Skip to main content

தலித்துகளை மீட்க ஒரு பிராமின்தான் அவதரிக்க வேண்டுமா? - ஆர்டிகள் 15ம் எதிர்வினைகளும்!  

Published on 02/07/2019 | Edited on 03/07/2019

"மஹன்த் என்ன சாதி"

"பிராமின் சார்"

"ஜாதவ் சார்.. நீங்க தலித் தான?"

"ஆமா சார்"

"அந்த பசங்களும் நீங்களும் அப்ப ஒரே சாதியா?"

"அய்யோ இல்ல சார்.. நான் சமர்.. அவங்க பாசிஸ்.. அவங்கள விட நாங்க கொஞ்சம் மேல"

"சரி... நீங்க?"

"நான் கயாஸ்து சார்"

"நான்?"

"பிராமின் சார்.."

"அப்ப மஹன்த்தும் நானும் ஒரே சாதியா?"

"ச்சே ச்சே.. அவர் கொஞ்சம் உயர்ந்த பிராமின்... நீங்க அவர விட கொஞ்சம் கீழ இருக்குற பிராமின்"

"What the f*** is going on here?"

ஆர்ட்டிகள் 15 படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி இது. மொத்த படத்திற்குமான ஒரு சோற்றுப் பதம் இதுவே. அந்தாதுன் புகழ் ஆயுஷ்மான் குரானா நடித்து, மல்க் படமெடுத்து அனுபவ் சின்ஹா இயக்கியிருக்கும் ஆர்ட்டிகள் 15 சென்ற வாரம் வெளியாகி பெரும் வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. தனது கரியரின் துவக்க காலத்திலேயே இப்படி ஒரு படத்தில் நடிக்க முன்வந்த ஆயுஷ்மான் குரானாவுக்கு ஒரு சல்யூட்.

 

ayushman kurana



ஒரு கிராமத்திற்குக் கூடுதல் கமிஷனராக பணியேற்று வருகிறான் அயன். அதே நாளில் வெறும் மூன்று ரூபாய் கூலி உயர்வு கேட்டதற்காக காணாமல் போகிறார்கள் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மூன்று சிறுமிகள். போலீஸ் மிகவும் மெத்தனமாய் அந்த வழக்கை கையாள்வதை அயன் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, காணாமல் போன பெண்களில் இருவர், ஊருக்கு நடுவே ஒரு மரத்தில் தூக்கில் மாட்டப்பட்டு இறந்து போயிருக்கிறார்கள். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், அவர்கள் கும்பலாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று சொல்கிறது. ஆனால் அந்த ரிப்போர்ட்டை மறைக்க காவல்துறையிலேயே ஒரு சதி நடக்கிறது.

ஆரம்பத்தில் அந்த கிராமத்தின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே வருபவனுக்கு, இந்த வழக்கின் வழியாக விரிகிறது அங்கு  நிலவும் கெட்டித் தட்டிப் போன சாதிப் படிநிலைகளும், அது மக்களின் மேல் செலுத்தும் ஆதிக்கமும் வன்முறையும். இதை உணரும் அயன் அந்த வழக்கில் முழுமையாக ஈடுபட்டு, காணாமல் போன மூன்றாவது பெண்ணை கண்டுபிடிக்கவும் இறந்து போன இரண்டு பெண்களின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தரவும் முற்படுகிறான். சாதியின் அதிகாரநிலைகள் மூலம் அயனின் முயற்சிகளுக்கு வரும் தடைகளும் அதற்கு அயனின் எதிர்வினைகளுமே ஆர்ட்டிகள் 15.

ஆர்ட்டிகள் 15ல் அப்படி என்ன சொல்லப்பட்டிருக்கிறது? சுருக்கமாக சொல்வதானால் ஒரு மனிதனுக்கான எந்தவித அடிப்படை உரிமைகளும் சாதி, மதம், இனம், பால், பிறந்த இடம் இவற்றின் அடிப்படையில் மறுக்கப்படக் கூடாது என்பதுதான் ஆர்ட்டிகள் 15. அண்ணல் அம்பேத்கரால் இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவத்தை சட்டப்பூர்வமாக நிலைநாட்டும் முக்கியமான ஒரு அரசியலமைப்புப் பிரிவு இந்த ஆர்ட்டிகள் 15. தொடர்ந்து பல்வேறு சாதிய, மத வன்முறைகளை இந்தியா சந்தித்து வரும் சூழலில் நாம் கண்டிப்பாக மறுவாசிப்பு செய்தேயாக வேண்டிய ஒரு பிரிவு ஆர்ட்டிகள் 15.

