Skip to main content

“ஐடி நிறுவனங்களில் சட்டவிரோதப் பணிநீக்கம் தான் நடைபெறுகிறது" - அழகுநம்பி வெல்கின்

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

Alagunambi Welkin talks about lay off of it companies 

 

கொரோனா தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி சற்று அடங்கி உள்ள நிலையில், அதன் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளைக் காரணம் காட்டி உலகம் முழுவதும் உள்ள பெருநிறுவனங்கள் தொடங்கி சிறு நிறுவனங்கள் வரை ஐடி ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் ட்விட்டர் போன்ற நிறுவனங்களும் இதில் அடங்கும். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், இது குறித்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை நிறுவனங்கள் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழகுநம்பி வெல்கின் அளித்த பேட்டியின் விபரம் பின்வருமாறு...

 

ஐடியில் நிரந்தரப் பணிநீக்கம் என்பது இந்தியாவில் செயல்படுத்த முடியாது. இந்திய சட்டத்தின்படி ஒரு நிறுவனம் தனது பணியாளர்களை தற்காலிகப் பணிநீக்கம் மட்டுமே செய்ய முடியும். அதேபோல், அந்நிறுவனம் அதே பணியை அடுத்த முறை தொடங்கும் போது தற்காலிகப் பணிநீக்கம் செய்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றே இந்தியச் சட்டம் சொல்கிறது. ஆனால், இது போன்று எதுவும் நடைபெறுவது இல்லை. தற்போது ஐடியில் நடப்பது நிரந்தரப் பணிநீக்கம். இவ்வாறு நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யும்போது அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு முறையான அறிவிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும். 15 நாட்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். மேலும், அவர்களின் பணி அனுபவத்திற்கு ஏற்றவாறு பணப்பலன்களை வழங்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இவ்வாறு எவ்வித முறைகளும் பின்பற்றப்படுவதில்லை. இந்தியாவில் சட்டவிரோதமாகப் பணிநீக்கம் நடைபெற்று வருகிறது.

 

ட்விட்டர், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணிநீக்கம் செய்வதில் இருந்து நமக்கு தெரியவருவது, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், பிளாக்செயின் டெக்னாலஜி போன்றவற்றில் கொரோனா ஊரடங்கு காலத்தில் புது மார்க்கெட் உத்தியைக் கையாண்டு முதலீடு செய்தனர். வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையால் அதிகப்படியான மக்கள் இதை நோக்கி வந்து விடுவார்கள் என்று தொழில் போட்டியில் முதலீடு செய்து தோல்வியைச் சந்தித்தனர்.  இந்த போட்டியில் யாருமே வெற்றி பெறவில்லை என்பதைத் தான் இந்த கொரோனா காலகட்டம் உணர்த்தியது. முதலீடுகள் மூலம் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், பிளாக்செயின் டெக்னாலஜி போன்றவற்றில் மார்க்கெட்டை பிடிக்க முயன்றனர். ஆனால், உண்மையில் யாரும் அந்த மார்க்கெட்டை பிடிக்கவில்லை.

 

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்சை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் ஒரு வேலை உருமாறும். அதன் மூலம் வேலையில்தான் மாற்றங்கள் இருக்கும். வேலையிழப்பு என்பது இருக்காது. உலக வர்த்தக நிறுவனக் கூற்றுப்படி, பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனம் ஒரு வேலையைச் செய்யவேண்டும் என்றால் 10 சதவீத தொழில்நுட்பமும், 90 சதவீத மனித சக்தியும் தேவைப்படும். ஆனால், தற்போது இந்த விகிதாச்சாரம் 50க்கு 50 சதவீதமாக உள்ளது. தற்போது கல்லூரி முடித்துவிட்டு வருபவர்களால் இந்த தொழில்நுட்பத்தைச் சமாளிக்க முடியும். ஆனால், ஏற்கனவே வேலை செய்பவர்களுக்கு இந்த முறை  சிரமமாக இருக்கும்.

