Skip to main content

மனதில் ஓ.பி.எஸ்.! உதட்டில் இ.பி.எஸ்.! - தென்மாவட்ட அ.தி.மு.க.வின் ‘உள்ளே-வெளியே’ ஆட்டம்!

Published on 06/10/2020 | Edited on 06/10/2020

 

ADMK OPS and EPS cm candidate

 

இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். போட்டா போட்டியில், ‘யார் முதல்வர் வேட்பாளர்?’ என்பதை தெரிந்துகொள்ள நாளை (7-ஆம் தேதி) வரையிலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.    

 

ஆனால்.. இருவருக்குமிடையே நடக்கின்ற  ஈகோ ஃபைட், தென் மாவட்டங்களில் சிலரை, ‘உள்ளே-வெளியே’ அரசியல் பண்ண வைத்திருக்கிறது. ‘ஆதரவு எடப்பாடிக்கா? ஓ.பி.எஸ்.ஸுக்கா?’ என்பதை தீர்க்கமாகச் சொல்ல முடியாத பரிதவிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டுவது போன்ற, இரட்டை நிலையை சிலர் எடுத்திருக்கின்றனர்.  

ADMK OPS and EPS cm candidate

 

இத்தகையோரில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பெயர் பலமாக அடிபடுகிறது. விருதுநகர் மாவட்டத்திலிருந்து, ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் போன்றோரை அழைத்துக்கொண்டு, திருமங்கலம் சென்று ஆர்.பி.உதயகுமாரை 5-ஆம் தேதி சந்தித்ததால், சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனும், ஓ.பி.எஸ் ஆதரவாளராகவே பார்க்கப்படுகிறார். 

 

திருமங்கலத்தில் தன்னைச் சந்தித்த, ராஜவர்மன் உள்ளிட்ட விருதுநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளிடம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “விருதுநகர் மாவட்டம் அ.தி.மு.கவின் கோட்டை என்பதை ஓட்டை விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்..” என்று ‘அட்வைஸ்’ செய்துவிட்டு, செய்தியாளர்களிடம் “கரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை சாத்தூர் தொகுதியில் நடத்தவேண்டும் என்பதற்காகவே என்னை ராஜவர்மன் சந்தித்தார்..” என்று சந்திப்புக்கான காரணத்தைக் கூறியிருக்கிறார். ராஜவர்மனோ, “இது தனிப்பட்ட சந்திப்புதான்.. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதலின்படியே கட்சிப் பணியாற்றி வருகிறேன். சந்திப்பில் எந்த உள்நோக்கமும் கிடையாது. நாங்கள் ஒற்றுமையாகவே செயல்பட்டு வருகிறோம்..” என்று விளக்கம் தந்திருக்கிறார்.    ஆனாலும், மனதுக்குள் ஒன்றை (ஓ.பி.எஸ்) வைத்துக்கொண்டு, வெளியில் ‘நாங்கள் பொதுவானவர்கள்’ என்பதுபோல் இவர்கள் காட்டிக்கொள்வதாகவே பேசப்படுகிறது. இதற்கு, வலுவான காரணமும் இருக்கிறது.

 

விருதுநகர் மாவட்டத்தில் நகமும் சதையுமாக ஒட்டிக்கொண்டே இருந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும், ராஜவர்மன் எம்.எல்.ஏ.வும், தற்போது கீரியும் பாம்புமாகிவிட்டனர். ‘மீண்டும் எடப்பாடியே முதல்வர்’ என்ற கோஷத்தை தொடங்கி வைத்தவர் ராஜேந்திரபாலாஜி. அதனால், அரசியல் எதிர்காலக் கணக்கினைக் கூட்டிக் கழித்துப் பார்த்து, பாசத்தை ஓ.பி.எஸ் மீது காண்பித்தார் ராஜவர்மன். குலதெய்வம் கோவிலுக்கோ, ஆண்டாள் கோவிலுக்கோ, ஓ.பி.எஸ் வரும்போதெல்லாம், அசத்தலான வரவேற்பு அளிக்க ராஜவர்மன் தவறுவதில்லை. வெளிப்படையான எடப்பாடி ஆதரவாளர் என்பதால், ஓ.பி.எஸ் வரும் திசையில், ராஜேந்திரபாலாஜி தலைகாட்டுவதே இல்லை.  

 

ADMK OPS and EPS cm candidate

 

‘எப்படியும் விருதுநகர் மாவட்டத்தைப் பிரித்து தன்னையும் ஒரு மாவட்டச் செயலாளராக கட்சித் தலைமை அறிவித்துவிடும்..’ என்ற நம்பிக்கையில் ராஜவர்மன் இருந்துவருகிறார். மாவட்டச் செயலாளர் பதவி பறிபோனாலும், மாவட்ட கழகப் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டு, தன்னை எதிர்ப்பவர்களுக்கு. தொடர்ந்து ‘டஃப்’ கொடுத்து வருகிறார், ராஜேந்திரபாலாஜி.  

