Skip to main content

சாலையோரம் கிடக்கும் விவசாயக் கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் விவசாயிகள்! 

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

Natural fertilizer


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கரும்பு, நெல், சோளம், கம்பு, காய்கறிகள் மற்றும் பூ வகைகள் என பல்வேறு விதமாக விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.  
 


இந்நிலையில் தற்போது விருத்தாசலம் பகுதியில் எள் சாகுபடி அறுவடை தொடங்கி முடியும் தருவாயில் உள்ளது. அதனால் அறுவடை செய்த எள் செடியில் இருந்து, எள்ளைப் பிரித்தெடுப்பதற்காக, விவசாயிகள் வெப்பம் அதிகமாகக் கிடைக்கக் கூடிய களம் மற்றும் நெடுஞ்சாலைகளில் உலர்த்துகின்றனர். அவ்வாறு விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை பிரித்தெடுப்பதற்காக உலர்த்த முக்கிய இடங்களாக விருத்தாச்சலம்- கடலூர் மற்றும் சிதம்பரம் புறவழிச்சாலைகளைப் பயன்படுத்துகின்றனர். தங்களுக்குத் தேவையான விவசாயப் பொருட்களை மட்டும் எடுத்துவிட்டு  மீதமுள்ள விவசாயக் கழிவுகளைச் சாலையோரம் டன் கணக்கில் குவித்து வைத்துள்ளனர்.  

இதனால் சாலை ஓரங்களில் கிடக்கும் விவசாயக் கழிவுகளை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்துவதால் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான மரங்கள் கருகி நாசமாகிறது.  

அதேசமயம் இந்தக் கழிவுகளை நல்ல இயற்கை உரங்களாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர் விவசாயிகள். அவர்கள்  விவசாய சாகுபடிக்குப் பின் கிடைக்கும் விவசாயக் கழிவுகளை ஆர்கானிக் முறையில் பதப்படுத்தி நல்ல உரமாக மாற்ற இயலும் என்ற நம்பிக்கையில் சாலையோரம் கிடக்கும் அனைத்துக் கழிவுகளையும் வாகனத்தின் மூலம் எடுத்துச் சென்று பதப்படுத்தி நல்ல இயற்கை உரமாக மாற்றுகின்றனர். 

தற்போதுள்ள காலகட்டத்தில் விவசாயிகள் ரசாயன பொருட்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்யும் போது அவர்களுக்குச் செலவுகள் அதிகமாகிறது. மேலும் விளைநிலங்களின் இயற்கை தன்மையும் குறைகிறது. இவற்றைப் போக்க இயற்கையான பொருட்களைப் பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மண்புழு உரங்களுக்கு விவசாயிகள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது. 
 

 


ஒரு கிலோ மண்புழு உரம் எட்டு ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளையக்கூடிய பொருள்களில் கிடைக்கக்கூடிய கழிவுகளைப் பயன்படுத்தி சிறப்பான முறையில் மண்புழு உரம் தயாரிக்க முடியும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் அனைவரும் தங்கள் நிலத்தில் விளையக்கூடிய விவசாயப் பொருட்களை உரங்களாக மாற்றவேண்டும் என்றும் , பொதுச் சொத்துக்களுக்கும், மற்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கும், சாலையோரங்களில் விவசாயிகள் கழிவுகளை ஒதுக்கித் தள்ளுவதைத் தவிர்த்துவிட்டு, அக்கழிவுகளைச் சிறப்பான முறையில் உரமாக மாற்றும் முயற்சியில் அனைத்து விவசாயிகளும் ஈடுபடவேண்டும் என்று இயற்கை விவசாயிகள் கூறுகின்றனர். 
 

http://onelink.to/nknapp


மேலும் தமிழக அரசு சாலையோரம் உள்ள விவசாயக் கழிவுகளை அகற்றுவதைத் தவிர்த்துவிட்டு,  இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கழிவுகளைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான உதவிகளையும், அவற்றைப் பதப்படுத்தி, இயற்கை உரங்கள் உற்பத்தி செய்ய நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்துவதன் மூலம் இயற்கை விவசாயம் மென்மேலும் வளரும் என்றும், அதன்மூலம் நஞ்சில்லா உணவுப் பொருட்கள் எல்லோருக்கும் கிடைக்கும் என்கின்றனர்.  

 

 

 

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.