Skip to main content

400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டெடுப்பு!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

400 year old inscription discovered

 

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகிலுள்ள புரசலூரில் பள்ளி சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது, அங்குப் புதைந்திருந்த சுமார் 400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

 

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகாவைச் சேர்ந்த புரசலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்குப் பள்ளம் தோண்டியபோது, புதைந்திருந்த ஒரு சிற்பம் வெளிப்பட்டுள்ளதாக அவ்வூரைச் சேர்ந்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் செ.இரமேஷ்,  ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்குத் தகவல் தெரிவித்தார். இச்சிற்பத்தை ஆய்வு செய்தபின், தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு  கூறியதாவது; 

 

திருச்சுழி அருகிலுள்ள புரசலூரில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் உடன்கட்டை ஏறி இறந்த பெண்ணுக்கு வைத்த சதிக்கல் ஆகும். போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு நடுகற்கள் நட்டு வழிபடும் முறை சங்க காலம் முதல் தமிழ்நாட்டில் இருந்துள்ளது. அதுபோல் போரிலோ, வேறு காரணங்களினாலோ கணவன் இறந்தபின் அவனுடனோ அல்லது தனியாகவோ உடன்கட்டை ஏறி இறந்த பெண்ணுக்கு நினைவுச் சின்னங்கள் அமைத்து வழிபடும் வழக்கமும் உள்ளது. இவற்றை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைக்கிறார்கள். சதி, மாலை ஆகிய சொற்களுக்குப் பெண் என்றும் பொருள் உண்டு. 

 

400 year old inscription discovered

 

இந்நிலையில் புரசலூரில் கண்டெடுக்கப்பட்ட சதிக்கல் 2½ அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்டது. இதில் ஆண் வலது கையையும், பெண் இடது கையையும் தொடையில் வைத்துள்ளனர். ஆண் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டும், பெண் இடது காலை மடக்கி வலது காலைத் தொங்கவிட்டும் அமர்ந்த நிலையில் உள்ளனர். ஆண் இடது கையில் கட்டாரி எனும் குத்துவாளையும், பெண் வலது கையில் பூச்செண்டையும் ஏந்தியுள்ளனர். 

 

தலையிலுள்ள கொண்டை ஆணுக்கு வலப்புறமும் பெண்ணுக்கு இடப்புறமும் சரிந்துள்ளது. இருவரும் நீண்ட காதுகளுடன், கழுத்திலும், காதிலும் அணிகலன்கள் அணிந்து காணப்படுகின்றனர். சிற்பத்தின் மேற்பகுதி, கபோதம், கண்டம், கலசங்கள் ஆகிய பகுதிகளுடன் கோவிலின் சாலை விமானம் போன்ற அமைப்பில் உள்ளது. சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் காலை தொங்கவிட்டு அமர்ந்தநிலையில் ஊஞ்சலாடும் ஒரு பெண்ணின் சிறிய சிற்பம் உள்ளது.

 

சதிக்கல் அமைப்பைக் கொண்டு இது கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம். இப்பள்ளியின் வடக்குப் பகுதியில் ஏற்கனவே இரு சதிக்கற்கள் மக்கள் வழிபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு இவ்வூரில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.