Skip to main content

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வைத்து பாஜக போட்ட கணக்கு...எதிர்ப்பு அலையில் ஜக்கி... வெளிவராத அதிர்ச்சி தகவல்! 

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

"ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை' என்பார்கள். அதுபோல மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளே வாய் திறக்க தயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஈஷா சாமியார் ஜக்கி வாசுதேவ் "இந்த சட்டம் நல்ல சட்டம்' என திருவாய் மலர்ந்திருக்கிறார். உடனே ஜக்கியை பா.ஜ.க. தலைவர்கள் தூக்கி தலையில் வைத்துக் கொண்டாட துவங்கி விட்டனர்.
 

jakki



"இந்த சட்டத்தை எதிர்த்து போராடும் மாணவர்கள் இதை படிச்சுப் பார்க்காமல் போராடுகிறார்கள். நானும் இந்த சட்டத்தை படிச்சு பார்க்கல. ஆனாலும் இந்த மாணவர்கள் போராட்டம் தேவையில்லாத ஒண்ணுன்னு தோணுது. இந்திய நாட்டில் வாழும் ஒவ்வொருத்தருக்கும் கடந்த காலம்னு ஒன்று இருக்கு. (ஆம் ஜக்கிக்கும் கடந்த காலத்தில் இவரது மனைவியின் மர்ம மரண வழக்கு இருக்குது) அதைத்தான் இந்த சட்டம் ஆராயுது. அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியுரிமைக்கான தனிச் சட்டம் உள்ளது. (இந்தியாவிலும் இருக்கிறது). இந்து திருமணங்களைக்கூட இன்னமும் அங்கீகரிக்காத பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் இந்துக்களை குடிமகன்களாக ஏற்பதில் என்ன தவறு? அதற்கெதிராக போராடும் மாணவர்கள் போலீசை தாக்குகிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு இருந்தாலே இந்திய குடிமகன்களாக பதிவு செய்து கொள்ளும் விதத்தில் அசாமில் நடை முறைப்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவு இருக்கிறது. இதில் என்ன தவறு?'' என ஜக்கி பதினைந்து நிமிட வீடியோ பேச்சை வெளியிட்டிருக்கிறார். உடனே பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ஜக்கியை பாராட்டி பதிவிட்டார்.

 

modi



உண்மை நிலவரமோ மிகவும் கலவரமாக உள்ளது. முதலில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கான எதிர்ப்பு ஜாமியா பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில்தான் தொடங்கியது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் இசுலாமிய சிந்தனையின் தலைமைப் பீடமாகும். முத்தலாக் மசோதா, காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கம் என பா.ஜ.க. அரசு தொடர்ந்து இசுலாமியர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதையெல்லாம் இந்திய முஸ்லிம்கள் சகித்துக் கொண்டார்கள். ஆனால் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா என்பது பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற ஒன்று என்றாலும் அது நடைமுறைக்கு வராது என முஸ்லிம்கள் எதிர்பார்த்தார்கள். அதை நடைமுறைப்படுத்த பா.ஜ.க. அரசு சட்டமியற்றியபோது அலிகார் பல்கலைக்கழகம் பொங்கி எழுந்தது.

 

cab bill



நீண்டகால போராட்டங்களை உறுதியாக கொண்டு செல்வதில் புகழ்பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைப் போலவே டெல்லி ஜாமியா பல்கலைக்கழகமும் தீவிரமாக களத்தில் இறங்கியது. ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடந்த மிருகத்தனமான தாக்குதல் இந்தியா முழுவதும் மாணவர்களை களமிறக்கி விட்டுள்ளது. இன்று மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.


