Skip to main content

முதல்வராக கனவு கண்டவர் ஜெயக்குமார்... வாய் திறக்க முடியாத OPS-EPS -எஸ்.எஸ்.சிவசங்கர் கருத்து

Published on 13/08/2020 | Edited on 14/08/2020
admk office

 

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அக்கட்சியின் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துகளைத் தெரிவித்ததையடுத்து சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம், சி.வி. சண்முகம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

 

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து தலைமைக் கழகம் முறையாக அறிவிக்கும். பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் பாஜக தேர்தலைச் சந்தித்தது. அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக அதன் தலைவர் முருகனே கூறிவிட்டார். ஆதாயம் கிடைப்பதற்காக பாஜகவுக்கு சென்ற துரைசாமி கூறியதற்கு எல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை. சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை அதிமுக நிர்வாகிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

 

இதுகுறித்து நக்கீரன் இணையத்தளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

 

s. s. sivasankar

 

அப்போது அவர், இரண்டு நாட்களாகவே அ.தி.மு.க அமைச்சர்கள் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, கரோனா நிவாரணப் பணி என நினைத்து விட வேண்டாம். மைக் மன்னர்களாக மாறி, யார் முதல்வர் வேட்பாளர் என மைக்கை உடைத்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 

விளையாட்டைத் துவக்கி வைத்தவர், பிரபல அமைச்சர் செல்லூர் ராஜு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், யாரோ ஒரு புண்ணியவான் "வரும் தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர்?", எனக் கேட்டுவிட்டார். அண்ணன் செல்லூர் ராஜு, அரசியலமைப்பு வல்லுநர் ஆகிவிட்டார். "வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள்", என புதிய அரசியல் கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

 

உடன் வெகுண்டெழுந்தார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. "எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர்", என அழுத்தமாக அறிவித்தார். அவர் பாவம், இப்போது தான் பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவியை அடித்து, பிடித்துத் திரும்ப வாங்கினார். அதைத் தக்க வைக்க, எடப்பாடி உதவி வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. அவர் அப்படித் தான் சொல்ல வேண்டும்.

 

அடுத்து மைக் முன் வந்தார் வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார். "எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் இணைந்து வெற்றியைப் பெறுவார்கள். எடப்பாடி தான் முதல்வர்", என்று அறிவித்தார். அப்புறம் வழக்கம் போல், வத, வதவென பேசிக் கொண்டே போனார். அவருக்கு எடப்பாடி முதல்வராக இருந்தால் தான், 'தான்' மதுரையை ஆக்கிரமிக்கலாம் என்ற எண்ணம்.

 

ADMK

 

அடுத்து பதினோரு மணி அமைச்சர் ஜெயக்குமார் வந்தார். அவர் அனைவரையும் கண்டித்தார். "யாரும் முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக் கூடாது", என்று அறிவுரை வழங்கினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடிருக்கும் போதே முதல்வராக கனவு கண்டவர் இந்த ஜெயக்குமார். அவர் கனவு அவருக்கு. 

 

கடைசியாக இன்று கே.பி.முனுசாமி மொத்தமாக சீல் வைத்தார். "அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் முதல்வர் வேட்பாளர் குறித்து கவலைப்படவில்லை. முதல்வர் வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் நிர்வாகிகள் கூடி முடிவெடுப்போம்". இவ்வளவு தான் மேட்டர். அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார் கே.பி.முனுசாமி.

 

வெற்றி பெற்ற பிறகு தானே, முதல்வர் வேட்பாளர் எல்லாம். வெற்றிபெற்றால், பார்த்துக் கொள்ளலாம் என முனுசாமி சொல்லி விட்டார். இதைச் சொல்ல அவர் தான் அத்தாரிட்டி. 

 

EPS-OPS


 
அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. இருவரும் முதல்வர் வேட்பாளர் கணக்கில் இருப்பவர்கள். எனவே இவர்கள் இருவரும் வாயைத் திறக்க முடியாது. 

 

அதனால், மூத்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தான் அத்தாரிட்டி. அவர் முடிவை சொல்லியும் விட்டார்.

 

இவர்கள் எல்லோரும் மைக்கை கண்டால் ஆளுக்கொரு கருத்தைச் சொன்னாலும் டெல்லியிருந்து, "என்ன அங்க சத்தம்", என்ற அதட்டல் வந்தால், "சும்மா பேசிக்கிட்டிருந்தோம் டாடி", என அந்தத் திசை நோக்கி விழுந்து விடுவார்கள், கடந்த காலங்களில் டயர் முன் விழுந்ததைப் போல.

 

கிராமத்தில் சொல்வார்கள், "அறுக்க மாட்டாதவன் இடுப்ப சுத்தி அம்பத்தெட்டு அருவாளாம்". இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.