Skip to main content

அழகிய தமிழ்ப் பெயர்களுடன் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு சாயல்குடியில் கண்டுபிடிப்பு!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

800 year old inscription with beautiful Tamil names found in Sayalgudi!

 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அழகிய தமிழ்ப் பெயர்கள் கொண்ட 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

 

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மாணவி வே.சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மு.விசாலி, ரா.கோகிலா, து.மனோஜ் ஆகியோர், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஜமீன்தார் அரண்மனை எதிரில் பழமையான மண்டபம் போன்ற அமைப்பில் இருந்த அங்காள ஈஸ்வரி கோயில் விதானத்தில், 6 அடி நீளமுள்ள இரு கல்லில் கல்வெட்டுகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். புதுக்கோயில் கட்ட அம்மண்டபத்தை பிரித்தபோது 3 அடி உயரமுள்ள, மேலும் ஒரு கல்லில் கல்வெட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்தபோது இது கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டது.

 

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, மூன்று கற்களில் இருந்ததும், ஒன்றுக்கொன்று தொடர்புடைய 55 வரிகள் கொண்ட ஒரே கல்வெட்டு ஆகும். நிச்சி நாயகனான மேல்கீரை நாடாள்வான், மாணிக்கன் உய்யவந்தானான குளதையாதயன் ஆகிய இருவரும் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை சாயல்குடி சொக்கனார் கோயிலுக்கு விற்று, அதை சிவன் கோயில்களின் பொறுப்பாளராகக் கருதப்படும் சண்டேஸ்வரதேவர் பெயருக்கு மாற்றிக் கொடுத்து அதற்கு ஈடாகப் பணம் பெற்றுள்ளதையும், இதற்கு சாட்சியாக பலர் கையொப்பம் இட்டுள்ளதையும் இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.

 

800 year old inscription with beautiful Tamil names found in Sayalgudi!

 

தற்போது நிலம் விற்பனை செய்யும்போது வாங்குபவர், விற்பவர், சாட்சிகள் ஆகியோர் பத்திரத்தில் கையொப்பம் இடுவது போல, அக்காலத்தில் ஓலைச் சுவடியில் அவர்களின் கையொப்பம் பெற்று, அதை கல்வெட்டில் வெட்டி வைப்பார்கள். கையொப்பம் இடத் தெரியாதவர்களை தற்குறி எனவும், அவர்களுக்கு மற்றவர்கள் சான்று இடுதலை தற்குறி மாட்டெறிதல் எனவும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

 

இதில் தற்குறியான மூவருக்கு பிள்ளையார் அழகிய விடங்கர் கோயிலில் இருக்கும் முத்தன் சிவலங்கனான இமையே தருவான், சாத்தனிரட்டையான் அஞ்சாத காடத்தட்டான், தச்சன் சீராமன் மூவானான இளமை ஆசாரியன் ஆகியோர் சான்று இட்டுள்ளனர். 

 

விற்கப்பட்ட நிலத்தில் இருந்த குளமும், அக்குளத்தைப் பராமரிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட குளப்பட்டி எனும் நிலமும் சேர்த்து கோயிலுக்கு விற்கப்பட்டுள்ளதும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. 

 

800 year old inscription with beautiful Tamil names found in Sayalgudi!

 

மேலும் கூத்தன் சோழனான செம்பிலராயன், கொற்றன் முத்தனான செம்பில் வளநாடன், சொல் நாணலையான் வழுதி சிங்கராயன், சிறுமுத்தனாளுடையானான வீரபாண்டியராயன், மங்கல வனப்பனாலன் கங்காராயன், சிறந்தான் தொண்டையன், பேரருங்கோவேளான் உடையான் பாலன், வதுலங்கன் கெங்கையான் விரதமிட்ட ராயன் ஆகியோரும் இதில் கையொப்பம் இட்டுள்ளனர். இக்கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ள அனைவரின் பெயர்களும் அழகிய தமிழ்ப் பெயர்களாக உள்ளன. இதன் மூலம் 800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் பெயர் வைக்கும் வழக்கத்தை அறிந்து கொள்ளமுடிகிறது.