 

ambedkar



இதை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை எழுதி எடுத்ததற்கும், அதில் எந்தவித சமரசங்களும், சமரசங்கள் என்றால் வணிக சினிமா சமரசங்களாகிய பாடல் நடனம் மட்டுமல்ல, சமூக/அரசியல் ரீதியான சமரசங்களும் இல்லாமல், வீரியத்துடன் இந்த களத்தை கையாண்டதற்கும் இந்த படைப்பாளிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்தியாவின் சாதிய ஏற்றத்தாழ்வுகளை முன்வைத்து வரும் படங்கள் குறிப்பிட்ட சாதிகளை குறிப்பிடால், பொதுவான ஒரு இடத்தில் நின்று, அவர்கள் இவர்கள் என்று பொதுமைப்படுத்தி பாதுகாப்பாகப் பேசும். ஆனால் ஆர்ட்டிகள் 15, நேரடியாக சாதிகள் மீதான விமர்சனங்களை வைக்கிறது. படம் தலித்துகளை வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கும் பிராமின்கள், பிராமின் கட்சியிடம் விலைபோகும் தலித் தலைவன், தொடர் அடக்குமுறைகளால் வன்முறை பாதையை கையிலெடுக்கும் தலித் தலைவன், ’பிராமின் - தலித் ஒற்றுமை தேவை, அதன் மூலம் இந்துக்கள் ஒற்றுமை வளரும்’ என்று மக்களை திசைமாற்றும் கட்சி என தற்கால இந்திய அரசியல் சமூக சூழலை நினைவுபடுத்தும் காட்சிகளை சமரசமின்றி முன்வைக்கிறது. கட்சியின் பெயர்கள் கூட அவற்றின் சின்னங்கள் மூலம் நேரடியாகவே குறிப்பிடப்படுகின்றன. மக்கள் நம்பியிருக்கும் ஒரு சாதிக் கட்சி, தேர்தல்களின் போது அதற்கு எதிராக பேசிவரும் கட்சியோடு இணைவதும், எத்தனை விதமாக இந்த தாவல்களும் கூட்டணிகளும் நடக்கிறது என்பதும், அதனால் எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவது என்று மக்கள் குழம்புவதும் ஒரு காட்சியில் சரவெடியாக விளக்கப்பட்டிருக்கிறது.

சாதி எந்தளவுக்கு சமூகத்தில் ஊறியிருக்கிறது என்பதை அயன் அறிந்துகொள்ளும் காட்சிகளும், கிராமம், காவல்நிலையம் என்று அத்தனை மட்டுகளிலும் இருக்கும் சாதிய படிநிலைகளை கண்டு அருவருப்பு கொள்ளும் அயன் காவல் நிலைய நோட்டீஸ் போர்டிலே ஆர்ட்டிகள் 15 ஐ ப்ரிண்ட் எடுத்து ஒட்டிவைப்பதும் மிக நுணுக்கமான காட்சியமைப்புகள். அயனுக்கும் அவன் மனைவிக்குமான சின்ன சின்ன ஃபோன் சம்பாஷனைகளும், அதன் மூலம் சொல்லப்படும் விஷயங்களும் அழகான ஆழமான சித்தரிப்புகள். குறிப்பாக, அரசனை கீழிறக்கிவிட்டால், அடுத்து யாரை அரசனாக்குவது என்று அயன் கேட்பதும், எதற்கு ஒரு அரசன் வேண்டும் என்று அவள் திரும்பிக் கேட்பதும் அட்டகாசம்.

 

 

article 15



பெண்கள் காணாமல் போனதை தொடர்ந்து ஸ்ட்ரைக்கிற்கு செல்லும் தலித்துகளால், போலீஸ் ஸ்டேஷன் சாக்கடை சரிசெய்யப்படாமல் குளம் போல தேங்கி நிற்பதும், சமாதானத்திற்கு பிறகு ஒரு சகமனிதன், அந்த சாக்கடைக்குள் முழுமையாக இறங்கி அதை சுத்தம் செய்வதும் மனதிற்குள் பெரும் அதிர்வை ஏற்படுத்துகிறது. சினிமா எனும் காட்சி ஊடகத்தை வீரியத்துடன் பயன்படுத்திய இடமாக இதை சொல்லலாம். படம் முடிந்து நாட்களாகியும் கூட, அந்த காட்சி தந்த அதிர்வு இன்னும் மறையவில்லை.

