Skip to main content

எடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது!!! -எஸ்.எஸ்.சிவசங்கர்

Published on 23/11/2020 | Edited on 23/11/2020
ddd

 

 

அதிகாரப்பூர்வமாக எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமல், "அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும்", என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியும் அதை வழிமொழிந்தார். எடப்பாடி தப்பி விட்டார், அ.தி.மு.க தான் மாட்டிக் கொண்டது என்று அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, "அடிமை அ.தி.மு.க அரசு, அடிமை அ.தி.மு.க அரசு", என ஓயாமல் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி வந்தபோது, அ.தி.மு.க அமைச்சர்கள் வெகுண்டெழுந்து பதிலளித்து வந்தார்கள். நேற்று ஈ.பி.எஸ்ஸும், ஓ.பி.எஸ்ஸும் இணைந்து அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டு, அமித்ஷா காலில் வீழ்ந்து, உதயநிதி சொல்லை உண்மையாக்கி விட்டார்கள்.

 

சமீப காலம் வரை, "தேர்தல் வரை தான் கூட்டணி இப்போது பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை" என்று சில அமைச்சர்கள் சொன்னார்கள். பிறகு, "தேர்தல் வந்தால்தான் கூட்டணி முடிவாகும்", என வேறு சில அமைச்சர்கள் சொன்னார்கள். பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை என காட்ட சில வித்தைகளை எல்லாம் காட்டினார்கள். 

 

அந்த வித்தையின் உச்சகட்டம் தான், அ.தி.மு.க அரசு 'அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது விசாரணை கமிஷன்' அமைத்தது என்று சொல்லலாம். சூரப்பா ஓர் ஆர்.எஸ்.எஸ் ஆள். அவரை நியமிக்க சொன்னது பா.ஜ.க தலைமை. நியமித்தவர் கவர்னர். அதனால் சூரப்பா மீதான நடவடிக்கையை தங்களுக்கு எதிரானதாக ஆர்.எஸ்.எஸ் கருத வாய்ப்பு. அதன் எதிரொலி தான் அமித்ஷாவின் பயணமும், அ.தி.மு.கவின் அறிவிப்பும்.

 

இதை எப்படி தொடர்பு படுத்த முடியும் என்ற கேள்வி எழலாம். கேள்வி சரி தான், ஆனால் பதில் அது தான்.

 

'குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்க்கும்' என்பது போல, உயர்கல்வித் துறை அமைச்சர் மூலம் ஆளுநரை சீண்டி, பா.ஜ.கவின் ரியாக்ஷன் என்ன என்று பார்த்தார்கள். ரியாக்ஷன் அமித்ஷா வடிவில் வந்து விட்டது.

 

பா.ஜ.க அமைதியாக இருந்திருந்தால், கூட்டணி இல்லை என்பதை நோக்கி முன்னேறி இருப்பார்கள். ஆனால் பா.ஜ.க அமைதி கலைத்து விட்டது.

 

இரண்டு கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைக்கும் முன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் இருக்கும், அதற்கு பல தயாரிப்புகள் நடைபெறும். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் இணைந்த போது அரங்கேறிய காட்சிகளை நினைவு கூர்ந்தால், இந்த கூட்டணி அறிவிப்பின் 'உண்மை நிலை' புரியும்.

 

திடீரென "அமித்ஷா டூரை" அறிவித்தார் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன். "அரசு நிகழ்ச்சி மட்டும்", என்றார். பிறகு, "கட்சி நிகழ்ச்சியும்", என்றார். 

 

அமித்ஷா கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சியை அவசர, அவசரமாக திட்டமிட்டார்கள். தமிழக அரசின் விழா அது. தமிழக அரசின் எந்த துறை நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த அமைச்சர்களை அறிவிக்க விடாமல், தானே அறிவிப்பதும், தானே விழா நடத்துவதும் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பழக்கம், வழக்கம்.

 

ஆனால் இந்த அரசு நிகழ்ச்சிக்கு அமித்ஷாவை சிறப்பு விருந்தினராக அழைத்தது அ.தி.மு.க. அதை தவிர வேறு வழியில்லை எடப்பாடிக்கு.

 

அதுவும் இது எடப்பாடி கையில் இருக்கும் துறையின் நிகழ்ச்சி. இதிலேயே அமித்ஷா சிறப்பு விருந்தினர் என்றால் இது பல செய்திகளை சொல்கிறது. இந்த நிகழ்வு எடப்பாடி கையில் இருந்து 'அதிகாரம்' அமித்ஷா கைக்கு மாறுவதை காட்டும் 'இண்டிகேட்டர்'.  ஜெயலலிதா உடலை வைத்துக் கொண்டு, அவசர அவசரமாக பதவியேற்றது போல் தான், இந்த அமித்ஷாவின் அவசர பயணமும்.

 

அமித்ஷா விமானத்தில் இருந்து இறங்கியதில் இருந்து தங்கும் அறைக்கு செல்லும் வரையும், அங்கிருந்து விழா நடக்கும் இடத்திற்கு சென்ற வரையிலும் இருபுறமும் அ.தி.மு.கவினர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தது, "அமித்ஷா தான் அடுத்த தலைமை" என்பதை காட்டுகிறது.

 

ஜெயலலிதா, எடப்பாடிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு போலவே, அமித்ஷாவுக்கு அளிக்கப்பட்டது இதை வெளிப்படுத்துகிறது.

 

dddd

 

அரசு நிகழ்ச்சிக்கு முன், அமித்ஷாவை ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோர் சந்திக்கவில்லை, நிகழ்ச்சிக்கு பிறகே சந்தித்தனர். அதனால், நிகழ்ச்சிக்கு முன்பாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடக்கவில்லை. பேச்சுவார்த்தை இல்லாமல், நேரடியாக நிகழ்ச்சியில், "அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும்", என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியும் அதை வழிமொழிந்தார்.

 

டெல்லியில் இருந்து வந்த கட்டளைப்படி, "அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி"யை அறிவித்தார்கள் இவர்கள். அடிமைகள் அடிபணிந்ததை அமித்ஷா ஆனந்தமாக தலையசைத்து ஏற்றுக் கொண்டார். 

 

கூட்டணியை அறிவித்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். சில நாட்களுக்கு முன் கவர்னர் டெல்லி சென்றது நினைவிருக்கும், அப்போது கவர்னர் கொடுத்த "சீக்ரெட் பைல்கள்" அ.தி.மு.க அமைச்சர்கள் ஊழல்கள், கொள்ளைகள், கோல்மால்களை பட்டியலிட்டன. அது குறித்த "எச்சரிக்கை தகவல்கள்" தான் எடப்பாடியை மீண்டும் "தெண்டனிட" வைத்தது. அவருக்கு அது பழக்கமானது தானே. ஏற்கனவே சசிகலா காலை நோக்கி தவழ்ந்து தான் முதல்வரானார். இப்போது அமித்ஷா காலில் வீழ்ந்து "ரெய்டுகளில்" இருந்து தப்பி உள்ளார். எடப்பாடி தப்பி விட்டார், அ.தி.மு.க தான் மாட்டிக் கொண்டது. இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Next Story

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Firing has taken place in polling station of Manipur Parliamentary Constituency

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு வரும் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  ஆனால் அதற்குள் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அடையாளம் தெரியாத நபரால் மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.