 

கல்வெட்டின் சில பகுதிகள் அழிந்துவிட்டதால் கோயிலுக்கு விற்கப்பட்ட நிலம் பற்றி முழுமையாக அறிய இயலவில்லை. அதன் எல்லைகளாக இரு பெருவழிகள், போளம், சிறுகுளம் ஆகியவை கூறப்பட்டுள்ளன. இதில் சொல்லப்படும் பெருவழிகள் (நெடுஞ்சாலைகள்) பெரியபட்டணம், கன்னியாகுமரி செல்லும் பெருவழிகளாக இருக்கலாம். போளம் என்பது பிசின் போன்ற நறுமணப்பண்டங்கள் ஆகும். வணிகர்களின் விற்பனைப் பண்டமான போளம் வைக்கப்பட்டிருந்த இடமும் கல்வெட்டில் ஒரு எல்லையாகக் கூறப்பட்டுள்ளது. 

 

Ad

 

சாயல்குடி அருகிலுள்ள திருமாலுகந்தான்கோட்டை சிவன்கோயில் கல்வெட்டில் இடைவழியான எறிவீரப்பட்டினம் எனக் குறிப்பிடப்படுவது சாயல்குடியில் உள்ள இருவேலியாக இருக்கலாம். இருவேலி கண்மாய்ப் பகுதியில் இடைக்காலப் பானை ஓடுகளும், நந்தி சிற்பமும் இருப்பது அங்கு ஒரு சிவன் கோயிலும், ஊரும் இருந்து அழிந்து போயிருப்பதை உறுதியாக்குகிறது. வணிகர்களின் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கி இருந்த ஊர் எறிவீரப்பட்டினம் என அழைக்கப்படும். இதன்மூலம் சாயல்குடி இரு வணிகப் பெருவழிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்த ஒரு முக்கிய வணிக நகரமாக பழங்காலம் முதல் இருந்திருப்பதை அறியமுடிகிறது. 

 

கல்வெட்டுள்ள இடம் தற்போது அங்காள ஈஸ்வரி கோயில் என அழைக்கப்பட்டாலும், கல்வெட்டில் பிடாரி கோயில் எனப்படுகிறது. நிலம் விற்கப்பட்டது அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு என்றாலும், அதன் கல்வெட்டை பிடாரி கோயிலின் கிழக்குப் பகுதியில் வைத்துள்ளதாகக் கல்வெட்டில் சொல்லப்படுகிறது. சாயல்குடி சிவன் கோயில் முற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்திலேயே கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டு இங்கு தான் உள்ளது. உலகு சிந்தாமணி வளநாட்டு சாகியில்குடி என அக்கல்வெட்டில் இவ்வூர் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

 

 

 

Next Story

“தேர்தல் சின்னம் கோரி விண்ணப்பித்துள்ளோம்” - ஓ.பி.எஸ்.!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
“We have applied for an election symbol” - O.P.S.

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டணி அமைத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஓ. பன்னீர் செல்வம் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பா.ஜ.க. நிர்வாகி மற்றும் தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ. பன்னீர்செல்வம் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “மக்களவைத் தேர்தலில் பக்கெட் வாளி, பலாப்பழம் சின்னம், திராட்சைப் பழம் சின்னத்தில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளோம். என்னுடைய பலத்தை நிரூபிப்பதற்கு மட்டும் தேர்தலில் போட்டியிடவில்லை. அ.தி.மு.க.வின் எம்.ஜி.ஆர் வகுத்து தந்த சட்டவிதியின் படி தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அ.தி.மு.க.வை 50 ஆண்டுகளாக வழிநடத்தினார்கள். அவர்கள் கடந்து வந்த பாதையில் நாம் நடக்க வேண்டும் என்பது தான் என்னுடைய தலையாய குறிக்கோள். இதில் இருந்து மாறுபடக் கூடது என்பதுதான் என்னுடைய குறிக்கோள். அதன்படி தான் நடக்க வேண்டும் என்பது தான் ஒன்றறை கோடி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நிலைப்பாடும், எண்ணமும் ஆகும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மக்களவைத் தேர்தலில் ஓ.பி.எஸ். போட்டி!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
OPS in the Lok Sabha elections Competition

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதன் ஒரு பகுதியாக பா.ஜ.க.வின் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தது. அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இது குறித்து ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “பா.ஜ.க. கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் நான் போட்டியிடுகிறேன். பா.ஜ.க. கூட்டணியில் எங்கள் அணிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க விரும்பினர். ஆனால் இரட்டை இலை சின்னம் இல்லாததால் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளேன். தொண்டர்கள் பலத்தை நிரூபிப்பதற்காக ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம்” எனத் தெரிவித்தார்.