Skip to main content

"என் முகத்தைப் பார்த்துதான் தமிழக மக்கள் சாப்பிடவே செல்வார்கள் என்று அமித்ஷாவுக்கு காதில் பூ வைத்தார்..." - புகழேந்தி அட்டாக்

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

jkl

 

தமிழக அரசியல் தொடர்ந்து பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கைகள், தமிழக முன்னாள் ஆளுநரின் குற்றச்சாட்டு என்று தொடர்ந்து பரபரப்பு குறையாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் பல்கலைக்கழக வேந்தர்கள் நியமனத்தில் பெரிய அளவிலான தொகை லஞ்சமாகப் பெறப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் இதுதொடர்பாக அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தியிடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவருக்கே உரிய அதிரடி நடையில் பதிலளித்துள்ளார்.

 


தமிழகத்தில் தான் ஆளுநராக இருந்தபோது பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனத்துக்கு 40 கோடி முதல் 50 கோடி வரை பணம் வாங்கப்பட்டது எனத் தமிழக முன்னாள் ஆளுநரும் தற்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அப்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி. அன்பழகன் மறுத்துள்ள நிலையில் அவர் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியலில் தொடர்ந்து விவாதத்தைக் கிளப்பி வருகின்றது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

 

இந்தக் குற்றச்சாட்டை யார் கூறியது என்று முதலில் நாம் பார்க்க வேண்டும். இதை தமிழக முதல்வராக இருக்கின்ற மு.க.ஸ்டாலின் அவர்களோ, அண்ணன் பன்னீர்செல்வமோ, திருமாவளவனோ, கம்யூனிஸ்ட் தோழர்களோ கூறவில்லை. இந்தக் குற்றச்சாட்டை கூறியவர் மத்திய அரசால் ஆளுநராக நியமிக்கப்பட்டு தமிழகத்தில் பணியாற்றியவர். தற்போதும் ஆளுநராக வேறு மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இப்போது எதற்காக அவர் இதைக் கூற வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. பஞ்சாப்பில் இதே போன்று சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் இதே போன்ற ஊழல் நியமனங்கள்...தான் ஆளுநராக இருந்தபோது நடைபெற்றது, அதற்கு அப்போது ஆட்சியிலிருந்தவர்களுக்கு தொடர்பு இருந்தது  என்று கூறியுள்ளார்.

 

அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் யார், எடப்பாடி பழனிசாமி. அதில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி. அன்பழகன். இந்த நியமனங்களில் இவ்வளவு ஊழல் நடைபெற்றுள்ளது என்றால் அதற்கு இவர்கள்தானே பொறுப்பு. லஞ்சப்பணம் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றால் 27 பேர் வேந்தராக நியமிக்கப்பட்டதில் இவர்களுக்கு எத்தனை கோடி பணம் கிடைத்திருக்கும். பல்கலைக் கழக வேந்தர் நியமனத்தில் மாபெரும் ஊழலை எடப்பாடி பழனிசாமி அரசு செய்துள்ளது என்பது பட்டவர்த்தனமாக தற்போது தெரிய வந்துள்ளது. இதற்கான தண்டனையை இவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். பன்வாரிலால் சொல்கிறார் என்றால் மத்திய அரசே இவர்கள் மீது குற்றம் சாட்டுகிறது என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஊழல் பெருச்சாளிகள் விரைவில் மக்கள் முன்பு அம்பலப்பட்டு விடுவார்கள்.

 

இவர்கள் தமிழக மக்களை மட்டுமா ஏமாற்றினார்கள். தேர்தலுக்கு முன்பு சென்னை வந்த அமித்ஷா எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரிடமும் பேசி தேர்தலில் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரச்சாரம் செய்ய வேண்டும். பிரிந்திருப்பது தோல்விக்கு வழிவகுக்கும், புலனாய்வு செய்திகள் அதை ஒத்தே இருக்கிறது என்ற எச்சரிக்கையைக் கொடுத்தார். அப்போது அண்ணன் ஓபிஎஸ் கூட அனைவரும் ஒன்றாக இணைந்தே தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்போம். இணைந்து செயல்பட்டால் தான் வெற்றி வசப்படும் என்று ஓப்பனாக சொன்னார். இதை அமித்ஷாவும் ஆமோதித்தார்.

 

ஆனால் எடப்பாடி பழனிசாமி, அய்யயோ...அப்படி எல்லாம் இல்லை. தமிழக மக்கள் என்னைப் பார்த்துத்தான் சாப்பிடவே செய்கிறார்கள், என்னைப் பார்த்துத்தான் எழுந்திருக்கிறார்கள், நான்தான் எல்லாமாக இருக்கிறேன். நான் தனியாக நின்றே பிரச்சாரம் செய்து வெற்றி பெறுவேன். புத்தன், ஏசு, காந்தி வரிசையில் என்னைத் தமிழக மக்கள் நினைக்கிறார்கள் என்று கூறி அமித்ஷாவுக்கு காதில் பூ வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அதையும் தாண்டி எம்ஜிஆர் எல்லாம் சும்மா நான் அதற்கு மேல், 150 சீட்டை தட்டி தூக்கி விடலாம் என்று பொய்யை அளவில்லாமல் சொன்னவர்தான் இந்த பழனிசாமி. ஆனால் தேர்தல் முடிவுகள் யார் எம்ஜிஆர், யார் எடப்பாடி பழனிசாமி என்று காட்டிவிட்டது" என்றார்.

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.