Skip to main content

அதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

திரைத்துறையினரை மட்டுமல்ல ஆளும்கட்சியினரையும் மிரள வைத்திருக்கிறது விஜய் தொடர்பான வருமான வரித்துறை ரெய்டு நடவடிக்கை. சினிமா வி.ஐ.பி.க்களோ, அரசியல் வி.ஐ.பி.க்களோ இரண்டு, மூன்று பேர் தனியாக சந்தித்துக் கொண்டாலே, ரெய்டு குறித்த கவலைகளைத்தான் பகிர்ந்துகொள்கிறார்கள்.

டெல்லியில் கோலோச்சும் தமிழக அதிகாரிகளிடம் ரெய்டு குறித்து விவாதித்தபோது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மோடி அரசாங்கத்தை உற்றுக் கவனித்தால், வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் நடத்திய சோதனைகளில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தமிழகம்தான் என்கிற உண்மை புரியும். தேர்தல் வெற்றியை பணத்தின் மூலம் பெறலாம் என்கிற நம்பிக்கையையும் அதன் ருசியையும் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியாளர்களும் கடைப்பிடிக் கின்றனர்.

 

vijay



தேர்தலுக்காக பணத்தை பதுக்கும் அ.தி.மு.க.வின் திட்டத்தை அவ்வப்போது முறியடிக்க வேண்டும் என்பது பா.ஜ.க. தலைமையின் மறைமுக அஜெண்டா. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஆளும்கட்சி தலைமை பதுக்கி வைத்த பணக்குவியல்களை 2018-லேயே வருமான வரித்துறை கணக்கெடுத்திருந்தது. அதில், எடப்பாடியின் நெருங்கிய உறவினர்களும், அவரது நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டர்களும் சிக்கினர். குறிப்பாக, எடப்பாடியின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுஞ்சாலைத் துறையின் காண்ட்ராக்டர் செய்யாதுரை, எடப்பாடியின் உறவினர்களான ஈரோடு ராமலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் நிறுவனங்களிலும் பங்களாக்களிலும் ரெய்டு நடத்தி சுமார் 1,300 கோடி ரொக்கமாகவும் பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றியது வருமானவரித்துறை. நாடாளுமன்றத் தேர்தலுக்காக சேமித்து வைக்கப்பட்ட பணம் என்பதை விசாரணையில் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ரெய்டு சமாச்சாரத்தை சுட்டிக்காட்டியே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தது பா.ஜ.க. இதற்கு பல காரணங்கள் இருந்தன. அது வேறு விசயம்.


தேர்தல் நேர ரெய்டு என்ற விமர்சனம் வராதபடி குறைந்தட்சம் 10 மாதங்கள் முன்பே ரெய்டுகளை நடத்துவது பா.ஜ.க. பாலிசி. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அ.தி.மு.க.வுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியைத் தொடர பா.ஜ.க. விரும்பவில்லை. எம்.பி. தேர்தலில் 25 சீட்டுகளில் நாம் ஜெயிப்போம் என அ.தி.மு.க. கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் கூட்டணி போட்டது பா.ஜ.க. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் மக்களின் முடிவு வேறுமாதிரி இருக்கும் என பா.ஜ.க. தலைமைக்கு உளவுத்துறை நோட் போட்டிருக்கிறது.

 

 

dmk



இதற்கிடையே, அரசியல் கட்சி துவங்குவதை பா.ஜ.க. தலைவர்களிடம் உறுதி கொடுத்திருக்கிறாராம் ரஜினி காந்த். அதேசமயம் அரசியல் என்ட்ரிக்கான வெற்றி வாய்ப்புகளையும் அவர் கவனிக்கிறார். அதற்கேற்ப, ரஜினி தரப்பால் முன்வைக்கப்பட்ட சில திட்டங்களுக்கு டெல்லி ஒப்புக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, தேர்தல் நேரத்தில், ஆட்சியில் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு இருக்கக்கூடாது என்பது முக்கியமானது. அப்படி நடந்தால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க ரஜினி தயங்கமாட்டார் என சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில், ரஜினியுடன் கூட்டணி உருவானால் பணத்தை வைத்து தேர்தலை எதிர்கொள்ள நினைக்கும் ஆளும் கட்சிக்கு முதலில் செக் வைக்க வேண்டும் என திட்டமிடுகிறது பா.ஜ.க. அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த ரெய்டுகள்.


அதாவது, பணப் பரிவர்த்தனைகள் எதுவும் ரொக்கமாக இருக்கக்கூடாது என்பது மோடியின் செயல்திட்டம். ஆனால், தமிழகத்தில் கோடிக்கணக்கான பணம் ரொக்கமாகவே குவிக்கப்பட்டு வருகிறது என வருமானவரித்துறையும் அமலாக்கத்துறையும் பிரதமர் அலுவலகத்துக்கு ஒவ்வொரு மாதமும் ரிப்போர்ட் அனுப்பி வருகின்றன. இது குறித்து ரகசிய விசாரணை நடத்திய டெல்லி, தேர்தலை எதிர்கொள்ள இப்போதே ஆளும் கட்சி பிரமுகர்களும், பா.ஜ.க.வையும் ரஜினியையும் வீழ்த்த வெளிநாடுகளிலுள்ள முஸ்லிம், கிறிஸ்துவ அமைப்புகளும் சினிமா பிரபலங்கள் மூலம் பணத்தை தமிழகத்துக்குள் குவிக்கின்றன என்பதை தெரிந்துகொண்டு, அதனைக் கைப்பற்றவே வருமானவரித் துறைக்கு உத்தரவுகள் பறந்தன. மேலும் பலர் குறிவைக்கப்பட்டிருப்பதால் பணப்பதுக்கலை சுத்தமாக துடைத்தெறிந்து விட்டு அதன்பிறகு ஆட்சியை கவிழ்ப்பதற்கான செயல்திட்டம் விறுவிறுப்பாகும். ஆகஸ்ட் வரைதான் ஆளும்கட்சிக்கு ஆயுள்'' என்கின்றனர். தி.மு.க.வின் பண விநியோகத்தைத் தடுக்கவும் வியூகம் வகுத்துள்ளது பா.ஜ.க.

மேலும் விசாரித்தபோது, "நடிகர் விஜய் மீது வருமானவரித்துறையை விட அமலாக்கத்துறைதான் அதிகம் குறி வைத்திருக்கிறது. மோடி-ரஜினி கூட்டணி உருவானால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க கிறிஸ்துவ அமைப்புகள் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கும். விஜய்யும் அதற்கு ஒப்புக்கொள்வார். அதனால், அந்நியச் செலாவணி விவகாரத்தில் விஜய்யை சிக்க வைக்க பல்வேறு வழிகளை ஆராய்ந்து சில டாகுமெண்டுகளை எடுத்திருக்கிறார்கள் அமலாக்கத்துறையினர். அதன் விசாரணைதான் விஜய்க்கு சிக்கலை அரசியல்ரீதியாக ஏற்படுத்தும்'' என்கிறது அதிகாரிகள் தரப்பு.


 

 

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.