Skip to main content

வன்முறையாட்டத்தில் பாஜக; யுத்தகளமாகும் திரிபுரா! 

Published on 21/03/2023 | Edited on 28/03/2023

- க.சுப்பிரமணியன்
 

BJP Tripura issue CPIM condemn

 

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடந்து சில வாரங்களுக்கு முன்பு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திரிபுராவில் பாஜகவும், நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியும், மேகாலயாவில் என்.பி.பி. கட்சியும் ஆட்சியை பிடித்தன. திரிபுராவில் பா.ஜ.க. வெற்றிபெற்றதையடுத்து மாநிலம் முழுவதும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தொண்டர்கள், அவர்களது வீடுகள், கடைகள் மீது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழும்பியுள்ளன. கிட்டத்தட்ட மாநிலம் முழுவதும் 668 இடங்களில் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்து நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதலே தொடர்ச்சியாக திரிபுரா முழுவதும் குண்டர்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் அடங்கிய உண்மை கண்டறியும் குழு பிப்ரவரி 10-ஆம் தேதி திரிபுராவுக்குக் கிளம்பியது. இக்குழுவினர் மூன்று குழுக்களாகப் பிரிந்து பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டனர்.

 

இரண்டு நாள் ஆய்வுக்குத் திட்டமிட்டிருந்த நிலையில், பிப்ரவரி 10-ஆம் தேதி மாலை செபாஜிஜாலா மாவட்டம், நேஹல்சந்திரா நகரில் உண்மை கண்டறியும் குழுவே பா.ஜ.க. குண்டர்களால் தாக்கப்பட்டது. இக்குழுவினர் சென்ற வாகனங்கள் சேதமடைந்தன. இதனால் இரண்டு நாள் சுற்றுப்பயணம் இடையிலேயே தடைபட்டது. இதையடுத்து உண்மையறியும் குழுவினர் திரிபுரா ஆளுநர் எஸ்.என்.ஆர்யாவை பிப்ரவரி 11-ஆம் தேதி சந்தித்து, மூன்று பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தனர். அதில், அமைதி திரும்பவும், அரசியல் விரோதத்தை அகற்றவும், மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்களைக் கைதுசெய்யவும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

 

பின்பு பி.ஆர். நடராஜன், பிகாஷ் ரஞ்சன், எளமரம் கரீம், ரஹீம், பினோய் விஸ்வம், காங்கிரஸின் அப்துல் கலீக், ஆர்.ரஞ்சன் ஆகியோரடங்கிய உண்மையறியும் குழு, அகர்தலாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியது. பாராளுமன்றத்தில் இவ்விஷயத்தை எழுப்பி தேசத்தின் கவனத்தை ஈர்ப்போம். திரிபுராவில் சட்டம் ஒழுங்கு குலைந்துவிட்டது எனக் குற்றஞ்சாட்டினர்.

 

சி.பி.ஐ. ராஜ்யசபா உறுப்பினர் விஸ்வம், “நாங்கள் திரிபுராவை அடையும்வரை வன்முறை இத்தனை தீவிரமாக இருந்திருக்கும் என நினைக்கவில்லை. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் திட்டமிட்டு வன்முறையை மேற்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் தாக்கப்பட்டவர்கள் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தொண்டர்கள். பழிவாங்கும் எண்ணத்துடன் தாக்குதலை மேற்கொண்டு சூறையாடியுள்ளனர். பலர் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.

 

வன்முறை டெல்லியிலிருந்து திட்டமிடப்பட்டது. திரிபுராவை வன்முறைக் களமாகவும் பாதுகாப்பற்ற இடமாகவும் மாற்றுவதில் உள்துறை அமைச்சகமும், அதை நடத்துபவருமே பங்கு வகிக்கிறார் என நாங்கள் நம்புகிறோம். பலர் அனைத்தையும் இழந்து நின்றதைப் பார்த்தோம். மோசமாகக் காயமடைந்துள்ளனர். கடைகள், வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்களின் மறுவாழ்வுக்கு முறையான வழிவகைகள் செய்யப்பட வேண்டும்” என்றார்.

 

கரீம், கலீக், ஜிதேந்திர சௌத்ரி, அஜய் குமார் ஆகிய எம்.பி.க்கள் அடங்கிய உண்மையறியும் குழுவே குண்டர்களால் தாக்கப்பட்டதென்றால் நிலவரத்தைப் புரிந்து கொள்ளலாம். அதுவும் போலீஸ் துணைக்கு வரும்போதே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. குழுவுடன் துணைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் கோபால் ராயின் கார் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

 

 

திரிபுரா தாக்குதல்கள் பற்றி கேள்வியெழுப்பிய அஜய்குமார், “திரிபுராவின் சாதாரண மக்களின் மீதான தாக்குதல்களில் போலீசார் ஏன் தொடர்ந்து பார்வையாளர்களாகவே இருக்கிறார்கள்? பிரதமரும், உள்துறை அமைச்சரும் இவ்விஷயம் குறித்து மௌனமாகவே இருப்பது ஏன்?” என்றார். உண்மை கண்டறியும் குழுவின் மீதான தாக்குதலை காவல்துறை ஒப்புக்கொண்டுள்ளது. அதேசமயம், அவர்களது வருகை பற்றி எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்கின்றனர்.

 

திரிபுராவைப் பார்வையிட்ட பின் வங்காளத்தைச் சேர்ந்த சி.பி.ஐ.(எம்) எம்.பி. ரஞ்சன் பட்டாச்சார்யா சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை நோக்கி, “திரிபுரா வந்து உங்கள் ஜனநாயகத்தின் தாயைப் பார்வையிடுங்கள்” எனப் பரிகாசம் செய்துள்ளார்.

 

2018-ல் திரிபுராவில் வெற்றிபெற்றதும் பா.ஜ.க. முதலில் செய்த வேலை பெலோனியா பகுதியில் லெனின் சிலையைத் தகர்த்ததுதான். 2023 தேர்தலிலும் பிரச்சாரத்தின்போதே கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. வெற்றிபெற்ற கையோடு நரவேட்டை ஆடித்தீர்த்திருக்கிறது.

 

சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்தியாவின் ஜனநாயகத்தை லண்டனில் இழிவுபடுத்திவிட்டதாக பாஜக குற்றஞ்சாட்டி, கடுமையான கண்டனங்களை எழுப்பி, நாடாளுமன்றத்தில் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.