Skip to main content

முதல்வராக கனவு கண்டவர் ஜெயக்குமார்... வாய் திறக்க முடியாத OPS-EPS -எஸ்.எஸ்.சிவசங்கர் கருத்து

Published on 13/08/2020 | Edited on 14/08/2020
admk office

 

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அக்கட்சியின் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துகளைத் தெரிவித்ததையடுத்து சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம், சி.வி. சண்முகம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

 

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து தலைமைக் கழகம் முறையாக அறிவிக்கும். பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் பாஜக தேர்தலைச் சந்தித்தது. அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக அதன் தலைவர் முருகனே கூறிவிட்டார். ஆதாயம் கிடைப்பதற்காக பாஜகவுக்கு சென்ற துரைசாமி கூறியதற்கு எல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை. சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை அதிமுக நிர்வாகிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

 

இதுகுறித்து நக்கீரன் இணையத்தளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

 

s. s. sivasankar

 

அப்போது அவர், இரண்டு நாட்களாகவே அ.தி.மு.க அமைச்சர்கள் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, கரோனா நிவாரணப் பணி என நினைத்து விட வேண்டாம். மைக் மன்னர்களாக மாறி, யார் முதல்வர் வேட்பாளர் என மைக்கை உடைத்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 

விளையாட்டைத் துவக்கி வைத்தவர், பிரபல அமைச்சர் செல்லூர் ராஜு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், யாரோ ஒரு புண்ணியவான் "வரும் தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர்?", எனக் கேட்டுவிட்டார். அண்ணன் செல்லூர் ராஜு, அரசியலமைப்பு வல்லுநர் ஆகிவிட்டார். "வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள்", என புதிய அரசியல் கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

 

உடன் வெகுண்டெழுந்தார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. "எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர்", என அழுத்தமாக அறிவித்தார். அவர் பாவம், இப்போது தான் பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவியை அடித்து, பிடித்துத் திரும்ப வாங்கினார். அதைத் தக்க வைக்க, எடப்பாடி உதவி வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. அவர் அப்படித் தான் சொல்ல வேண்டும்.

 

அடுத்து மைக் முன் வந்தார் வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார். "எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் இணைந்து வெற்றியைப் பெறுவார்கள். எடப்பாடி தான் முதல்வர்", என்று அறிவித்தார். அப்புறம் வழக்கம் போல், வத, வதவென பேசிக் கொண்டே போனார். அவருக்கு எடப்பாடி முதல்வராக இருந்தால் தான், 'தான்' மதுரையை ஆக்கிரமிக்கலாம் என்ற எண்ணம்.

 

ADMK

 

அடுத்து பதினோரு மணி அமைச்சர் ஜெயக்குமார் வந்தார். அவர் அனைவரையும் கண்டித்தார். "யாரும் முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக் கூடாது", என்று அறிவுரை வழங்கினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடிருக்கும் போதே முதல்வராக கனவு கண்டவர் இந்த ஜெயக்குமார். அவர் கனவு அவருக்கு. 

 

கடைசியாக இன்று கே.பி.முனுசாமி மொத்தமாக சீல் வைத்தார். "அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் முதல்வர் வேட்பாளர் குறித்து கவலைப்படவில்லை. முதல்வர் வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் நிர்வாகிகள் கூடி முடிவெடுப்போம்". இவ்வளவு தான் மேட்டர். அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார் கே.பி.முனுசாமி.

 

வெற்றி பெற்ற பிறகு தானே, முதல்வர் வேட்பாளர் எல்லாம். வெற்றிபெற்றால், பார்த்துக் கொள்ளலாம் என முனுசாமி சொல்லி விட்டார். இதைச் சொல்ல அவர் தான் அத்தாரிட்டி. 

 

EPS-OPS


 
அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. இருவரும் முதல்வர் வேட்பாளர் கணக்கில் இருப்பவர்கள். எனவே இவர்கள் இருவரும் வாயைத் திறக்க முடியாது. 

 

அதனால், மூத்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தான் அத்தாரிட்டி. அவர் முடிவை சொல்லியும் விட்டார்.

 

இவர்கள் எல்லோரும் மைக்கை கண்டால் ஆளுக்கொரு கருத்தைச் சொன்னாலும் டெல்லியிருந்து, "என்ன அங்க சத்தம்", என்ற அதட்டல் வந்தால், "சும்மா பேசிக்கிட்டிருந்தோம் டாடி", என அந்தத் திசை நோக்கி விழுந்து விடுவார்கள், கடந்த காலங்களில் டயர் முன் விழுந்ததைப் போல.

 

கிராமத்தில் சொல்வார்கள், "அறுக்க மாட்டாதவன் இடுப்ப சுத்தி அம்பத்தெட்டு அருவாளாம்". இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.