Skip to main content

பா.ஜ.க.வின் அஜெண்டா... ரகசிய பேரம்? ராகுல் அதிர்ச்சி!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

dddd

 

சட்டமன்ற தேர்தலில் ‘மிஷன் 200' என்கிற இலக்கை அடைவதற்கான திட்டத்தில் செயலாற்றி வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். 200 தொகுதிகளில் உதயசூரியன் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் டார்கெட். இதனைப் பக்குவமாக கூட்டணி கட்சிகளிடமும் தெரிவித்து வருகிறது அறிவாலயம்.

 

இதில் காங்கிரசுக்கு மட்டும் இரட்டை இலக்க அளவில் சீட் என்றாலும், தி.மு.க. சொல்லும் எண்ணிக்கையை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸ் இல்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டை பார்வையிட மதுரைக்கு வந்த ராகுல்காந்தி, சீட் பற்றி தி.மு.க. தலைமையிடம் பேசி முடிக்கலாம் என்கிற ப்ளானும் நிறைவேறாததால் அவர் அப்செட் என்கிறார்கள்.

 

ராகுல் காந்திக்கு நெருக்கமான தமிழக எம்.பி. ஒருவர், “தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுக்க அதி.மு.க. - பா.ஜ.க. கட்சிகள் ஏகப்பட்ட திட்டங்களைப் போட்டுள்ளதாகவும், அதை முறியடிக்க வேண்டுமானால் அதிகபட்சமாக 190-200 இடங்களில் போட்டியிட தி.மு.க. தீர்மானித்திருப்பதால் காங்கிரசுக்கு 15 இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் தி.மு.க. தரப்பிலிருந்து ராகுல் காந்திக்கு தெரியப்படுத்தப்பட்டுவிட்டது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை. 2011-ல் 63 சீட்டுகளும், 2016-ல் 41 சீட்டுகளும் தி.மு.க. கூட்டணியில் பெற்ற காங்கிரஸ், அதே எண்ணிக்கையைக் கேட்டு அடம்பிடிக்கவில்லை. ஆனால், 30 சீட்டுகளுக்கு ஒப்புக்கொள்ள முடிவு செய்திருந்தார் ராகுல். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் மட்டும் கூட்டணி; புதுச்சேரிக்கு வேண்டாம் அல்லது தமிழகம் போல புதுச்சேரியிலும் தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி எனவும் தி.மு.க. தெரிவித்ததில் ராகுலுக்கு கூடுதல் அதிர்ச்சி.

 

இப்படிப்பட்ட சூழலில்தான், ஜல்லிக்கட்டைப் பார்ப்பதற்காக தனி விமானத்தில் மதுரைக்கு வந்த ராகுல்காந்தி, மதுரை தாஜ் ஹோட்டலில் மு.க.ஸ்டாலினை சந்திக்க நினைத்தார். அதுகுறித்து தி.மு.க. தலைமைக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இந்த விசயங்கள் எதுவுமே தமிழக காங்கிரசுக்குத் தெரியாது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு ராகுல் வருவதே முதல்நாள்தான் கே.எஸ்.அழகிரிக்கு தெரியப்படுத்தப்பட்டது.

 

மதுரையில் ஜல்லிக்கட்டைப் பார்க்க ராகுல் வந்தபோது, அவர் அருகில் இருந்தார் உதயநிதி. சாதாரணமாக பேசிக்கொண்டனர். சீட் பற்றி ஸ்டாலினுக்கு பதில் உதயநிதி பேசுவார் என சொல்லப்பட்டதால் அப்செட்டாகி, தாஜ் ஹோட்டல் விசிட்டை ரத்து செய்து, பொது மக்களுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு டெல்லிக்குப் பறந்துவிட்டார் ராகுல். அவரை ஸ்டாலின் சந்தித்திருந்தால், சீட் விஷயத்தைத் தாண்டி கூட்டணியின் கௌரவம் வெளிப்பட்டிருக்கும். தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்ற வேண்டும் என்கிற பா.ஜ.க.வின் அஜெண்டாவுக்கு தி.மு.க. சம்மதிக்கிறதோ என்கிற சந்தேகம் இருக்கிறது.

