Skip to main content

"பாஜகவுக்கு கட் அவுட் , காங்கிரஸூக்கு கெட் அவுட்" குஜராத்தில் 32 வருட காங்கிரஸ் சாதனை முறியடிப்பு

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

கத

 

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜகவே இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக வெளியாகி வருகிறது. குஜராத்தில் அதிகபட்சம் 120 இடங்களில் வரை பாஜக கைப்பற்றும் என்று அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு வரலாற்று வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது. இதுவரை ஆறு முறை தொடர்ந்து ஆட்சியிலிருந்தாலும் இதுவரை கண்டிராத வெற்றியை முதல் முறையாக பாஜக பெற்றுள்ளது. 

 

கடந்த தேர்தலில் தலை தப்பியதே தம்பிரான் புண்ணியம் என்று காங்கிரஸிடம் போராடி 99 இடங்களில் வென்ற பாஜக இந்த முறை 160 தொகுதிகளில் முன்னணியிலிருந்து வருகிறது. காங்கிரஸ் 77 இடங்களில் கடந்த தேர்தலில் வெற்றிபெற்றிருந்த நிலையில் மாநிலத்தில் இந்த முறை பாஜகவால் துடைத்தெறியப்பட்டுள்ளது. இரட்டை இலக்கத்தில் வெற்றிபெறுவதற்கே அங்கே காங்கிரஸ் போராடி வருகிறது. குஜராத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து வரும் பாஜகவுக்கு இந்த முறையும் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்றே அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறியிருந்ததே தவிர இத்துணை பிரமாண்ட வெற்றி கிடைக்கும் என்று பாஜக தரப்பே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு இந்த வெற்றியைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். 

 

குறிப்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததைப் போல் குஜராத்தில்  நடைபெறாது என்று என்ன நிச்சயம் இருக்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கெல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் வரலாற்று வெற்றியை ஈட்டி பதிலடி கொடுத்துள்ளது பாஜக. குஜராத்தில் பாஜக எப்போது பெறும் வெற்றியை விட இந்த முறை பல்வேறு சாதனையுடன் கூடிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆறு முறை பாஜக தொடர்ச்சியாக மாநிலத்தில் ஆட்சி செய்திருந்தாலும் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் 150 தொகுதிகளைக் கடந்து பாஜக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இத்தகைய வரலாற்று வெற்றியை இதற்கு முன்பு 1985ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 149 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி இந்த சாதனையைச் செய்திருந்தது. ஆனால் அந்த சாதனையைப் போகிற போக்கில் கடந்து வரலாற்று வெற்றியை இந்த முறை பாஜக செய்துள்ளது. சுமார் 32 ஆண்டுகளாக முறியடிக்க முடியாத சாதனையாக இருந்த காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றியை இந்த முறை பாஜக முறியடித்திருக்கிறது. அதே வேளையில் குஜராத்தில் காங்கிரஸ் சரிவு 1990ம் ஆண்டும் நடைபெற்ற தேர்தலிலிருந்தே ஆரம்பிக்கிறது. யாரும் தொட முடியாத வெற்றியை 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற காங்கிரஸ் கட்சி 90ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மூன்றாம் இடத்திற்குச் சென்றது. 

 

ஜனதா தளம் 77 தொகுதிகளில் வெற்றிபெற்று முதல் இடத்திலும், பாஜக 67 இடங்களில் வெற்றிபெற்று இரண்டாம் இடத்திலும், 33 இடங்களில் வெற்றிபெற்று கடைசி இடத்திற்கும் சென்றது. இதில் ஆச்சரியப்பட வைக்கும் நிகழ்வு என்னவென்றால் 38 லட்சம் வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 33 தொகுதிகளில் மட்டுமே வெற்றி சாத்தியமானது.  34 லட்சம் வாக்குகள் பெற்ற பாஜக 67 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதைப்போலவே 37 லட்சம் வாக்குகள் பெற்று ஜனதா தளம் 77 இடங்களில் வெற்றிபெற்றது. எனவே இன்றைக்கு மட்டும் அல்ல, கடந்த 35 ஆண்டுகளாகக் குஜராத்தின் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக என்பதை விடக் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருந்துள்ளதை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

 

அதன் நீட்சியாகவே இந்த தேர்தல் முடிவுகள் இருப்பதை உணர முடிகிறது. ஆனாலும் பாஜகவின் இந்த வெற்றி என்பது மற்றொரு முறை வேறு எந்த மாநிலத்திலும் எதிர்காலத்தில் அவ்வளவு எளிதில் பெற முடியாத வெற்றியாகவே இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்த வெற்றி மூலம் இந்தியாவில் இதற்கு முன்பு மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே தொடர்ந்து 7 முறை ஒரு மாநிலத்தில் ஆட்சியிலிருந்து சாதனை புரிந்திருந்தது. அந்த சாதனையை தற்போது பாஜக சமன் செய்துள்ளது. எனவே இந்த வெற்றி என்பது அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான பூஸ்ட் ஆக இருக்கும் என்று பாஜகவினர் கூறுவதை நம்மால் கேட்ட முடிகிறது. எனவே குஜராத் வெற்றி அடுத்த ஆண்டு நடைபெறும் பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தலுக்கு புதிய உற்சாகத்தை வழங்கும் என்று பாஜக உறுதியாக நம்புகிறது. 

 


 

Next Story

“பிரதமருக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லையே?” - சித்தராமையா தாக்கு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Siddaramaiah says The Prime Minister doesn't even have this basic knowledge?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

காங்கிரஸ், வாக்கு வங்கி அரசியலுக்காக பட்டியலின,பழங்குடியின,பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறித்து, பிறருக்கு வழங்கும் ஆட்டத்தை ஆடியது. பின்னர், கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்ற பா.ஜ.க, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டிலிருந்து காங்கிரஸ் அரசு உருவாக்கிய இஸ்லாமிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

Siddaramaiah says The Prime Minister doesn't even have this basic knowledge?

பிரதமர் மோடி இந்த சர்ச்சை பேச்சுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு மாற்றியதாக பிரதமர் கூறியது அப்பட்டமான பொய். இது அறியாமையிலிருந்து உருவானது. தோல்வி பயத்தில் இருந்து பிறந்த அவரது விரக்தியின் அறிகுறியாகும். நமது நாட்டின் வரலாற்றில் எந்த தலைவரும் பிரதமரின் அலுவலகத்தை இவ்வளவு கீழ் நிலைக்கு இழிவுபடுத்தியதில்லை.

பொறுப்பான பதவியில் இருப்பதால், பிரதமர் நரேந்திர மோடி இந்த பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அல்லது, தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலின மற்றும் பழங்குடியின இட ஒதுக்கீடுகளை இஸ்லாமியர்களுக்கு வழங்கப் போவதாக காங்கிரஸ் எங்கே கூறியுள்ளது? காங்கிரஸின் கீழ் எந்த மாநில அரசு இது போன்ற ஒரு கொள்கையை அமல்படுத்தியுள்ளது?

சமூக மற்றும் பொருளாதார ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடுகளில் திருத்தங்கள் செய்ய முடியும். மேலும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. இத்தகைய திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் தேவை. ஒரு பிரதமருக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாதது நம் நாட்டிற்கு உண்மையிலேயே சோகமானது” எனக் கூறினார். 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.