Skip to main content

நிரந்தர முதல்வர் இ.பி.எஸ்.! நாளைய முதல்வர் ஓ.பி.எஸ்.! -கே.டி.ராஜேந்திரபாலாஜி Vs செல்லூர் ராஜு!

Published on 11/08/2020 | Edited on 11/08/2020

 

eps

 

“எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது ‘நானே முதல்வர் வேட்பாளர்’ என்று சொல்லவில்லையே? ஜெயலலிதாவையும்கூட, மக்கள்தான் முதல்வராக வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அ.தி.மு.க. வரலாறு இது. அதனால், சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, யாரை முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறார்களோ, அவரே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்..” என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதற்கும்,  மறுநாளே,  ‘எடப்பாடியாரே என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டே, களத்தைச் சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம்! களம் காண்போம்! வெற்றிகொள்வோம்! 2021-ம் நமதே!’ என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ‘ட்வீட்’ போட்டதற்கும், வலுவான அரசியல் பின்னணி உள்ளது என, அ.தி.மு.க. உள்விவகாரங்களை விவரிக்கின்றனர், ஆளும்கட்சியினர். 

 

மூன்று தடவை தமிழகத்தின் முதலமைச்சராக, ஓ.பன்னீர்செல்வம்  பதவி வகித்த மொத்த நாட்களின் எண்ணிக்கை 469 என்றால், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியேற்று 1,270 நாட்களுக்கு மேல் ஆகிறது. மூன்று முறை முதல்வர் என்பது மேலோட்டமாக பெரிதாகவே தெரியும். ஒரே ஒரு தடவை என்றாலும், ஓ.பன்னீர்செல்வத்தோடு ஒப்பிடும்போது, அவரைக் காட்டிலும்  மூன்று மடங்கு அதிகமான நாட்களில், முதலமைச்சராக தன்னை நிலைநிறுத்தியபடி இருக்கிறார், எடப்பாடி பழனிசாமி. 

 

ஏன் இந்த நாள் கணக்கு என்றால், தன்னிடமிருந்து முதலமைச்சர் பதவியை தட்டிப் பறித்தவர் எடப்பாடி என்பதும்,  துணை முதல்வர் ஆவதற்காக தர்மயுத்தம் நடத்த வேண்டிய நிலைக்கு தான் தள்ளப்பட்டதும்,  ஓ.பன்னீர்செல்வத்தின் மனதை விட்டு அகலாதவை. அதை ஓ.பி.எஸ். வெளிக்காட்டாவிட்டாலும், அவரது விசுவாசிகள் வெளிக்காட்டாமல் இருப்பதில்லை. குறிப்பாக தேனி மாவட்ட ஆளும்கட்சியினர் ‘என்றும் ஒரே தலைவர் ஓ.பி.எஸ்.’ என்றும், ’நமது தலைவர்! நாளைய முதல்வர்!’ என்றும், ‘மக்கள் நலனே தன் நலன் என்று மக்களுக்காக உழைக்கும் ஒரே தலைவர்’ என்றும் அவரது புகழ் பாடாத நாளில்லை.  


சசிகலா சிறை சென்றார்; எடப்பாடி முதலமைச்சரானார்; டிடிவி தினகரன் அ.ம.மு.க. என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். அதன்பிறகு, அ.தி.மு.க.வில் முன்பிருந்த ‘ஒரே ஜாதி ஆதிக்கம்’ ஆட்டம் கண்டது. ஆனாலும், தென்மாவட்ட அ.தி.மு.க.வில், ‘எடப்பாடி நம்மாளு இல்ல..’ என்ற எண்ணம் அங்கங்கே தலை தூக்கியது. ‘என்றும் ஒரே தலைவர்!’ என ஓ.பன்னீர்செல்வத்தின் புகழ் பாடுவதெல்லாம், அதன் வெளிப்பாடுதான்! அவரும் அதனை ரசிப்பதால், ‘நாளைய முதல்வர்’ என விசுவாசிகள் அவரைக் கொண்டாடுகின்றனர்.  