மோடி ஆட்சிக்கு வருவதற்கேற்ப, காங்கிரசுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்திய மேதா பட்கர், வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா போன்ற சமூக ஆர்வலர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து நூறு அமைப்புகளை திரட்ட திட்டமிட்டு அறைகூவல் விடுத்தார்கள். அறைகூவல் விடுத்த தினத்திலேயே இருநூறு அமைப்புகள் அந்தப் போராட்டத்தில் இணைந்துவிட்டன என போராட்டத்தின் தீவிரத்தை சொல்கிறார் டெல்லியைச் சேர்ந்த தமிழ்ப் பத்திரிகையாளரான ஷஃபி முன்னா. இது ஏதோ நகரங்களில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் நடத்தும் போராட்டமாக நின்று விடவில்லை.


அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு நிதி அமைச்சராக இருப்பவர் ஹிமந்துவ விஸ்வ ஷர்மா. இவர் அசாமின் தலைநகரான கவுஹாத்தியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரில், இறந்து போன பா.ஜ.க. தலைவரின் உடலுக்கு மரியாதை செலுத்த திட்டமிட்டார். அவர் நெடுஞ்சாலை வழியாக ஐந்து கிலோமீட்டர் பயணம் செய்கிறார் என அறிந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்கள், அவரை எதிர்த்து கறுப்புக் கொடியுடன் லட்சக்கணக்கில் திரண்டு விட்டனர். அவர்களது எதிர்ப்பை சமாளிக்க ஐந்து கிலோமீட்டர் தூரம் ஹெலிகாப்டரில் பயணம் செய்தார் விஸ்வ ஷர்மா. அசாமில் பா.ஜ.க.வுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பலையை பார்த்த மோடி, ஜனவரி பத்தாம் தேதி கவுஹாத்தியில் பங்கேற்கவிருந்த ஒரு விழாவையே ரத்து செய்து விட்டார். அசாம் மண்ணில் காலை வைப்பதற்கு தயக்கம் காட்டும் அளவிற்கு இந்திய பிரதமரையே அலற வைத்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்பு என்கிறார்கள் வடகிழக்கு பத்திரிகையாளர்கள்.

இந்தியா என்பது ஒரு பெரிய தேசம். அதன் கிராமப்புறங்களுக்கு ஒரு விஷயம் சென்றடைய நேரம் எடுக்கும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்பு இப்பொழுதுதான் வட இந்திய கிராமங்களை சென்றடைந்திருக்கிறது. உத்திரப் பிரதேச கிராமங்களில் டெல்லிக்கு அடுத்த படியாக போராட்டம் அணையவில்லை. சுதந்திரப் போராட்டத்திற்கு பிறகு மூவர்ணக் கொடியுடன் இந்தியாவின் கிராமப்புறங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய போராட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டம்தான். இந்த கிராமப்புறங்களில் நடக்கும் போராட்டங்களில் இறப்பவர்கள் பற்றி எந்தப் பதிவையும் வெளியில் சொல்லாதீர்கள் என உத்தரப்பிரதேச அரசு போலீசுக்கும் கலெக்டருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதையெல்லாம் மீறி போராட்டம் நடப்பதால், காஷ்மீரில் நிறுத்தப்பட்டிருந்த துணை ராணுவத்தை உத்தரபிரதேசத்தில் இறக்கி போராட்டத்தை நசுக்கிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.வின் யோகி ஆதித்யாவின் தலைமையிலான அரசு.

உத்தரப்பிரதேசம், முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் மாநிலம். இங்கே கிராமப்புறங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தலித்துகளும் முஸ்லிம்களும் இணைந்து போராடுகிறார்கள். இது உத்தரப்பிரதேசத்தின் தலித் தலைவரான மாயாவதிக்கு ஆட்டம் கொடுத்துள்ளது. மாயாவதி, இந்தப் போராட்டம் இவ்வளவு தீவிரமடையும் என எதிர்பார்க்கவில்லை. இந்தப் போராட்டத்தில் உத்தரப்பிரதேசத்தின் தலித் தலைவரான சந்திரசேகர் ஆசாத் டெல்லி ஜும்மா மசூதியில் போராடிய முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்பார் என எதிர்பார்க்கவில்லை. டெல்லி ஜும்மா மசூதியில் தொடங்கிய பீம் சேனாவின் எதிர்ப்பு உத்திரப்பிரதேச கிராமப் புறங்களில் எதிர்ப்பு அலையை கரை புரண்டோட செய்ததால் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