சாதிய ஆதிக்கத்தை பின்பற்றும் சமூகத்தின் வெவ்வேறு அடுக்கில் உள்ளவர்கள் தேவைக்கேற்ப கைகோர்த்துக் கொள்வதும், அதே தேவைக்கேற்ப ஒன்றையொன்று முதுகில் குத்தத் தயங்காததும் வெகு இயல்பான ஜோடனை. அந்த தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு நடந்தது காட்சியாக விரியவில்லை. ஆனாலும் அது நமக்குள் ஏற்படுத்தும் சலனம் அதிகம். படம் முழுக்க இயக்கம் வெகு நுணுக்கத்துடன் சின்ன அதிர்வுகளை ஏற்படுத்தியபடியே பயணிக்கிறது. இசையும் படத்தொகுப்பும் ஒளிப்பதிவும் அந்த அதிர்வை நமக்கும் மிகச்சரியாக கடத்துகின்றன.

பதினைந்து வயதிற்குட்பட்ட தன் பெண் குழந்தையை, ஆதிக்க சாதி வெறியர்கள் இரண்டு மூன்று நாட்கள் அடைத்து வைத்திருந்து, பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். அந்த வலியிலும் அந்த தகப்பன்கள் ஆற்றாமையோடு புலம்புவது, ‘எங்கள் பெண்களை பத்து நாட்கள் வைத்திருந்து கூட விட்டிருக்கலாமே.. ஏன் கொன்றார்கள்’ என்பதுதான். சில வருடங்களுக்கு முன்பு கூட இதுபோன்ற காட்சிகளை பார்க்கும்போது என்ன இது செயற்கைத்தனமாக இருக்கிறதே என்று தோன்றியிருக்கும். ஆனால் இப்போது தினம் தினம் சமூக வலைதளங்களில் வெளியாகும் வன்கொடுமை வீடியோக்கள் இந்த காட்சிகள் கற்பனையானது அல்ல எனும் வலியை நமக்குள் விதைக்கின்றன.

 

article 15



நீதி கேட்கவில்லை. எதிர்த்து கேள்வி கேட்டு போராடவில்லை. ஊடகங்களிடம் சென்று பேசவில்லை. கொல்லாமலாவது விட்டிருக்கலாமே என்று கதறும் இந்த தகப்பன்களைத்தான் காவல்துறை குற்றவாளிகள் என சித்தரித்து உள்ளே அடைக்கிறது. அதுவும் என்ன காரணம் சொல்லி? அந்த இரண்டு பெண்களும் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதைப் பார்த்த கோபத்தில் அந்த தகப்பன்கள் செய்த ஆணவக் கொலை இது என வழக்கு எழுதப்படுகிறது. தினம் தினம் இதுபோன்ற எண்ணற்ற கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த தேசத்தில், இதை மறுத்து மறந்து வாழ்பவர்கள்தானே நிஜமான ஆன்ட்டி இந்தியர்கள்?

படத்தின் பெரும் பலமாக பல வசனங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் மொத்த படத்திலும் என்னை உலுக்கிய ஒரு வசனம் - நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கும் இத்தனை வன்கொடுமைகளையும் மறைத்துதான், நம் சினிமாக்களிலும் டிவிக்களிலும் ஒரு சுகமான வாழ்வை காட்டிக்கொண்டிருக்கிறோம், நம்பிக்கொண்டிருக்கிறோம். எத்தனை சத்தியம் புதைந்த வசனம் இது!

