Skip to main content

அதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

திரைத்துறையினரை மட்டுமல்ல ஆளும்கட்சியினரையும் மிரள வைத்திருக்கிறது விஜய் தொடர்பான வருமான வரித்துறை ரெய்டு நடவடிக்கை. சினிமா வி.ஐ.பி.க்களோ, அரசியல் வி.ஐ.பி.க்களோ இரண்டு, மூன்று பேர் தனியாக சந்தித்துக் கொண்டாலே, ரெய்டு குறித்த கவலைகளைத்தான் பகிர்ந்துகொள்கிறார்கள்.

டெல்லியில் கோலோச்சும் தமிழக அதிகாரிகளிடம் ரெய்டு குறித்து விவாதித்தபோது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மோடி அரசாங்கத்தை உற்றுக் கவனித்தால், வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் நடத்திய சோதனைகளில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தமிழகம்தான் என்கிற உண்மை புரியும். தேர்தல் வெற்றியை பணத்தின் மூலம் பெறலாம் என்கிற நம்பிக்கையையும் அதன் ருசியையும் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியாளர்களும் கடைப்பிடிக் கின்றனர்.

 

vijay



தேர்தலுக்காக பணத்தை பதுக்கும் அ.தி.மு.க.வின் திட்டத்தை அவ்வப்போது முறியடிக்க வேண்டும் என்பது பா.ஜ.க. தலைமையின் மறைமுக அஜெண்டா. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஆளும்கட்சி தலைமை பதுக்கி வைத்த பணக்குவியல்களை 2018-லேயே வருமான வரித்துறை கணக்கெடுத்திருந்தது. அதில், எடப்பாடியின் நெருங்கிய உறவினர்களும், அவரது நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டர்களும் சிக்கினர். குறிப்பாக, எடப்பாடியின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுஞ்சாலைத் துறையின் காண்ட்ராக்டர் செய்யாதுரை, எடப்பாடியின் உறவினர்களான ஈரோடு ராமலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் நிறுவனங்களிலும் பங்களாக்களிலும் ரெய்டு நடத்தி சுமார் 1,300 கோடி ரொக்கமாகவும் பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றியது வருமானவரித்துறை. நாடாளுமன்றத் தேர்தலுக்காக சேமித்து வைக்கப்பட்ட பணம் என்பதை விசாரணையில் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ரெய்டு சமாச்சாரத்தை சுட்டிக்காட்டியே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தது பா.ஜ.க. இதற்கு பல காரணங்கள் இருந்தன. அது வேறு விசயம்.


தேர்தல் நேர ரெய்டு என்ற விமர்சனம் வராதபடி குறைந்தட்சம் 10 மாதங்கள் முன்பே ரெய்டுகளை நடத்துவது பா.ஜ.க. பாலிசி. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அ.தி.மு.க.வுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியைத் தொடர பா.ஜ.க. விரும்பவில்லை. எம்.பி. தேர்தலில் 25 சீட்டுகளில் நாம் ஜெயிப்போம் என அ.தி.மு.க. கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் கூட்டணி போட்டது பா.ஜ.க. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் மக்களின் முடிவு வேறுமாதிரி இருக்கும் என பா.ஜ.க. தலைமைக்கு உளவுத்துறை நோட் போட்டிருக்கிறது.

 

 

dmk



இதற்கிடையே, அரசியல் கட்சி துவங்குவதை பா.ஜ.க. தலைவர்களிடம் உறுதி கொடுத்திருக்கிறாராம் ரஜினி காந்த். அதேசமயம் அரசியல் என்ட்ரிக்கான வெற்றி வாய்ப்புகளையும் அவர் கவனிக்கிறார். அதற்கேற்ப, ரஜினி தரப்பால் முன்வைக்கப்பட்ட சில திட்டங்களுக்கு டெல்லி ஒப்புக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, தேர்தல் நேரத்தில், ஆட்சியில் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு இருக்கக்கூடாது என்பது முக்கியமானது. அப்படி நடந்தால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க ரஜினி தயங்கமாட்டார் என சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில், ரஜினியுடன் கூட்டணி உருவானால் பணத்தை வைத்து தேர்தலை எதிர்கொள்ள நினைக்கும் ஆளும் கட்சிக்கு முதலில் செக் வைக்க வேண்டும் என திட்டமிடுகிறது பா.ஜ.க. அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த ரெய்டுகள்.


அதாவது, பணப் பரிவர்த்தனைகள் எதுவும் ரொக்கமாக இருக்கக்கூடாது என்பது மோடியின் செயல்திட்டம். ஆனால், தமிழகத்தில் கோடிக்கணக்கான பணம் ரொக்கமாகவே குவிக்கப்பட்டு வருகிறது என வருமானவரித்துறையும் அமலாக்கத்துறையும் பிரதமர் அலுவலகத்துக்கு ஒவ்வொரு மாதமும் ரிப்போர்ட் அனுப்பி வருகின்றன. இது குறித்து ரகசிய விசாரணை நடத்திய டெல்லி, தேர்தலை எதிர்கொள்ள இப்போதே ஆளும் கட்சி பிரமுகர்களும், பா.ஜ.க.வையும் ரஜினியையும் வீழ்த்த வெளிநாடுகளிலுள்ள முஸ்லிம், கிறிஸ்துவ அமைப்புகளும் சினிமா பிரபலங்கள் மூலம் பணத்தை தமிழகத்துக்குள் குவிக்கின்றன என்பதை தெரிந்துகொண்டு, அதனைக் கைப்பற்றவே வருமானவரித் துறைக்கு உத்தரவுகள் பறந்தன. மேலும் பலர் குறிவைக்கப்பட்டிருப்பதால் பணப்பதுக்கலை சுத்தமாக துடைத்தெறிந்து விட்டு அதன்பிறகு ஆட்சியை கவிழ்ப்பதற்கான செயல்திட்டம் விறுவிறுப்பாகும். ஆகஸ்ட் வரைதான் ஆளும்கட்சிக்கு ஆயுள்'' என்கின்றனர். தி.மு.க.வின் பண விநியோகத்தைத் தடுக்கவும் வியூகம் வகுத்துள்ளது பா.ஜ.க.

மேலும் விசாரித்தபோது, "நடிகர் விஜய் மீது வருமானவரித்துறையை விட அமலாக்கத்துறைதான் அதிகம் குறி வைத்திருக்கிறது. மோடி-ரஜினி கூட்டணி உருவானால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க கிறிஸ்துவ அமைப்புகள் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கும். விஜய்யும் அதற்கு ஒப்புக்கொள்வார். அதனால், அந்நியச் செலாவணி விவகாரத்தில் விஜய்யை சிக்க வைக்க பல்வேறு வழிகளை ஆராய்ந்து சில டாகுமெண்டுகளை எடுத்திருக்கிறார்கள் அமலாக்கத்துறையினர். அதன் விசாரணைதான் விஜய்க்கு சிக்கலை அரசியல்ரீதியாக ஏற்படுத்தும்'' என்கிறது அதிகாரிகள் தரப்பு.


 

 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.