசித்துள்ளார். அவர் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரை ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்கவைத்து, முதல்வர் நாராயணசாமியின் பெரும்பான்மை பலத்தைக் குறைக்க பா.ஜ.க. திட்டமிடுகிறது. புதுச்சேரி காங்கிரஸ் அரசைக் கவிழ்த்து, தேர்தலுக்கு முன் கவர்னர் ஆட்சியைக் கொண்டு வருவதுதான் திட்டம்.

 

புதுச்சேரி மக்கள் தேசிய சிந்தனைக்கே அதிக முக்கியத்துவம் தருவதால் பா.ஜ.க.வுக்கு வெற்றி கிடைக்கும் என அமித்ஷாவிடம் சில சர்வேக்களின் முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. புதுச்சேரிக்கான ஸ்பெஷல் ப்ளான்களும் ரெடியாகி வருகின்றன.

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.