துப்புறவாளரின் மகனாக வளர்ந்து போலீஸாகி, ஆதிக்க சாதியினருடன் அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழும் ஒரு தலித், சமூகத்தின் இயல்பே இதுதான் என்று நம்பி சாதியை தக்க வைக்க நினைக்கும் ஒரு போலீஸ், உள்ளுக்குள் எத்தனை வலிகள் இருந்தாலும் ஆதிக்க சாதி அதிகாரிகளிடம் ஒருபோதும் அதை கோபமாக வெளிப்படுத்தாமல் வாழும் காவல்துறை அதிகாரிகள், என்ன பேசி என்ன மாறிவிடப்போகிறது என்று நினைக்கும் ஒருவன் என பலவிதமான பரிமாணங்களுடன் கூடிய கதாப்பாத்திரங்கள் சமூகத்தின் பல அங்கங்களை பிரதிபலிக்கின்றன. அதுவும் இறுதிக்காட்சியில் ‘நீலாம் கடைசி வரைக்கும் கூட்டி பெருக்கிட்டே இருந்துருக்கனும்.. உன்ன எங்களோட ஒன்னா சேர விட்டோம் பாரு’ என்று சொல்லும் ஆதிக்க சாதி அதிகாரியிடம் அந்த தலித் அதிகாரியின் எதிர்வினை... தியேட்டரில் விசில் பறக்கிறது. மனதிற்குள்ளும்.

நாசர் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கு சி.பி.ஐ க்கு மாறுவதும், சி.பி.ஐ அதிகாரி குற்றவாளிகளை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து படம் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் இருண்மையோடு முடியப்போகிறதோ என்கிற சின்ன பயம் எழுகிறது. ஆனால் ஒரு அழகான நம்பிக்கையோடு, வெளிச்சக் கீற்றோடு முடிந்திருப்பது வெகுசிறப்பு. இதுபோன்ற முடிவுகள்தான் இந்த இழிவிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையை நமக்களிக்கும்.

 

article 15



படத்தின் மேல் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. படம் விமர்சனம் செய்த நபர்கள் படத்தை தடை செய்யச் சொல்லிக் கூட கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை விட்டுவிடுவோம். ஆனால் சில விமர்சனங்கள் படத்தின் கருத்தியலைப் பற்றி, அரசியலைப் பற்றி கேள்வியெழுப்புகின்றன. அதில் பிரதானமானது, தலித்துகளை சாதிக் கொடுமைகளில் இருந்து காப்பாற்றக் கூட ஒரு பிராமின்தான் வரவேண்டுமா, அந்த இடத்தில் ஏன் ஒரு தலித்தை வைத்திருந்திருக்கக் கூடாது எனும் கேள்வி. அந்த ஆபத்பாந்தவன் கூட பிராமினாக இருப்பதே ஒரு சாதியப் பார்வைதானே என்பது அவர்கள் வைக்கும் வாதம்.

நாயகன் அயன் பிராமினாக சித்தரிக்கப்பட்டிருப்பதனால் இந்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதற்கு படத்தின் இயக்குனர் அனுபவ் சின்ஹா அருமையான ஒரு பதிலை கொடுத்திருக்கிறார். ‘The privileged should challenge privilege’ - அதாவது சாதியின் இந்த அனுகூலங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களே அதை கேள்விக்குட்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அனுபவ் சின்ஹா.

மேலும், தலித்துகள் மிகவும் தாழ்த்தப்பட்டு, சமூகத்தின் பல அடுக்குகளினாலும் கொடுமைக்கும் ஆளாக்கப்படும் ஒரு ஊரில், ஒரு தலித் அப்படிப்பட்ட உயர் பதவிக்கு வந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அது முற்றிலும் வேறான ஒரு படம். முற்றிலும் வேறான ஒரு களம். முதலில் அங்கு அந்தப் பதவிக்கு அப்படிப்பட்ட ஒருவன் வந்திருக்க முடியுமா, வந்திருந்தாலும் கூட அவன் உத்தரவுகள் மதிக்கப்பட்டிருக்குமா என்பதே கேள்விக்குறிதான். அவன் காவல்துறையில் இருக்கும் சாதிய படிநிலைகளை சமாளிப்பதிலேயேதான் முழு கதையும் சென்றிருக்கும்.