 

கூகுள் ஊழியர்கள் பணிநீக்கம் என்பது சில காலத்திற்குப் பிறகே உண்மையான நிலவரம் வெளியே தெரியவரும். இந்தியாவில் கூகுளை பொறுத்தவரை சட்டத்தின் அடிப்படையில் யாரையும் பணியில் இருந்து நீக்க மாட்டார்கள். தமிழகத்தை விட பொருளாதார  மதிப்பு அதிகம் கொண்ட ஒரு நிறுவனம் அவ்வாறு நீக்க வேண்டும் என்றால் அவர்களின் முதலீட்டில் ஒரு பகுதியை ஊழியர்களுக்காக செலவிட வேண்டி இருக்கும். அதனால், கட்டாயப்படுத்தி பதவியை ராஜினாமா செய்ய வைப்பார்கள். சட்டத்தின்படி தொழிலாளர்களே வேலையை விட்டு சென்றதாகக் கணக்கு கட்டப்படும். அந்த வகையில் தான் தற்போது கூகுளின் முதலீட்டைக் காப்பாற்ற ஒட்டுமொத்தமாக 12000 பேர் வேலையை விட்டுச் சென்றதாகக் காட்டப்படும். ஒட்டுமொத்தமாக பணியில் இருந்து ஊழியர்கள் ராஜினாமா செய்யும்போது தான் இதுகுறித்து வெளியுலகிற்குத்  தெரியும்.

 

இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் வளர்கிறது. ஆனால், வேலைவாய்ப்புகள் உருவாவதில்லை. வேலைவாய்ப்புகள் தேவைக்கு ஏற்ப வளரவில்லை. ஒரு டேட்டா சென்டர் 1000 கோடிக்கு முதலீடு செய்தால் 100 பேருக்கு தான் வேலைவாய்ப்புகள் உருவாகிறது. ஆனால், முன்னர் எல்லாம் 100 கோடிக்கு முதலீடு செய்தால் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். பணிநீக்கத்தின் போது ஊழியர்களையும் அவர்களையும் சார்ந்து இருப்பவர்களுக்கும் எவ்வித அக்கறையும் காட்டப்படுவதில்லை. அதற்கான முயற்சிகள் கூட தொழிற்சங்கம் மூலம் போராட்டம் செய்துதான் கிடைக்கிறது. நிறுவனங்கள் தானாகவே அதை எல்லாம் செய்யவில்லை.

 

ஒரு நிறுவனத்தில் பணிநீக்கம் என்பது பதவியின் அடிப்படையில் குறிப்பிட்டுச் செய்யப்படுவதில்லை. அனைத்து நிலையில் உள்ள ஊழியர்கள் அனைவரும் தான் பாதிக்கப்படுகிறார்கள். எட்டில் இருந்து பத்து வருடங்கள் ஒரு நிறுவனத்தில் பணி செய்த ஊழியர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். முதலீட்டைக் காப்பாற்றிக் கொள்ளவும் லாபத்தை காப்பாற்றிக் கொள்ளவும் தான் இந்தப் பணிநீக்கம். இவற்றுக்கு மேலாக, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மூலம் அதிகப்படியான லாபம் பார்க்க முற்பட்டு அதில் தோல்வி அடைந்ததின் வெளிப்பாடாகத் தான் இந்தப் பணிநீக்கம் நடக்கிறது. ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மூலம் டேட்டா என்ட்ரி அப்பேராட்டர், காமன் சேவை சென்டர், பிபிஓ  போன்ற வேலைகளில் இதனால் பாதிப்பு இருக்கலாம். ஆனால், ஐடியில் முழுவதுமாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எதிர்காலத்தில் சாத்தியம் இல்லை.

 

எந்த ஒரு நிறுவனமும் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டுத் தான் தனக்கான சட்டங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். ஆனால், சேவை நிறுவனங்களுக்கான நிலையாணை இல்லாததால் நிறுவனங்களின் சட்டத்திற்கு உட்பட்டு இவ்வாறு சட்டவிரோதமாகப் பணிநீக்கம் நடைபெறுகிறது. இதனை முறைப்படுத்த வேண்டும். பணிநீக்கம் தொடர்பான விஷயங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஒருபுறம் புதியவர்களை வேலைக்கு எடுத்துக்கொண்டே இருப்பார்கள். மறுபுறம் ஏற்கனவே வேலை செய்துகொண்டு இருப்பவர்களை பணியில் இருந்து தொடர்ந்து நீக்கம் செய்துகொண்டே இருப்பார்கள். இது ஒரு மனிதாபிமானமற்ற செயல். ஒவ்வொரு முறையும் இதுகுறித்து தொழிலாளர் வாரியத்தில் முறையிட வேண்டியுள்ளது. அவர்களும் பெரிய நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கி வருகின்றனர்.

 

 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.