Skip to main content

அதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

 அ.தி.மு.க.வில் அமைப்பு  ரீதியாக இரு மாவட்டமாக இருந்த கடலூரை தலா 3 சட்ட மன்றத் தொகுதிகள் கொண்ட மூன்று மாவட்டங்களாக இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் அண்மையில் உடைத்தனர். இதில் கிழக்கு மா.செ.வாக சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியனும், மத்திய மா.செ.வாக அமைச்சர் சம்பத்தும், மேற்கு மா.செ.வாக முன்னாள் எம்.பி. அருண் மொழித்தேவனும் நியமிக்கப்பட்டனர். இது பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள நிலையில்,மாவட்டத்தைப் பிரித்து தனது அதிகார எல்லையை சுருக்கிவிட்டதாக பொருமிக் கொண்டிருக்கும் அமைச்சர் சம்பத், அமைச்சர் சண்முகம் கோலோச்சும் விழுப்புரம் மாவட்டத்தின் மீது கண் வைத்திருப்பது புதிய வில்லங்கத்தை உருவாக்கியுள்ளது.

 

admk



இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. தலைமைக் கழகத்தினர், விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு வடக்கு மா.செ.வாக அமைச்சர் சி.வி.சண்முகமும், தெற்கு மா.செ.வாக எம். எல்.ஏ. குமரகுருவும் இருக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை புதிய மாவட் டமாக உருவாக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச் சாமி. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளும், விழுப்புரத்தில் விழுப்புரம், திண்டிவனம்(தனி), வானூர்(தனி), விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளும் அடங்கியுள்ளன.

"தலா 3 சட்டமன்றத் தொகுதிகள் எனக் கடலூரை கட்சி நிர்வாகத்திற்காக 3 மாவட்டங்களாகப் பிரித்தது போல, 6 சட்டமன்றங்களைக் கொண்டுள்ள விழுப்புரம் வருவாய் மாவட்டத்தை கட்சி நிர்வாகத்திற்காக பிரிக்க வேண்டாமா? கள்ளக்குறிச்சிக்கும் இதே அளவுகோல் வேண்டாமா?' என்பதே சம்பத்தின் கேள்வி. சம்பத்தும் சண்முகமும் ஒரே சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள். அதனால் ஈகோவும் இருக்கிறது.
 

admk



கட்சியின் சீனியர்களும் சமீபகாலமாக சீனில் இல்லாதவர்களுமான விழுப்புரம் மாவட்ட முன்னாள் எம்.பி. லட்சுமணனையும், கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் அமைச்சர் மோகனையும் தனித்தனியாக அழைத்துப் பேசியிருக்கிறார் சம்பத். "விழுப்புரத்தையும் கள்ளக்குறிச்சியையும் உடைக்க முதல்வரிடம் கோரிக்கை வையுங்கள். விழுப்புரத்தை உடைப்பதன் மூலம் நீங்களும் (லட்சுமணன்), கள்ளக்குறிச்சியை உடைப்பதன் மூலம் நீங்களும் (மோகன்) மா.செ.வாக முடியும்' என அவர்களை தூண்டிவிட்ட சம்பத், "முதல்வருக்கு நெருக்கமான சேலம் பிரமுகரை சந்தித்து பேசுங்கள்' என வலியுறுத்தியதோடு, "உங்களுக்காக நானும் அவரிடம் பேசுகிறேன்' எனவும் சொல்லியுள்ளார்.


சம்பத்தின் இந்த யோசனையை நடைமுறைப்படுத்த, லஷ்மணனும் மோகனும் ஏக ரகசியமாக களத்தில் குதித்துள்ளனர். தங்கள் மாவட்ட விவகாரத்தில் அடுத்த மாவட்ட அமைச்சர் செய்யும் உள்ளடி வேலையால் சி.வி.சண்முகமும் அவரது ஆதரவாளர்களும் ஏக கடுப்பில் இருக்கிறார்கள். விரைவில் விழுப்புரமும் கள்ளக்குறிச்சியும் உடைக்கப்படலாம். அப்படி உடைந்தால் சண்முகத்தின் அதிகார எல்லை சுருங்குவதோடு, எடப்பாடிக்கும் சண்முகத்துக்கும் மோதல் வெடிக்கும்''’என விவரிக்கிறார்கள்.