வெளிநாட்டில் படித்த, இந்தியாவின் எந்த ஏற்றத்தாழ்வுகளும் தெரியாமல் வளர்ந்த ஒரு பிராமின், இந்தியாவின் ஒரு மூலையில் இருக்கும் கிராமத்திற்கு செல்வதும், அங்கு நடக்கும் சம்பவங்களின் மூலம் அசல் இந்தியாவை கண்டுகொள்வதும், அதற்கெதிராக கேள்வியெழுப்பி எதிர்வினை புரிவதும், அதில் அவனுக்கு வரும் தடைகளும்தான் ஆர்ட்டிகள் 15ன் பேசுபொருள். படிநிலைகளின் உச்சத்தில் இருக்கும் ஒரு பிராமினே கூட இந்த சாதிப் படிநிலைகளை எதிர்க்கும்போது எப்படி ஓரங்கட்டப்படுகிறான் என்பது கூட ஒருவித அரசியல்தானே? தனிமனிதனின் சாதியைத் தாண்டி, ஒட்டுமொத்தமாக இந்த அமைப்பின் இருப்புதான் இங்கே பிரதானம் என்பதும், அதை காப்பதற்கு தன்னில் இருந்தே ஒருவனை பலிகொடுக்கக் கூட அது தயங்காது என்பதையும் பேசியிருக்கிறது ஆர்ட்டிகள் 15.

ஒருவனின் சாதியை வைத்து, அவன் தலித் என்று அவனை ஒதுக்குவது எவ்வளவு தவறோ, அதேயளவு தவறு, அவன் சாதியை வைத்து, நீ பிராமின் என்று அவனை ஒதுக்குவது. எதிர்க்கப்பட வேண்டியது சித்தாங்கள்தானே தவிர தனிமனிதர்கள் அல்லர். சாதியால் அடக்குமுறைக்கு ஆளாகி, ஆனால் சமூக அரசியல் லாபங்களுக்காக ஆதிக்க சாதியினருடன் கூட்டு சேர்ந்தால் தாழ்த்தப்பட்டவனாய் இருந்தாலும் அவன் சமூக எதிரிதான். பிறப்பால் ஆதிக்க சாதியாக இருந்தாலும், சமூக ஏற்றத்தாழ்வுகளை தட்டிக்கேட்டு அதை களைய கை கொடுக்கிறான் என்றால், பிராமினாய் இருந்தாலும் அவன் நம் தோழனே. பெரியார் சொல்லிக் கொடுத்த பகுத்தறிவு இதுதானே?

அதன்படி பார்த்தால், தற்கால சூழலில் மிக அவசியமான, அத்தியாவசியமான, நாம் பெருமை கொள்ளத்தகுந்த  நேர்மையான ஒரு படைப்பு ஆர்ட்டிகள் 15. இந்திய சினிமா அசல் பிரச்சினைகளை பேச ஆரம்பித்திருக்கிறது. கைதட்டி வரவேற்போம்.

 

 

 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!

Next Story

டைமிங் காமெடி கைகொடுத்ததா? - 'வடக்குப்பட்டி ராமசாமி' விமர்சனம்!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
vadakkupatti ramasamy movie review

டிக்கிலோனா படம் தந்த வெற்றியின் உற்சாகத்தில் அதே டீம் உடன் இணைந்து மீண்டும் ஒரு நகைச்சுவை படத்தை கொடுத்திருக்கிறார் நடிகர் சந்தானம். இந்தப் படம் இந்த டீமின் முந்தைய படத்தை போல் வரவேற்பை பெற்றதா, இல்லையா?

1970களில் வடக்குப்பட்டி என்னும் கிராமத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாத ராமசாமி என்ற சந்தானம் அந்த கிராமத்தில் இருக்கும் மக்களை தன் சொந்த இடத்தில் கட்டிய கோயில் மூலம் மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி கல்லா கட்டுகிறார். இதைக் கண்ட கிராமத்தின் தாசில்தார் 'ஜெய் பீம்' புகழ் தமிழ் இவர்கள் அடிக்கின்ற கொள்ளையில் தனக்கும் பங்கு வேண்டும் என கேட்கிறார். இதனால் சந்தானத்திற்கும் தமிழுக்கும் மோதல் ஏற்படுகிறது. இவர்களுக்குள் இருக்கும் ஈகோ மோதலால் அந்த கோயில் அரசாங்கத்தால் மூடி சீல் வைக்கப்படுகிறது. சந்தானத்துடன் இணைந்து அந்த ஊர் மக்கள் ஒற்றுமையாக இருந்து சண்டையிட்டுக் கொள்ளாமல் இருந்தால் கோயிலை திறந்து விடுவோம் என அரசாங்கம் முடிவு எடுக்கிறது. இதையடுத்து மீண்டும் அந்த கோவிலை திறக்க சந்தானம் அண்ட் கோ என்னவெல்லாம் செய்கிறது? அதை தடுக்க முயற்சிக்கும் தமிழ் அண்ட் கோ வின் நிலை என்ன ஆனது? என்பதை இப்படத்தின் மீதி கதை.

