Skip to main content

இப்பத்தான் ஜனநாயகமே வந்திருக்கு... - காமராஜர் சொன்னது எப்போது தெரியுமா?

Published on 15/07/2020 | Edited on 16/07/2020
kamarajar

 

நடிகர் ராஜேஷ் பரந்த வாசிப்பும், பழமையான தகவல்களும் நிறைந்த பொக்கிஷமாகத் திகழ்பவர். மேடைகளிலும், யூ-ட்யூப் சேனல்களிலும் தமிழர்களின் பண்பாடு, சினிமா, அரசியல் வரலாறு, ஜோதிடம் போன்ற பல தளங்களில் செறிவான உரைகளை ஆற்றி வருகிறார். அவர் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் குறித்து ஒரு மேடையில் ஆற்றிய உரையிலிருந்து...

 

நாட்கள் ஆக ஆக காமராஜரின் புகழ் அதிகரிக்கிறது என்று நிறைய பேர் இன்று சொல்கின்றனர். நான் அப்படி நினைக்கவில்லை. நாட்கள் ஆக ஆகத்தான் நமக்கு அனுபவம் வருகிறது. மற்ற தலைவர்களை பார்க்கிறோம். அதனால் காமராஜரைப் போற்றுகிறோம். 9ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது பெரிய விசயமில்லை. அதற்கு இணையாக 9 ஆண்டுகள் சிறையிலும் இருந்திருக்கிறார். நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதுதான் முதலில் காமராஜரைப் பார்த்தேன். எங்கள் தலைமுறையில் உள்ள நாங்கள் எல்லாம் இன்று படித்திருக்கிறோம் என்றால் அதற்கு காமராஜர்தான் காரணம். அந்நன்றியை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம். காமராஜருக்கும் நேருவுக்கும் இடையேயான முதல் சந்திப்பே சுவாரசியமானது. சத்தியமூர்த்தி அவர்களின் வீட்டில் காமராஜர் அசந்து குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அங்கு வந்த நேரு "யாரு இவர்? இப்படி குறட்டை விட்டுக்கிட்டு இருக்கார்" என்று கேட்க சத்தியமூர்த்தி அதற்கு, "இவர் பெயர் காமராஜ். இரவு முழுக்க போஸ்டர் ஒட்டிட்டு வந்து அசந்து தூங்குகிறார்" என்று சொல்லியிருக்கிறார். "இவரைப்போல ஒரு 100 பேர் இந்தியாவில் இருந்தால் வெள்ளைக்காரன் உடனே நாட்டைவிட்டு ஓடிவிடுவான்" என்றும் சொல்லியிருக்கிறார். காமராஜருக்கும் நேருவுக்கும் இடையேயான பிணைப்பு இப்படித்தான் தொடங்கியது.

 

சென்னையில் இருந்து திருச்சிக்கு ஒரு முறை காரில் செல்கிறார். அப்போது தன்னுடைய உதவியாளர்களை அழைத்து சாலையில் செல்கிற இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கனரக வாகனங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுங்கள் என ஒரு வேலையை ஒவ்வொருவருக்கும் பிரித்துக் கொடுக்கிறார். திரும்பி வரும் போதும் அதே போல் கணக்கெடுக்கச்  சொல்லுகிறார்.   சென்னை வந்தவுடன் கணக்கெடுத்த புள்ளி விவரம் அவரிடம் கொடுக்கப்படுகிறது. உடனே அதிகாரிகளை அழைத்து "திருச்சி இங்கிருந்து எவ்வளவு தூரம்? வழியில் எத்தனை பெட்ரோல் பங்க்குகள் உள்ளன?" என கேட்கிறார். அதிகாரிகள் விவரங்கள் அளித்தவுடன் "இத்தனை வண்டிகள் ஒரு நாள் போய் வருகின்றன. அப்படி என்றால் இன்னும் எத்தனை பெட்ரோல் பங்க்குகள் தேவைப்படும் என கணக்கு போட்டுச் சொல்லுங்கள்" என உத்தரவிடுகிறார். தேவையான பெட்ரோல் பங்க்குகளின் எண்ணிக்கை விவரம் கொடுக்கப்பட்ட உடனே அத்தனை பெட்ரோல் பங்க்குகள் திறப்பதற்கும் அனுமதி கொடுத்து உத்தரவிடுகிறார். ஒரு பயணத்தின் போது கூட மக்களைப் பற்றி எப்படி சிந்தித்திருக்கிறார் பாருங்கள். இன்றைய தலைவர்கள் பயணம் போனால் அவர்கள் வழியில் உள்ள இடங்களை பார்த்து எப்படி சிந்திப்பார்கள் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்.