 

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களைக் காலி செய்து வரும் மோடியும் அமித்ஷாவும், புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க.விடம் ரகசிய பேரங்களை நடத்தியுள்ளதாகவும், அதனால்தான் அங்கே கூட்டணி இல்லை என்று சொல்வதாகவும் ராகுல், சோனியா உள்பட மூத்த தலைவர்களுக்கு சந்தேகம் இருக்கிறது. புதுச்சேரியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி இல்லையெனில், அது தமிழகத்திலும் கூட்டணி முறிவுக்கு வழி வகுக்கும்.

 

dddd

 

மதுரையிலிருந்து டெல்லி திரும்பியதும் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவின் அரசியல் ஆலோசகர் முகுல் வாஸ்னிக், ஏ.கே.அந்தோணி, வேணுகோபால் ஆகியோரிடம் விவாதித்துள்ளார் ராகுல்காந்தி. அப்போது, கூட்டணியிலிருந்து காங்கிரசே விலகிச் செல்ல வேண்டும்கிற சூட்சமத்தை தி.மு.க. கையாள்கிறது. அது அவர்களுக்குத்தான் நட்டம். புதுச்சேரியை நாம் விட்டுக்கொடுத்தால் தமிழகத்திலும் கூட்டணியை மறுபரிசீலனை செய்யலாம் என மூத்த தலைவர்கள் சொல்லியுள்ளனர். ராகுலும் அந்த யோசனையில் இருப்பதால் சோனியாவின் முடிவுக்காக காத்திருக்கின்றனர்'' என்று விரிவாக சுட்டிக்காட்டினார் காங்கிரஸ் எம்.பி.!

 

தி.மு.க. தரப்பில் நாம் விசாரித்தபோது, "காங்கிரஸை ஸ்டாலின் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், காங்கிரசுக்கு மட்டுமல்ல, தோழமைக் கட்சிகளுக்கு அதிக இடங்களில் சீட்டுகள் ஒதுக்குவது அதி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்குத்தான் சாதகமாகும். இதைத் தடுக்க, அந்த கூட்டணிக்கு எதிராக தி.மு.க. போட்டியிடுவதுதான் புத்திசாலித்தனம். காங்கிரஸ் அதிக எண்ணிக்கையில் போட்டியிட்டு சொற்ப எண்ணிக்கையில் ஜெயிப்பதை விட, குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட்டு அத்தனை சீட்டுகளும் ஜெயிப்பதுதானே லாபம்? புதுச்சேரியைப் பொறுத்தவரை, தனித்துப் போட்டியிடலாம் என அங்குள்ள தி.மு.க. சீனியர்கள் வலியுறுத்துகிறார்கள்.

 

தற்போதைய சூழலில், முதல்வர் நாராயணசாமியை மீண்டும் முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் நிச்சயம் பா.ஜ.க. - அதி.மு.க. கூட்டணி ஆட்சியைப் பிடித்துவிடும். அமைச்சர் நமச்சிவாயம் உட்பட 5-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவ தயாராகி வருகிறார்கள். பா.ஜ.க.வைத் தடுக்கும் வியூகத்தில்தான் தி.மு.க. உள்ளது. தி.மு.க.வின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் ஸ்டாலினிடம் இதனைச் சொல்லியுள்ளார். அதி.மு.க. - பா.ஜ.க. தலைவர்கள் போடும் கணக்குகளைக் கவனித்துதான், அதனை முறியடிக்க பல்வேறு வியூகங்களுடன் தோழமைக் கட்சிகளை அணுகுகிறது தி.மு.க.'' என்கின்றனர் தி.மு.க. எம்.பி.க்கள்.

 

புதுச்சேரியில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை உடைப்பதன் மூலம் பல்வேறு மாங்காய்களை அடிக்கத் திட்டமிடும் அமித்ஷா, புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்குள் கொண்டு வரும் அசைன்மெண்டை துவக்கியிருக்கிறார். கடந்த வாரம் டெல்லிக்கு ரகசிய விசிட் அடித்த நமச்சிவாயம், அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டாவை சந்தித்து ஆலோசித்துள்ளார். அவர் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரை ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்கவைத்து, முதல்வர் நாராயணசாமியின் பெரும்பான்மை பலத்தைக் குறைக்க பா.ஜ.க. திட்டமிடுகிறது. புதுச்சேரி காங்கிரஸ் அரசைக் கவிழ்த்து, தேர்தலுக்கு முன் கவர்னர் ஆட்சியைக் கொண்டு வருவதுதான் திட்டம்.