டிக்கிலோனா படம் பெற்ற வரவேற்பை அப்படியே கண்டினியூ செய்து இந்தப் படத்திலும் அதே வரவேற்பை பெரும்படி ஒரு நிறைவான நகைச்சுவை படத்தைக் கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி. கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருத்தன் அந்த கடவுளை வைத்துக் கொண்டு எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான் என்ற ஒற்றை வரி கதையை வைத்துக் கொண்டு மிகச் சிறப்பான நகைச்சுவையை திரைக்கதை மூலம் பார்ப்பவர்களுக்கு கிச்சுகிச்சு மூட்டி படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி. முதல் பாதி சற்றே மெதுவாக ஆரம்பித்து போகப்போக வேகம் எடுத்து இரண்டாம் பாதி ஜெட் வேகத்தில் பறந்து பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து நிறைவான படம் பார்த்த உணர்வை கொடுத்துள்ளது வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம். ஒரு சந்தானம் படத்தில் நாம் என்னவெல்லாம் எதிர்பார்ப்போமோ அதை எல்லாம் இந்த படம் மீண்டும் ஒருமுறை நிறைவாக கொடுத்து ரசிக்க வைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது.

வழக்கம்போல் நாயகன் சந்தானம் தனது ட்ரேட் மார்க் ஆன்லைன் பஞ்ச் வசனங்களால் ரசிகர்களுக்கு காமெடி விருந்து கொடுத்துள்ளார். இவரது அதிரிபுதிரியான வசன உச்சரிப்பு, காமெடி டைமிங்ஸ் ஆகியவை படத்திற்கு தூணாக அமைந்திருக்கிறது. வழக்கமான நாயகியாக வரும் மேகா ஆகாஷ் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார். சந்தானம் படம் என்றாலே மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கும். அதேபோல் லொள்ளு சபா டீமும் உடன் இருந்து கலக்குவார்கள். அவை அப்படியே இந்தப் படத்தில் பிரதிபலித்து படத்தை வேறு ஒரு காலத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ரவி மரியா, ஜான்விஜய், சேசு, மாறன், கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், தண்டோரா போடும் நபர், இட் இஸ் பிரசாந்த், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் கொண்ட நட்சத்திர பட்டாளம் அவரவருக்கான ஸ்பெஷலில் புகுந்து விளையாடி பார்ப்பவர்களை கிச்சு கிச்சு மூட்டி உள்ளனர். இவர்களின் நேர்த்தியான காமெடி டைமிங்குகளும் ஆன்லைன் பஞ்ச் வசனங்களும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக புல் சுரேஷின் அசிஸ்டன்ட்களாக வரும் நடிகர்கள் அனைவரும் நகைச்சுவையில் பின்னி பெடல் எடுத்திருக்கின்றனர். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரும் மூத்த நடிகர் நிழல்கள் ரவி அவர் பங்குக்கு காமெடியில் அதகலம் செய்து இருக்கிறார். 

தீபக்கின் ஒளிப்பதிவில் வடக்குப்பட்டி கிராமமும் அதை சுற்றி இருக்கும் மலை முகடுகளும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக படம் 1970களில் நடப்பதால் எங்குமே மொபைல் டவர்கள் தென்படாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டு அதே சமயம் நேர்த்தியான காட்சி அமைப்புகளையும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். சான் ரோல்டன் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை நகைச்சுவைக்கு சிறப்பாக உதவி புரிந்துள்ளது.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் கடவுள் நம்பிக்கை இருக்கும் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார். அதேபோல் அவருக்கு ஏற்படும் அச்சுறுத்தலை சமாளிக்கும் விதமாக மெட்ராஸ் ஐ நோயை வைத்து அவர் செய்யும் சேட்டைகளை சிறப்பான திரைக்கதை மூலம் ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக இந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தை கொடுத்து ரசிகர்களை காமெடியில் மீண்டும் ஒருமுறை திக்கு முக்காட செய்து இருக்கின்றனர்.

வடக்குப்பட்டி ராமசாமி - சிரிப்புக்கு கேரன்டி!