Skip to main content

நீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் பல வித்தியாசமான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மொத்தமுள்ள 2,57,000 வாக்காளர்களில் 57,000 வாக்காளர்கள் தேர்தல் புறக்கணிப்பு என்கிற ஆயுதத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தொகுதிக்குட்பட்ட கடம்பன்குளம் அருகே உள்ள மூலக்கரைப்பட்டி கிராமத்தில் அ.தி.மு.க.விற்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை பா.முருகைய்யா என்பவர், "நீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது'' என மறித்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். காரியாண்டி என்கிற கிராமத்து பொதுமக்கள் உணவுத்துறை அமைச்சர் காமராஜை "ஓட்டு கேட்டு வரக்கூடாது' என திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். சிவந்திபட்டி என்கிற கிராமத்தில் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் மின்துறை அமைச்சர் தங்கமணி வெளியேறும் சூழல் ஏற்பட்டது. வேப்பன்குளம் என்கிற கிராமத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை மக்கள் துரத்தியடித்திருக்கிறார்கள்.

 

campaign



இப்படி அ.தி.மு.க. அமைச்சர்களும் வேட்பாளரும் தாக்கப்படுவதை கண்ட தமிழக அமைச்சர் ராஜலட்சுமி மூலமாக பேச்சுவார்த்தை ஒன்றை இடையார்குளம் என்கிற கிராமத்தில் நடத்தினர். "தேர்தல் முடிவுக்கு பிறகு உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்'' என்கிற அமைச்சரின் பேச்சுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அங்கிருந்து ராஜலட்சுமியை துரத்தியடித்தார்கள். அதன்பிறகு நாங்குநேரி தொகுதியில் உள்ள பிரதான கிராமங்களான கடம்பன்குளம், நெருப்பல், குத்துக்கல், இடையார்குளம் கிராமங்களில் கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டன. அரசும் தன் பங்கிற்கு அடக்குமுறையை ஆரம்பித்து கறுப்புக்கொடி ஏற்றுபவர்களை கிராமம்தோறும் கைது செய்து வருகிறது.

 

election



ஏன் இந்த போர்க்கோலம் என நாங்குநேரியை சேர்ந்த சு.பாலசுப்ரமணியம் என்பவரை கேட்டோம். "நான் பருத்திக்கோட்டை நாட்டார் சங்க நிர்வாகியாக இருக்கிறேன். எங்க மடத்தின் ஆளுமைக்கு உட்பட்ட 96 கிராமங்கள் நாங்குநேரி தொகுதியில் இருக் கிறது. திருச்செந்தூரில் 1512-ம் ஆண்டு உரு வாக்கப்பட்ட இந்த மடம் பரமக்குடி, அம்பா சமுத்திரம், கடையம் போன்ற சட்டமன்றத் தொகுதிகளிலும் பரவி கிடக்கிறது. நாங்குநேரி தொகுதியில் மட்டுமல்ல எங்கள் மடம் இருக்கிற 14 சட்டமன்றத் தொகுதிகளிலும் கறுப்புக்கொடி ஏற்றியிருக்கிறோம்'' என்கிறார். தொடர்ந்து, ""நாங்கள் தேவேந்திரகுல வேளாளர் என்ற சமூக பிரிவை சேர்ந்த மக்கள். அரசு பதிவுகளில் எங்களை குரும்பர், காலடி, பன்னாடி, பள்ளர், தேவேந்திரகுலத்தான், பாதிரியர், கடையன் என்கிற பெயர்களில்தான் அழைக்கிறார்கள். இந்த ஏழு பிரிவுகளையும் ஒருங்கிணைத்து எங்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைக்க அரசாணை ஒன்று வெளியிட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அதற்காகத்தான் எங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றியிருக்கிறோம் என்றார்.


"அதற்காக நாங்குநேரி இடைத் தேர்தல் களத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்' என கேட்டதற்கு, "கடந்த எம்.பி. தேர்தலின் போது மதுரையில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கலந்து கொண்ட மாநாட்டுக்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். தேவேந்திர குல வேளாளர் மக்களின் வாழ்க்கையை வளப்படுத்த நடத்தப்படும் மாநாடு என்று சொல்லி அந்த மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கலந்து கொண்டார். அதன்பிறகு தென்மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் நிறைந்திருந்த பரமக்குடி, ஒட்டப்பிடாரம், நிலகோட்டை உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடந்தது. அந்த மாநாட்டிலும் "தேர்தல் பிரச்சாரத்திலும் எங்கள் சமுதாய தலைவர்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் முடிந்ததும் ஏழு உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என உங்கள் சமூக மக்களை அழைக்கும் அரசாணை பிறப்பிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அ.தி.மு.க. அமைச்சர்களும் ஏற்கனவே பெயர் மாற்றப்பட்ட சாதிப் பிரிவுகளை சுட்டிக்காட்டி, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்கள்.

வேளாண்மையை குலதொழிலாக செய்து வரும் இனத்தை வேளாளர் என்கிற பெயரோடு இணைத்து தேவேந்திர குல வேளாளர் என நிச்சயம் மாற்றுவார்கள் என ஆசைவார்த்தை கூறினார்கள். அதுவரை அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்காத எங்கள் மக்கள் எம்.பி. தேர்தலிலும் நடந்த இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தோம். எடப்பாடி 9 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். அதில் ஐந்து தொகுதி தேவேந்திர குல வேளாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகள் இன்று எடப்பாடி ஆட்சி நீடிப்பதற்கே நாங்கள் தந்த வாக்குகள்தான் காரணம். ஆனால் எங்களது கோரிக்கையை வசதியாக எடப்பாடி மறந்துவிட்டார். அவருக்கு எங்கள் வலிமையை ஞாபகப்படுத்தவே இடைத் தேர்தலை நாங்கள் ஆயுதமாக பயன்படுத்துகிறோம். அதே நேரம் தி.மு.க.வும் எங்கள் கோரிக்கையை மதிக்கவில்லை. தி.மு.க.விலும் ஆதிக்க சமூக மக்கள் மு.க.ஸ்டாலினை சுற்றி தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்களும் எங்களது வாக்கின் சக்தியை புரிந்து கொள்ளவே இந்த இடைத்தேர்தலை ஆயுதமாக்குகிறோம்'' என்றார்.


தேவேந்திர குல வேளாளர் மத்தியில் உள்ள இளைஞர்களிடம் வேகமாக செயல்படும் குமுளி ராஜ்குமார் "அரசாணை மட்டும் எங்களது கோரிக்கை அல்ல. பட்டியல் இனத்திலிருந்து எங்களை வெளியேற்றி இடஒதுக்கீட்டுடன் பிற்படுத்தப்பட்ட சமுதாய பட்டியலில் இணைக்க வேண்டும். அரசாணை மாநில அரசின் சின்ன செயல், பட்டியல் இன வெளியேற்றம் மத்திய அரசின் செயல்'' என்கிறார் ஆவேசத்துடன்.
 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.