 

ktr

 

தென்மாவட்டங்களில் சிலரது எண்ண ஓட்டங்கள், தனக்கு எதிராக இருப்பதை எடப்பாடி அறியாதவரல்ல. அதனாலேயே, ஜாதி கடந்து, தென்மாவட்ட மக்களின் மனதில் தன்னுடைய முகம் அழுத்தமாகப் பதிய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறார். தமிழகம் முழுவதும்  மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவராகவும், முதலமைச்சராகவும், தான் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக, தென் மாவட்டங்களுக்கும் விசிட் அடித்து, ரொம்பவே மெனக்கெடுகிறார். 

 

எடப்பாடியின் இந்த ‘கெட்டிக்காரத்தனம்’ தென்மாவட்ட ஆளும்கட்சி பிரபலங்கள் சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. தங்களுக்கோ, தாங்கள் சிபாரிசு செய்யும் விசுவாசிகளுக்கோ, வரும் தேர்தலில் சீட் தராவிட்டால், தங்களின் எதிர்காலம் என்னாவது என்று கவலைகொள்ள வைத்திருக்கிறது. ‘வடக்கே நீங்கன்னா.. தெற்கே நாங்கதான்..’ என்பதை அழுத்தமாகச் சொல்வதற்காகவே, செல்லூர் ராஜு போன்றவர்கள், ‘எடப்பாடி ஒன்றும் நிரந்தர முதல்வரல்ல!’ என்பதைச் சூசகமாக, பேட்டி மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.   

 

ஜாதி கிடக்கட்டும்.. ’ஒரே தலைவர்’ எனச் சொல்வதற்கு, அ.தி.மு.க.வில் பொருத்தமானவர் யாரேனும் உண்டா என்பதைப் பார்ப்போம்! கூவத்தூரில் என்ன நடந்தது? பணம்தானே பிரதானம்! பெயரிலேயே செல்வத்தை வைத்திருக்கும் ஓ.பி.எஸ்., இதனை அறியாதவரா? வாரியிறைக்க மனம் இல்லையே? இந்தச் சிக்கனம்தான் அவரை பலவீனப்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவோ, சசிகலாவோ, யாரோ ஒருவர் பின்னணியில் இருந்து இயக்கினால் மட்டுமே செயல்படக்கூடிய முதலமைச்சராக ஓ.பி.எஸ். இருந்திருக்கிறார். எடப்பாடி அப்படிக் கிடையாது. அவரது பாணியே தனி. சசிகலா காலில் விழவும் செய்தார். நேரம் பார்த்துத் தூக்கி எறியவும் செய்தார். டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்கியதெல்லாம் எடப்பாடியின் துணிச்சலே!

 

http://onelink.to/nknapp

 

கட்சி விதிகளின் பெயரால், எடப்பாடிக்கு  ‘செக்’ வைக்கும் விதமாக, தென்மாவட்ட அமைச்சரான செல்லூர் ராஜுவால் பேச முடியுமென்றால், எடப்பாடியின் விசுவாசியான, அதிரடிக்கு பெயர்போன கே.டி.ராஜேந்திரபாலாஜி சும்மாவா இருப்பார்? ஏற்கனவே, விருதுநகர் மாவட்ட ஜாதி அரசியலால் வெறுத்துப்போய் இருக்கும் அவர், சரியாக இதனைப் பயன்படுத்திக் கொண்டார். ‘எடப்பாடியே என்றும் முதல்வர்!’  என்று ‘ட்வீட்’ தட்டிவிட்டார், பதிலடியாக! 

 

சீனியர் அமைச்சர்கள் அமைதி காக்க.. ‘மோடி டாடி’ கே.டி.ராஜேந்திரபாலாஜியும், ‘தெர்மாகோல் கண்டுபிடிப்பு’ செல்லூர் ராஜுவும், காமெடி டிராக்கில் இருந்து விலகி, சீரியஸ் அரசியல் பண்ணுவது, விந்தையாகத்தான் இருக்கிறது.   

 

உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை அறிந்தும் அறியாததுபோல் நடப்பதுதானே அரசியல்! 

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.