 

rajesh

 

அரசியல் தலைவர்களில் ஈடு இணையில்லாதவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். காமராஜரை பார்க்கும் வாய்ப்பு எனக்கு சீனிவாசன் அவர்கள் வீட்டுக் கல்யாணத்தின் போது கிடைத்தது. எந்த சீனிவாசன் தன்னை எதிர்த்து நின்று வெற்றி பெற்றாரோ அவர் வீட்டுக் கல்யாணத்திற்கு வருகிறார். கலைஞர்தான் அப்போதைய முதலமைச்சர். காமராஜர் உள்ளே வரும் போது அனைவரும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர். எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி எதிரிக்கட்சியாக இருந்தாலும் அவர்கள் வீட்டுத் திருமணத்திலிருந்து இறப்பு வரை எல்லாவற்றிலும் கலந்து கொள்வார். அந்த அளவிற்கு எல்லாரையும் நேசிக்கக் கூடியவர் பெருந்தலைவர்.

 

திமுக ஆட்சிக்கு வந்து ஆறுமாதம் ஆகியிருந்தது. விநாயகம் என்பவர் காமராஜரிடம் ஒரு முறை "திமுகவினர் செய்த முறைகேடுகளை பட்டியலிட்டு வைத்துள்ளேன். சட்டமன்றத்தில் நாளை கேள்வி எழுப்பப் போகிறேன்" என்றார். "நாளை சட்டமன்றத்திற்கு போகும் முன் அதைக் கொண்டு வா" என்றார் காமராஜர். மறுநாள் ஆவலுடன் அவர் அதைக் கொண்டுவர காமராஜர் வாங்கி அதனைத் தீயிட்டுக் கொளுத்தி விடுகிறார். விநாயகம் அதிர்ச்சி ஆகிறார். "அவனே இப்பத்தான் ஆட்சிக்கு வந்துருக்கான்... ஒரு வருஷம் ரெண்டு வருஷம் விடுங்குறேன்.. அதுக்குள்ள என்ன குற்றம் சாட்டப் போற" என்றார். இந்தப் பெருந்தன்மை யாருக்கு வரும்?

 

சீனிவாசன் வெற்றி அறிவிக்கப்பட்டவுடன் அனைவரும் அழுது கொண்டே வந்து காமராஜரிடம் "சின்னப் பையன் கிட்ட தோத்துட்டோமேயா" என்றனர். காமராஜர் சிரித்தவாறே "இப்பத்தான் ஜனநாயகமே வந்திருக்கு.." என்று எளிமையாக அதைக் கடந்து சென்றார். யாராவது தொழில் அதிபர்கள் அவரை சந்திக்க வேண்டும் என்று அனுமதி கேட்டால் அதற்காக தனியாக நேரம் எல்லாம் ஒதுக்க மாட்டார். 'நாளைக்கு நான் பாண்டியன் எக்ஸ்பிரஸ்ல போறேன். ரயில்ல வந்துருங்க பேசிக்கலாம்' என்பார். பயணிக்கும் ரயிலிலேயே சந்திப்பு நடக்கும். சந்திப்பு முடிந்தவுடன் தொழில் அதிபர்கள் வழியிலேயே இறங்கிக்கொள்வார்கள். காமராஜர் தன்னுடைய பயணத்தைத் தொடர்வார். இது போல பல சந்திப்புகளை பயணத்தின் போது ரயிலிலேயே நடத்தியிருக்கிறார். நேரத்திட்டமிடல் என்ற ஒன்றை நாம் காமராஜரிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும். இப்படி செயலாற்ற, படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணமும் எல்லோருடைய கஷ்டங்களையும் உணருகின்ற நல்ல மனது இருந்தாலே போதும்".

