நெல்லை மாநகர காவல் துறையில் துணை ஆணையராக பணியாற்றும் சரவணன், மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். குற்றங்களை தடுக்க நகர் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்துவது, இயற்கையை பேணி காக்க மரக்கன்று நடுதல், பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடல், 'மக்களை நோக்கி மாநகர காவல்' என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களின் குறைகேட்பு, முதியோர்களுக்கு உதவ 'வேர்களை தேடி' என்ற திட்டம், திருநங்கைகளுக்கு ஊர்க்காவல் படையில் வேலை, சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு சாதுர்யமாக தீர்வு என எல்லா பந்துகளையும் சிக்சருக்கு விரட்டி வருகிறார்.

Advertisment

Advice of IPS Officer's

Advertisment

பக்கம் பக்கமாய் பேசி புரியவைப்பதை விட பக்குவமாக பேசினால் எல்லாரும் புரிந்து கொள்வார்கள் என்பதை உணர்ந்த சரவணன், சூர்யா ரசிகர்களிடம் பேசி 'காப்பான்' திரைப்படம் ரிலீசாகும்போது ரசிகர்கள் சார்பில் 200 வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட் பரிசு அளிக்க ஏற்பாடு செய்தார்.

அடுத்து 'அசுரன் 'படம் வெளிவந்தபோது கட்அவுட் பேனருக்கு ஆகும் செலவில் திருநங்கைகளுக்கு தனுஷ் ரசிகர்கள் மூலம் 2 தையல் மிஷின் வாங்கி கொடுக்க வைத்தார். அதுமட்டுமின்றி தலைக்கவசம் அணிவது அவசியம், ஏடிஎம் பின் நம்பரை யாருக்கும் சொல்லக்கூடாது, திருஷ்டி பூசணிக்காயை ரோட்டில் உடைக்க கூடாது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் மீம்ஸ் உருவாக்கி நெல்லை காவல் துறையின் டுவிட்டர் பேஜ், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

உரத்த குரலில் ஓங்கிச் சொல்வதைவிட,மீம்சில் உருவாக்கும் ஒரு படம் உள்ளத்தில் தெளிவாக பதிந்துவிடும் என்பதை தெளிவாக புரிந்திருக்கிறார் துணை ஆணையர் சரவணன்.. சிறப்பு சார்..!