Skip to main content

பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தாரா அபிநந்தன் ?

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

“விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமன் வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தது மட்டுமில்லாமல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்குச் செலுத்தி இருக்கிறார். அந்த வாக்கு சாவடியில் இருந்துகொண்டு அவர் தெரிவித்தது ‘நரேந்திர மோடியைவிட சிறந்த பிரதமர் யாரும் இல்லை’என்றார். நண்பர்களே, ஜிஹாதிஸும் காங்கிரஸாரும் பாக் பிடியில் சிக்கிக்கொண்ட வீரர்களை இந்தியாவுக்கு திரும்பி அழைத்து வராது. ஆனால், அபிநந்தன் இந்தியா திரும்பியது மட்டுமில்லாமல் நரேந்திர மோடிக்கு வாக்குச் செலுத்தியிருக்கிறார். அபிநந்தன், உங்களை வரவேற்கிறோம்” என்ற பதிவுடன் விங் கமாண்டர் அபிநந்தனை போல இருக்கும் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 
 

abi

 

 

அந்த புகைப்படத்தில் இருப்பது அபிநந்தனா என்கிற கேள்வி பலருக்கு எழுந்திருக்கிறது. ஆனால், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது போல அந்த புகைப்படத்தில் இருப்பதால் பாஜக சமூக வலைதள பக்கங்கள், பாஜக ஆதரவாளர்கள் என அனைவரும் இதை பகிர்ந்து வருகின்றனர். சிலர் இது நிஜம் என்று நம்பி விங் கமாண்டரை விமர்சிக்கவும் செய்கின்றனர். ஆனால், இது உண்மையா என்று ‘ஸ்க்ரோல்’ பத்திரிகை அபிநந்தன் புகைப்படத்தையும், வைரலாக பரவிய புகைப்படத்தை வைத்தும் சரி பார்த்துள்ளது. 
 

ஏன் ஒரு விங் காமண்டர் ஒரு தனிக்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாதா? எதற்கு இதை இவ்வளவு பெரிய பிரச்சனையாக்குகிறார்கள் என்றூ சிலர் கேட்கலாம். இந்திய விமானப்படையில் பணி புரியம் வீரர்கள் யாரும் அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது. விமானப்படை விதிமுறைகளின்படி 1969ஆம் ஆண்டிலிருந்து வீரர்கள் யாரும் பணியிலிருக்கும்போது அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
 

அபிநந்தனின் சாதாரண புகைப்படத்தையும், சமூக வலைதளத்தில் வைரலாக பரவும் இரு படங்களையும் வைத்து ஒப்பிட்டு பார்ப்போம்...
 

abinandhan

 

 

அபிநந்தனுக்கு உதட்டிற்கு கீழ் மச்சம் ஒன்று இருக்கிறது. வைரலாக பரவும் படத்தில் மச்சம் இல்லை.
 

வைரல் படத்தில் வலது கண்ணுக்கு கீழே ஒரு மச்சம் இருக்கிறது. அபிநந்தன் படத்தில் அந்த மச்சம் இல்லை.
 

அபிநந்தன் புகைப்படத்தில் அவருடைய முகவாய் நேராக இருக்கிறது. ஆனால், பாஜக ஆதரவாளர் என்று சொல்லப்படுபவரின் புகைப்படத்தில் அதுபோல இல்லை.
 

இறுதியாக இரண்டு படங்களை சற்று உத்துப்பார்த்தால் அபிநந்தன் புகைப்படத்திற்கும் பாஜக ஆதரவாளர் என்று சொல்லப்படுபவரின் புகைப்படத்திற்கும் வேறுபாடுகள் இருக்கிறது.  

 

 

 

 

 

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Next Story

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Firing has taken place in polling station of Manipur Parliamentary Constituency

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு வரும் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  ஆனால் அதற்குள் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அடையாளம் தெரியாத நபரால் மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.