உ.பி. மட்டுமல்ல, பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய வடஇந்திய மாநிலங்களும் எரிகிறது என்கிறார் பிரபல பத்திரிகையாளரான மாத்யூ சாமுவேல். தமிழகத்திலும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் உள்ளிட்ட அமைப்புகள் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் கடந்த வாரம் களமிறங்கின. தேசியக் கொடியுடன் நடைபெறும் போராட்டம், பா.ஜ.க. அரசை அதிர வைத்துள்ளது. இந்த சட்டத்தை எப்பொழுது பா.ஜ.க. அமல்படுத்தும் என பா.ஜ.க. வட்டாரங்களை கேட்டோம். "எதிர்ப்பு அமிழ்ந்து போகும் என பா.ஜ.க. கணக்கு போட்டது. இந்த சட்டத்தோடு என்.ஆர்.சி எனப்படும் குடிமக்கள் பதிவையும் கொண்டு வரலாம் என திட்டமிட்டது. என்.ஆர்.சி அமல்படுத்தப்பட்டால் இந்திய குடியுரிமை இல்லாதவர்களை தங்க வைக்க முகாம்கள் அமைக்க வேண்டும். இதை இந்த சட்டத்துடன் ரகசியமாக இணைத்து விடலாம் என்கிற பா.ஜ.க.வின் திட்டம், இந்த சட்டத்திற்கு எதிராக எடுத்த போராட்ட அலையால் தவிடு பொடியாகிவிட்டது. அதனால் இந்த சட்டத்திற்கு பிறகு வந்த துப்பாக்கி லைசென்ஸ் நடைமுறை சட்டத்தை நோட்டிபிகேஷன் மூலம் அமல்படுத்திய மத்திய அரசு, இந்தத் திட்டத்தினை அமலாக்கம் செய்வதற்கான நோட்டிபிகேஷனை வெளியிட்டு அமலாக்குவதற்கு பயப்படுகிறது'' என்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்த அரசியல்வாதிகள்.


 

 

Next Story

நேற்று சூரத், இன்று இந்தூர்; தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க-வின் சூழ்ச்சி?

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
BJP's election maneuver? on Surat and Indore

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உட்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாக கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

BJP's election maneuver? on Surat and Indore

இதனால், சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் கடந்த 24ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர். இதனை தொடர்ந்து, சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டிய கடைசி நாளின் போது, காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு பா.ஜ.கவில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 என நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. மத்திய பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்து வருகிறது. 

BJP's election maneuver? on Surat and Indore

அதன்படி, மத்தியப் பிரதேசத்தில், கடந்த 19ஆம் தேதி 6 தொகுதிகளுக்கும், கடந்த 26ஆம் தேதி மீதமுள்ள 6 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவி நடைபெற்றது. நான்காம் கட்டமாக நடைபெறும் தேர்தலில் இந்தூர் உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அக்‌ஷய் கண்டி பாம் என்பவர் அறிவிக்கப்பட்டார். அதே போல், பா.ஜ.க சார்பில் தற்போதைய சிட்டிங் எம்.பியான சங்கர் லால்வாணி மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 25ஆம் தேதியுன் நிறைவடைந்து, கடந்த 26ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற நேற்று (29-04-24) கடைசி நாள் ஆகும். 

இந்த சூழ்நிலையில், இந்தூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் கண்டி பாம் நேற்று (29-04-24) தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், அக்‌ஷய் கண்டி பாம் வாபஸ் பெற்ற அடுத்த சில மணி நேரத்திலேயே பா.ஜ.க அலுவலகத்துக்கு சென்று பா.ஜ.கவில் இணைந்துள்ளார். ஏற்கனவே, சூரத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் செய்து பா.ஜ.க.வில் இணைந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.