 

 
 

Next Story

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
PM Modi remembers former CM of Tn

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில், ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக நேற்று (18.03.2024) தமிழகம் வந்திருந்தார். இதனையடுத்து பா.ஜ.க. சார்பில் கோவையில் நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தார். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் பாலக்காடு சென்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி சேலத்திற்கு வந்தார். அங்கு கெஜல்நாயக்கன்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார். முன்னதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் கைகளைப் பிடித்துக்கொண்டு மோடி நலம் விசாரித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சித் தலைவர்களான ஓ.பி.எஸ்., ராமதாஸ், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், சரத்குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

PM Modi remembers former CM of Tn

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்தார்.

Next Story

“அண்ணாமலை சொல்வது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்” - அமைச்சர் துரைமுருகன்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

What Annamalai says is a lie filtered through Jamakalam  Minister Duraimurugan

 

அண்ணாமலை சொல்வது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியின் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்திருப்பதை இன்று (23.9.2023) வெளிவந்த தனியார் நாளிதழ் ஒன்றில் ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அதில் ‘தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் விவசாயத்தை பாதுகாக்க 12 அணைகளை கட்டினார். ஆனால், ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் திமுக 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது’ என்று ஒரு தவறான குற்றச்சாட்டை அண்ணாமலை திமுக மீது சுமத்தி இருக்கிறார். நித்தம் நித்தம் இப்படிப்பட்ட உண்மைக்கு மாறான செய்திகளைப் பேசி வம்பில் மாட்டிக் கொள்வதை அண்ணாமலை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்று தான் இந்த தவறான குற்றச்சாட்டு. பெருந்தலைவர் காமராஜர், கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை போன்ற அணைகளை கட்டினார் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால், திமுக ஆட்சியில் 5 அணைகளை மட்டுமே கட்டினார்கள் என்று அண்ணாமலை சொல்வது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்.

 

நம்பியாறு அணை, பொய்கையாறு அணை, கொடுமுடியாறு அணை, கடானா அணை, இராமநதி அணை, பாலாறு - பொருந்தலாறு அணை, மருதாநதி அணை, பரப்பலாறு அணை, வடக்கு பச்சையாறு அணை, பிளவுக்கல் அணை, மோர்தானா அணை, அடவிநயினார் அணை, ராஜாதோப்பு அணை, ஆண்டியப்பனூர் ஓடை அணை, சாஸ்தா கோயில் அணை, குப்பநத்தம் அணை, இருக்கன்குடி அணை, செண்பகத்தோப்பு அணை, நங்காஞ்சியார் அணை, நல்லதங்காள் ஓடை அணை,  மிருகண்டாநதி அணை, வரதாமநதி அணை,  வரட்டாறு வள்ளிமதுரை அணை இப்படி 40க்கும் மேற்பட்ட அணைகளை கட்டியது கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி. ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சி குற்றம் குறைகளை சொல்வது தவறில்லை. ஆனால், அவ்வாறு சொல்வதற்கு முன், சொல்கிற குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். இது என்னுடைய நீண்டகால அனுபவத்தில் அண்ணாமலைக்கு நான் சொல்கிற ஒரு யோசனையாகும். இல்லாவிட்டால், அவர் கூறும் குற்றச்சாட்டு யாவும் புஸ்வாணமாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.