Skip to main content

ஒரு 'ட்ரம்' விலை என்ன தெரியுமா? எல்லாப் பொருளிலும் ஊழல்... கரோனாவை வைத்து அதிர வைக்கும் ஊழல் ரிப்போர்ட்!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

admk

 

உலகத்தையே முடக்கிப் போட்டிருக்கிற கரோனா, தமிழகத்தில் ஊராட்சி நிர்வாகங்களைச் செழிப்பாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு கரோனாவைக் காட்டி கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறார்கள். இப்படிச் சொல்வது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்பது தான் வினோதமானது. அப்படி என்ன கொள்ளை நடக்கிறது கொஞ்சம் சொல்லுங்களேன் என்றோம் புதிய உள்ளாட்சி பிரதிநிதிகளிடம்.

 

கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்குக் கொடுக்கிற ஒரு மாஸ்க் விலை ரூ.3 தான். ஆனால் அரசாங்கம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா ஆயிரம், 2 ஆயிரம் என்று அனுப்பிவைத்தது. அதன்பிறகு அனுப்பிய பில்லில் ஒரு மாஸ்க் விலை ரூ.15. அதேபோல ரூ.550 மதிப்புள்ள பிளிச்சிங் பவுடர் மூட்டை விலை ரூ.2,550, கிருமிநாசினி ஒரு லிட்டர் விலை ரூ. 500தான். ஆனால் அரசாங்கம் வாங்கியனுப்பியது ரூ. 2,500.

 

கிருமிநாசினி தெளிக்க ஊராட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு பவர் ஸ்பிரேயர் கொடுத்தாங்க. அதன் விலை ரூ. 8 ஆயிரம்தான். ஆனால் அரசாங்கம் அனுப்பிய பில்லில் ஒரு ஸ்பிரேயர் விலை ரூ. 22,500. இப்படி ஒவ்வொரு பொருளிலும் கொள்ளைமேல் கொள்ளையடித்திருக்கிறார்கள்.

 

bill

 

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் வடகாடு ஊராட்சி வழியாகச் சென்ற போது 140 லிட்டர் ட்ரம்கள் பல இடங்களில் வைத்திருப்பதைப் பார்த்து அந்த ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டனிடம் இந்த ட்ரம்கள் என்ன விலைக்கு வாங்கினீர்கள் என்றோம். ஒரு செட் ரூ. 1,500-க்கு செய்தேன் என்றார். அப்படின்னா உங்க ஊராட்சிக்கு ஒன்றியத்திலிருந்து கொடுத்த ட்ரம் விலை என்ன தெரியுமா? என்றோம். அதற்கான பில் இன்னும் வரல என்றவரிடம் அதன் விலை ரூ. 19,376 என்றதும் அதிர்ந்துபோனார்.

 

ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன், "இப்படித்தான் எல்லா பொருளிலும் கொள்ளை நடந்திருக்கிறது. அந்த பில்களை வாங்கிக்கொண்டிருக்கிறோம். அனைத்து பில்களையும் வாங்கிச் சேர்த்து தி.மு.க. வழங்கறிஞர் பிரிவு வெங்கடேசன் மூலம் வழக்குத் தொடுக்க தயாராகி வருகிறோம்'' என்றார்.

 

அமைச்சர் விஜயபாஸ்கரின் அன்னவாசல் ஒன்றியத்திலுள்ள 34 ஊராட்சி களுக்கும் 34 தெர்மாமீட்டர் வாங்கியது ரூ. 2,68,922. அதாவது ஒரு தெர்மாமீட்டர் விலை ரூ. 7,909. ஆனால் அதன் உண்மை விலை ரூ. 2,500 முதல் 3 ஆயிரம்தான்.

 

இந்த நிலையில்தான் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் நடந்த கவுன்சில் கூட்டத்திலும் பிரச்சனையைக் கிளப்பியுள்ளனர் கவுன்சிலர்கள். கறம்பக்குடி ஒன்றிய சேர்மன் உள்ளிட்ட பல சேர்மன்கள் எங்களிடம் எதையும் கேட்காமல் அதிகாரிகளே தன்னிச்சையாகச் செயல்பட்டு விலை அதிகமாக பொருள் வாங்கியிருக்கிறார்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். அறந்தாங்கி, ஆவுடையார் கோயிலில் கேள்விமேல் கேள்வி எழுப்பிய கவுன்சிலர்களுக்கு அரசு வழிகாட்டுதலின்படியே வாங்கப்பட்டதாக பதில் சொன்னார்கள். பேராவூரணி ஒன்றியத்தில் அ.தி.மு.க ஒ.செ.வும், ஒன்றியக் கவுன்சிலருமான துரைமாணிக்கம் இதுபற்றி கேள்வியெழுப்ப, அரசு சொன்ன நிறுவனங்களில்தான் விலைகுறைவாக கொள்முதல் செய்திருக்கிறோம் என்று அசால்ட்டாக பதில் கூறியுள்ளார்.

 

admk

 

ஆனால் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சில ஊராட்சிமன்றத் தலைவர்கள் மட்டும் விலை அதிகமாக உள்ளது. சரியான விலைக்கு பில் அனுப்பினால் மட்டுமே செக் கொடுப்போம் என்று உறுதியாக இருக்கிறார்கள். இத்தனை கொள்ளைகளுக்கும் பொருட்கள் வாங்கியதாக பில்களில் காட்டப்பட்டுள்ள நிறுவனங்கள் அத்தனையும் லெட்டர் பேட் நிறுவனங்களாகவே உள்ளன.

 

தி.மு.க. வழக்குத் தொடர்ந்து மக்கள் பணத்தை மீட்க முயற்சிப்பது ஒருபக்கம் என்றால் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தானாக முன்வந்து விளக்கம் கேட்கும் நீதிமன்றம் கரோனா கொள்ளை குறித்தும் விளக்கம் கேட்டு மக்களுக்கு சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

 

http://onelink.to/nknapp

 

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் விளக்கம் கேட்ட போது...

 

"டி.ஆர்.டி.யே, மற்றும் அரசு வழிகாட்டுதல் படி ஒவ்வொரு ஒன்றியத்திலும் தங்களின் நிதி ஆதாரத்தைக் கணக்கில் கொண்டு பொருள் வாங்கிக்கொள்ள சொல்லியிருக்கிறோம். அதில் அரசு வழிகாட்டி மதிப்புகளும் உள்ளது. பவர் ஸ்பிரே தரத்திற்கு ஏற்ப விலை கொடுக்கப்பட்டிருக்கும். ட்ரம் பற்றிய தகவல் புதிதாக உள்ளது அது பற்றி விசாரிக்கிறேன்'' என்றார்.

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.