Skip to main content

உச்சகட்டத்தில் அதிமுக ஒற்றைத் தலைமை கோரிக்கை!!! இன்று என்னவெல்லாம் நடக்கும்???

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெறும் தேர்தல் முடிவாக நின்றுவிடவில்லை. அதிமுகவை பொறுத்தவரை அது இரு தலைமைகளுக்குள் இருந்த ஒற்றுமையின் முடிவாக ஆனது.
 

admk


நாடாளுமன்ற தேர்தல் முடிந்து மோடி இரண்டாம் முறையாக பதவியேற்றார். அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டனர். அதுதான் பிளவின் மையப்புள்ளி. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தனது மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் எனக் கோரினார்.

கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த நிர்வாகியான வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் பதவி கொடுக்கவேண்டும் எனக் கோரினார். பாஜகவுடன் ஓ.பி.எஸ். ரகசிய பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார். இங்குதான் தொடங்கியது பிளவு. கடைசியில் தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் கூட மத்திய அமைச்சரவையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதன்பின் நடந்த காயிதே மில்லத் நினைவு, இப்தார் நோன்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதி ஆகியவற்றிற்கு ஓ. பன்னீர்செல்வமும், ரவீந்திரநாத்தும் சென்றார்கள், ஆனால் எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.க்களோ, எடப்பாடியோ செல்லவில்லை. அதற்கடுத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், மாற்றுகட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு ஆகியவை ஈ.பி.எஸ். இல்லத்தில் நடைபெற்றது.

ஆனால் அதில் ஓ.பி.எஸ். கலந்துகொள்ளவில்லை. கோவையில் பாலம் திறக்கும் நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். கலந்துகொள்ளவில்லை. இப்படியாக நடந்த பல நிகழ்ச்சிகளில் அவர்கள் இருவரும் சேர்ந்து கலந்துகொள்ளவே இல்லை. இது அவர்களின் மனக்கசப்பை, பிரிவை உறுதிபடுத்தியது. 

 

அப்போதுதான் எழுந்தது இந்த ஒற்றைத்தலைமை எனும் கோரிக்கை. அதிமுக நிர்வாகிகளின் மனதில் நாளுக்குநாள் வலுத்த இந்த கோரிக்கையை முதன்முதலில் வெளிப்படையாக கூறியவர் மதுரை எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா. இதுபெரும் சலசலப்பை கட்சிக்குள் ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பல நிர்வாகிகளும் அதை ஆதரித்தும், எதிர்த்தும் தங்களது கருத்துகளை கூறிவந்தனர்.

இந்நிலையில்தான் தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ளும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற இருக்கிறது. ஒரு இடைவெளிக்கு பின்னர் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். கலந்துகொள்ளும் நிகழ்வு இது, ஆனால் இது ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கைக்கான கூட்டம், மேலும் இதில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் குறித்த முடிவுகளும் ஆலோசிக்கப்படுகின்றன. இன்று மதியம் அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரியும். அங்கு ஒட்டப்பட்டிருந்த பல போஸ்டர்களில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வேண்டும் என்ற கோரிக்கை இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்து இருவரில் ஒருவர் என்ற முடிவுடன் அனைவரும் வெளியில்வந்து அறிவிப்பார்கள் அல்லது இருவரும் இணைந்தே செயல்படுவோம் என அறிவிப்பார்கள். மேலும் சில முக்கிய முடிவுகள், அறிவிப்புகள் வெளிவரும். 

 

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.