கட்சியில் லஷ்மணனுக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையில் அவரது ஆதரவாளர் களெல்லாம் சண்முகத்திடம் ஐக்கியமானார்கள். தற்போது, உடைக்கப்படும் விழுப்புரம் மாவட்டத்துக்கு லஷ்மணன்தான் மா.செ. என்கிற பேச்சு விழுப்புரத்தில் எதிரொலிப்பதால், "மீண்டும் உங்களோடு வந்துவிடுகிறோம்' என லஷ்மணனிடம் பேசி வருகின்றனர் அவரது முன்னாள் ஆதரவாளர்கள். இராமசாமி படையாச்சியார் மணிமண்டபத்தை திறந்து வைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூருக்கு வந்தபோது, கடலூர் எல்லையான ரெட்டிச்சாவடியில் அமைச்சர் சம்பத்தோடு இணைந்து எடப்பாடிக்கு வரவேற்பு தந்துள்ளார் லஷ்மணன். இதனையும் உன்னிப்பாக கவனித்துள்ளது சண்முகம் தரப்பு.

சண்முகத்திற்கு எதிராக சம்பத்தின் இந்த ரகசிய மூவ் குறித்து கிசுகிசுக்கும் ஓ.பி.எஸ். வட்டாரத்தில் விசாரித்தபோது, "விழுப்புரம் வடக்கு மா.செ.வாக ஏற்கனவே இருந்தவர் லஷ்மணன். சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தியபோது அவரோடு லஷ்மணனும் மோகனும் ஐக்கியமானார்கள். இதனால் லஷ்மணனின் மா.செ. பதவி பறிபோனது. இந்த நிலையில் மா.செ. பதவிக்காக இருவரும் ஓ.பி.எஸ்.சிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்'' என்கின்றனர்.

சண்முகத்தின் ஆதரவாளர்களிடம் பேசியபோது, "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெரும் வெற்றியைக் காட்டி, அ.தி.மு.க.வின் இமேஜை பலப்படுத்தியவர் எங்க அமைச்சர். அவரது மாவட்டத்தை பிரிப்பது அவ்வளவு ஈசியா? சண்முகம்தான் சும்மா இருப்பாரா? கடலூரில் உள்கட்சி பிரச்சனைகள் ஏகப்பட்டது இருந்ததால் அதை சமாளிக்க பிரித்தார்கள். விழுப்புரம் அப்படியல்ல. அடுத்த மாவட்டத்தில் உள்கட்சி கலாட்டாவை சம்பத் தூண்டிவிடுவதற்கு சண்முகம் பதிலடி தருவார்'' என்கிறார்கள் அழுத்தமாக.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியின் மா.செ.வாக இருக்கும் குமரகுரு, எடப்பாடியின் நம்பிக்கைக்குரியவர். அதனால்தான், மாவட்ட தொடக்க விழாவில் குமரகுருவின் மகன் நமச்சிவாயத்தை மேடையில் தனக்குப் பின்னால் அமர வைத்திருந்தார் எடப்பாடி. அதனால் கள்ளக்குறிச்சியை அமைப்பு ரீதியாக பிரிக்க மாட்டார். ஒருவேளை பிரித்தால் மா.செ. போட்டியில் எம்.எல்.ஏ. பிரபுவும், கள்ளக்குறிச்சி ஒ.செ. ராஜசேகரனும் மல்லுக்கட்டுவார்கள். இதையும் மீறி சம்பத்தின் சிபாரிசில் மோகனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் சம்பத்துக்கு எதிராக கள்ளக்குறிச்சி ர.ர.க்கள் கச்சைகட்டுவார்கள். இது எடப்பாடிக்கு தலைவலியை கொடுக்கும்'' என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள்.


 

 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.