 

Ad

 

‘நீங்க அந்த (எடப்பாடி) பக்கம் என்றால்.. நாங்க இந்த (பன்னீர்செல்வம்) பக்கம்!’ என்று ராஜேந்திரபாலாஜியை மனதில் வைத்து அரசியல் செய்வது தனக்கு பிரயோஜனப்படாது என்பதை அறிந்துதான், ‘நாங்கள் ஒற்றுமையாகவே செயல்படுகிறோம்..’ என்று சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேட்டியளித்திருக்கிறார் ராஜவர்மன்.  


“அ.தி.மு.க செயற்குழுவில் எடப்பாடிக்கு எதிராக முழங்கிய அண்ணன் (ஓ.பி.எஸ்.) ‘ராஜேந்திரபாலாஜிய மாவட்டச் செயலாளர் பொறுப்புல இருந்து நீக்கணும்னு நீங்கதான் (இ.பி.எஸ்.) அறிக்கையில் மொதல்ல கையெழுத்துப் போட்டீங்க. நானும் (ஓ.பி.எஸ்.) கையெழுத்துப் போட வேண்டியதாச்சு. அப்புறம், உங்களுக்கு ஆதரவா ட்வீட் போட்டாரு. நீங்க சொன்னபடியெல்லாம் அறிக்கை விட்டாரு. திரும்பவும் அவரையே மாவட்ட கழகப் பொறுப்பாளர் ஆக்கணும்னு நீங்கதான் சொன்னீங்க. உங்களை ஆதரிப்பதற்காக என்னை எதிர்க்கிறார் என்று தெரிந்தும்கூட, ராஜேந்திரபாலாஜியை மாவட்ட கழகப் பொறுப்பாளர் ஆக்குறதுக்கு நான் மறுப்பு தெரிவிக்கல.’ என்று, ‘பகைவருக்கும் அருள்வாய் நன்னெஞ்சே!’ என்கிற ரீதியில் அல்லவா பேசினார் அண்ணன்..” எனச் சுட்டிக்காட்டுகின்றனர், அவரது விசுவாசிகள்.   

 

“அப்படியென்றால், எடப்பாடி ஆதரவு நிலையில் உறுதியாக இருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. ஓ.பன்னீர்செல்வமோ, ராஜேந்திரபாலாஜி மீது வருத்தமோ, கோபமோ கொள்ளாதவராக இருக்கிறார். இப்படி ஒரு குணாதிசயமுள்ள ஓ.பன்னீர்செல்வம் எப்படி ‘வல்லாளகண்டன்’ எடப்பாடிக்கு எதிராக அதிரடி அரசியல் பண்ணுவார்?” எனக் கேட்கின்றனர், நடுநிலையாக உள்ள கட்சி நிர்வாகிகள்.  

 

மேலும் அவர்கள், “நல்லவராக இருந்தால் மட்டும் போதாது! வல்லவராகவும் இருக்க வேண்டும்! ஜெயலலிதா இருந்தபோது வேண்டுமானால், ஓ.பி.எஸ். காட்டிய விசுவாசத்துக்கு (தற்காலிக) மரியாதை (முதலமைச்சர் பதவி) கிடைத்திருக்கலாம். இன்னும் சொல்லப்போனால், ஓ.பன்னீர்செல்வத்தால், வார்த்தைக்கு வார்த்தை அம்மா என்று பணிவோடு கூறப்படும் ஜெயலலிதாவே, எம்.ஜி.ஆரின் கடைசி காலத்தில், அவருக்கு விசுவாசமாக நடந்துகொண்டதில்லை. ‘திண்ணை எப்போது காலியாகும்?’ என்று, தான் முதலமைச்சராக வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். விசுவாசத்தை தூக்கி எறிவதுதான் அரசியல் என்பதைக் கணித்ததாலேயே, ஜெயலலிதாவால் முதலமைச்சராக முடிந்தது. இதையெல்லாம், ஓ.பன்னீர்செல்வம் எப்போது புரிந்துகொள்ளப் போகிறாரோ?” என்கிறார்கள். 

 

Nakkheeran

 

ஓ.பி.எஸ். ஆதரவாளர்களோ “பொறுத்திருந்து பாருங்கள்! பண பலத்தோடு முதலமைச்சர் அதிகாரமும் அவரிடம் (எடப்பாடி) இருக்கிறது. அதனால், காற்று இப்போது அவர் பக்கம் வீசுகிறது. தேர்தலின்போது படிவத்தில் அண்ணன் ஓ.பி.எஸ்.  கையெழுத்தில்லாமல் வேட்பாளரை நிறுத்த முடியுமா?  தமிழகத்தில், சரிபாதி அ.தி.மு.க வேட்பாளர்களாக அண்ணன் கை காட்டுபவர்களே போட்டியிடுவார்கள்.  இந்தக் கணக்குதான் அவர் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருக்காலும் இதில் விட்டுத்தர மாட்டார்.” என்று அழுத்தமாகச் சொல்கின்றனர். 

 

என்ன கணக்கோ? என்ன அரசியலோ? இதுதான், எம்.ஜி.ஆர். சொன்ன அண்ணாயிசமோ? 

 

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.