 

புதுச்சேரி மக்கள் தேசிய சிந்தனைக்கே அதிக முக்கியத்துவம் தருவதால் பா.ஜ.க.வுக்கு வெற்றி கிடைக்கும் என அமித்ஷாவிடம் சில சர்வேக்களின் முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. புதுச்சேரிக்கான ஸ்பெஷல் ப்ளான்களும் ரெடியாகி வருகின்றன.

 

Next Story

தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Prime Minister Modi praises Tamil Nadu BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் இந்த மக்களவை தேர்தலில் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அ.ம.மு.க. பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

இந்நிலையில் பிரதமர் மோடி நமோ செயலி (NAMO APP) மூலம் ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பாஜகவின் அனைத்துத் தொண்டர்களும் மிக நீண்ட காலமாக நன்றாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். ‘எனது பூத், வலிமையன பூத்’ என்றால் எனது வாக்குச் சாவடி வலிமையானது என்று பொருள். இந்த திட்டம் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களையும் இணைப்பதுடன் ஒருவருக்கொருவரும் கற்றுக்கொள்ள உதவும்.

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் வணக்கத்தோடு பேசத் தொடங்குகிறேன், ஆனால் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு தொண்டர் மற்றொரு தொண்டரை வாழ்த்துகிறார். வணக்கம் என்றவுடன், தொண்டர்களுக்குள் ஒரு உணர்வு வரும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பள்ளி நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், 25, 30 வருடங்கள் கடந்தாலும், சிறியவர், பெரியவர் என்று யாரும்  பாராமல் ஒருவரை ஒருவர்  மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். அதேபோல், இது தேர்தல் பணி தொடர்பான ஒரு திட்டம் என்பதால் நானும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறேன். உங்கள் எல்லோரையும் போல என் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு தொண்டனாகவே உழைத்திருக்கிறேன், அதனால்தான் இன்று நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருவதால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் வந்தபோது தமிழக மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பைப் பார்க்க முடிந்தது, அப்படிப்பட்ட தொண்டர்களைப் பெற்றதை பெருமையாக உணர்ந்தேன். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்மாதிரியாக கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதும், அதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதும் எங்களது உறுதி. பா.ஜ.க.வின் பெண் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

போதைப்பொருட்கள் நம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள் பதுக்கல்களும், அதற்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே நீங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார். 

Next Story

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Congress struggles against the central government

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இத்தகைய சூழலில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கெனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், தற்போது ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 1993-94, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கையில், மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் நடைபெறுவதாக காங்கிரஸ் கங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக இந்திய ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்து வருவது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டு பழைய வருமான வரியை மீண்டும் ஆய்வு செய்து ரூ.1,823 கோடி வரி பாக்கியை கட்டச் சொல்வது விதிமீறல் என காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரூ. 11 கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழைய பான் (P.A.N.) எண்ணை பயன்படுத்தியதற்கு ரூ. 11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை முடக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (30.03.2024) நாடு தழுவிய போராட்டம் நடத்த, அனைத்து மாநில தலைமையகம் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைமையகங்களில் அனைத்து காங்கிரஸ் பிரிவுகளுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.

Congress struggles against the central government

இது குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய ஜனநாயகத்தை முறியடிக்கும் முறையான செயல்பாட்டினை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கும் சட்டவிரோத முயற்சி நடந்து வருகிறது. நேற்று (28.03.2024) ரூ. 1823.08 கோடி ரூபாய் செலுத்துமாறு வருமான வரித்துறையின் தகவல் தொழில்நுட்பத் துறையிடம் இருந்து புதிய நோட்டீஸ் வந்தது. ஏற்கனவே வருமான வரித்துறை காங்கிரசின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 135 கோடி ரூபாயை வலுக்கட்டாயமாக எடுத்துள்ளது.

இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த மோசமான தாக்குதலையும், முக்கியமாக மக்களவைத் தேர்தலுக்கு மத்தியில் கட்சி மீது வரிப்பயங்கரவாதத்தை சுமத்துவதையும் கருத்தில் கொண்டு, அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் நாளை (30.03.2024) அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில மற்றும் மாவட்ட தலைமையகத்தில் மாபெரும் பொது ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.