Skip to main content

ஒரு 'ட்ரம்' விலை என்ன தெரியுமா? எல்லாப் பொருளிலும் ஊழல்... கரோனாவை வைத்து அதிர வைக்கும் ஊழல் ரிப்போர்ட்!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

admk

 

உலகத்தையே முடக்கிப் போட்டிருக்கிற கரோனா, தமிழகத்தில் ஊராட்சி நிர்வாகங்களைச் செழிப்பாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு கரோனாவைக் காட்டி கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறார்கள். இப்படிச் சொல்வது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்பது தான் வினோதமானது. அப்படி என்ன கொள்ளை நடக்கிறது கொஞ்சம் சொல்லுங்களேன் என்றோம் புதிய உள்ளாட்சி பிரதிநிதிகளிடம்.

 

கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்குக் கொடுக்கிற ஒரு மாஸ்க் விலை ரூ.3 தான். ஆனால் அரசாங்கம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா ஆயிரம், 2 ஆயிரம் என்று அனுப்பிவைத்தது. அதன்பிறகு அனுப்பிய பில்லில் ஒரு மாஸ்க் விலை ரூ.15. அதேபோல ரூ.550 மதிப்புள்ள பிளிச்சிங் பவுடர் மூட்டை விலை ரூ.2,550, கிருமிநாசினி ஒரு லிட்டர் விலை ரூ. 500தான். ஆனால் அரசாங்கம் வாங்கியனுப்பியது ரூ. 2,500.

 

கிருமிநாசினி தெளிக்க ஊராட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு பவர் ஸ்பிரேயர் கொடுத்தாங்க. அதன் விலை ரூ. 8 ஆயிரம்தான். ஆனால் அரசாங்கம் அனுப்பிய பில்லில் ஒரு ஸ்பிரேயர் விலை ரூ. 22,500. இப்படி ஒவ்வொரு பொருளிலும் கொள்ளைமேல் கொள்ளையடித்திருக்கிறார்கள்.

 

bill

 

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் வடகாடு ஊராட்சி வழியாகச் சென்ற போது 140 லிட்டர் ட்ரம்கள் பல இடங்களில் வைத்திருப்பதைப் பார்த்து அந்த ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டனிடம் இந்த ட்ரம்கள் என்ன விலைக்கு வாங்கினீர்கள் என்றோம். ஒரு செட் ரூ. 1,500-க்கு செய்தேன் என்றார். அப்படின்னா உங்க ஊராட்சிக்கு ஒன்றியத்திலிருந்து கொடுத்த ட்ரம் விலை என்ன தெரியுமா? என்றோம். அதற்கான பில் இன்னும் வரல என்றவரிடம் அதன் விலை ரூ. 19,376 என்றதும் அதிர்ந்துபோனார்.

 

ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன், "இப்படித்தான் எல்லா பொருளிலும் கொள்ளை நடந்திருக்கிறது. அந்த பில்களை வாங்கிக்கொண்டிருக்கிறோம். அனைத்து பில்களையும் வாங்கிச் சேர்த்து தி.மு.க. வழங்கறிஞர் பிரிவு வெங்கடேசன் மூலம் வழக்குத் தொடுக்க தயாராகி வருகிறோம்'' என்றார்.

 

அமைச்சர் விஜயபாஸ்கரின் அன்னவாசல் ஒன்றியத்திலுள்ள 34 ஊராட்சி களுக்கும் 34 தெர்மாமீட்டர் வாங்கியது ரூ. 2,68,922. அதாவது ஒரு தெர்மாமீட்டர் விலை ரூ. 7,909. ஆனால் அதன் உண்மை விலை ரூ. 2,500 முதல் 3 ஆயிரம்தான்.

 

இந்த நிலையில்தான் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் நடந்த கவுன்சில் கூட்டத்திலும் பிரச்சனையைக் கிளப்பியுள்ளனர் கவுன்சிலர்கள். கறம்பக்குடி ஒன்றிய சேர்மன் உள்ளிட்ட பல சேர்மன்கள் எங்களிடம் எதையும் கேட்காமல் அதிகாரிகளே தன்னிச்சையாகச் செயல்பட்டு விலை அதிகமாக பொருள் வாங்கியிருக்கிறார்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். அறந்தாங்கி, ஆவுடையார் கோயிலில் கேள்விமேல் கேள்வி எழுப்பிய கவுன்சிலர்களுக்கு அரசு வழிகாட்டுதலின்படியே வாங்கப்பட்டதாக பதில் சொன்னார்கள். பேராவூரணி ஒன்றியத்தில் அ.தி.மு.க ஒ.செ.வும், ஒன்றியக் கவுன்சிலருமான துரைமாணிக்கம் இதுபற்றி கேள்வியெழுப்ப, அரசு சொன்ன நிறுவனங்களில்தான் விலைகுறைவாக கொள்முதல் செய்திருக்கிறோம் என்று அசால்ட்டாக பதில் கூறியுள்ளார்.

 

admk

 

ஆனால் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சில ஊராட்சிமன்றத் தலைவர்கள் மட்டும் விலை அதிகமாக உள்ளது. சரியான விலைக்கு பில் அனுப்பினால் மட்டுமே செக் கொடுப்போம் என்று உறுதியாக இருக்கிறார்கள். இத்தனை கொள்ளைகளுக்கும் பொருட்கள் வாங்கியதாக பில்களில் காட்டப்பட்டுள்ள நிறுவனங்கள் அத்தனையும் லெட்டர் பேட் நிறுவனங்களாகவே உள்ளன.

 

தி.மு.க. வழக்குத் தொடர்ந்து மக்கள் பணத்தை மீட்க முயற்சிப்பது ஒருபக்கம் என்றால் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தானாக முன்வந்து விளக்கம் கேட்கும் நீதிமன்றம் கரோனா கொள்ளை குறித்தும் விளக்கம் கேட்டு மக்களுக்கு சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

 

http://onelink.to/nknapp

 

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் விளக்கம் கேட்ட போது...

 

"டி.ஆர்.டி.யே, மற்றும் அரசு வழிகாட்டுதல் படி ஒவ்வொரு ஒன்றியத்திலும் தங்களின் நிதி ஆதாரத்தைக் கணக்கில் கொண்டு பொருள் வாங்கிக்கொள்ள சொல்லியிருக்கிறோம். அதில் அரசு வழிகாட்டி மதிப்புகளும் உள்ளது. பவர் ஸ்பிரே தரத்திற்கு ஏற்ப விலை கொடுக்கப்பட்டிருக்கும். ட்ரம் பற்றிய தகவல் புதிதாக உள்ளது அது பற்றி விசாரிக்கிறேன்'' என்றார்.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.