Skip to main content

சசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்..? உடையும் அ.தி.மு.க! கவர்னர் ஆட்சி?

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

sasikala

 

விடுதலைநாள் முடிவான நிலையில், சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்கிற ஃப்ளாஷ் நியூஸ், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாட்களாகவே காய்ச்சல் இருந்த நிலையில், புதனன்று மூச்சுத்திணறலால் கடுமையாக அவதிப்பட்ட சசிகலாவை சிறை மருத்துவர்கள் பரிசோதித்து, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பரிந்துரைக்க.... ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார்.

 

பாதுகாப்பு என்ற பெயரில் யாரையும் நெருங்கவிடாமல் 300க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். யாரோ வி.வி.ஐ.பி.யிடம் ஒன் டூ ஒன் பேசி, அரசியல்ரீதியான நகர்வுகளை முன்னெடுக்க சசிகலா முயற்சிக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே சசிகலா மிகுந்த டென்ஷனில் இருந்தார். டிடிவி தினகரன் டெல்லிக்கு சென்று, தமிழக விவகாரங்களை கவனிக்கும் பா.ஜ.க. தலைவரான பூபேந்திர யாதவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதனையடுத்து, சசிகலாவை 27-ஆம் தேதி விடுதலை செய்வதற்கு பதில் 23-ஆம் தேதி விடுதலை செய்ய கர்நாடக அரசு ஆயத்தமானது. கூடுதல் பரோல் காரணமாக இளவரசிக்கு பிப்ரவரி 5தான் விடுதலை என்பதால் ஜனவரி 27-ஆம் தேதியே சட்டப்படி விடுதலை யாகிறேன். யாருடைய சலுகையும் வேண்டாம் என சசிகலா கூறிவிட்டார்.

 

விடுதலையாகி வரும் சசிகலாவை வரவேற்க ஆயிரக்கணக்கான வாகனங்களை அவரது சொந்தங்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஒரு வாரம் முன்னதாகவே பெங்களூரு ஒயிட் ஃபீல்டு ஏரியாவில் உள்ள ஹோட்டல் கீஸ் என்ற தங்கும் விடுதி புக் ஆகத் தொடங்கி விட்டது. இதற்கிடையே, 100% அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு இடமில்லை என்ற எடப்பாடியின் டெல்லி பேட்டி, சசியை ரொம்பவே பாதித்ததாம். ஓ.பி.எஸ் துரோகம் செய்தார் என எடப்பாடியை முதல்வராகத் தேர்ந்தெடுத்துவிட்டு, ஜெ.வின் சமாதியில் மூன்று முறை ஓங்கி அடித்து சத்தியம் செய்து சிறைக்கு சென்றவர் சசிகலா. விடுதலையாகி வரும்போது, தன்னால் முதல்வரான எடப்பாடி இப்படி ஒரு பேட்டி கொடுத்ததை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

 

பா.ஜ.க.விடம் சமரசம் பேசி வந்த தினகரனிடமும் திவாகரனிடமும் எடப்பாடி பேட்டியின் பின்னணி பற்றி சிறையிலிருந்த சசிகலா விசாரித்துள்ளார். 4 நாட்கள் முன்னதாகவே என்னை விடுவிக்க பா.ஜ.க முன்வந்த நிலையில், மோடி சொல்லித்தான் எடப்பாடி பேசுகிறாரா? எனக் கேட்டுள்ளார். டெல்லியில் எடப்பாடியிடம் மனுவை மட்டும் வாங்கிக்கொண்டார் பிரதமர். எதுவும் பேசவில்லை. முதல்வர் பதவியிலேயே நீடிக்கப்போவதாக கற்பனையில் இருக்கிறார் எடப்பாடி. அந்த கற்பனைக்கு உங்களால் ஏதாவது பங்கம் வந்துவிடுமோ என பயந்து வெறுப்பை உமிழ்கிறார் என்று சசியிடம் விளக்கியவர்கள், எடப்பாடி மீது பா.ஜ.க.வுக்கு நம்பிக்கையில்லை என்பதன் அடையாளம்தான் குட்கா வழக்கில் சி.பி.ஐ.யின் குற்றபத்திரிகை என்றும் தெரிவித்துள்ளனர்.

 

திவாகரன், தினகரன், டாக்டர் வெங்கடேசன் மூவரிடமும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பேசி வருவது பற்றியும் சசிகலாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. உங்களுக்கு வரவேற்பு அளிக்கும்போது 50 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பெரிய வெள்ளி வாள் ஒன்றை கொடுக்கத் தயாராகி விட்டார். அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகியோர் வெளிப்படையாகவே உங்களை ஆதரிக்கிறார்கள். இதுதவிர எடப்பாடியின் சொந்த மண்டலமான கொங்கு மண்டலத்திலேயே சிவசாமி போன்றோர் எடப்பாடிக்கு எதிராக உங்களை ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள். இவர்களை தவிர செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் போன்றோர் எடப்பாடியை எதிர்ப்பதா உங்களை ஆதரிப்பதா என ஊசலாட்டத்தில் இருக்கிறார்கள்.

 

எடப்பாடியிடம் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, கே.சி.வீரமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், வெல்லமண்டி நடராஜன் போன்ற அமைச்சர்களும், பொன்னையன், வளர்மதி, மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற நிர்வாகிகளும் இருக்கிறார்கள். தினகரன் தனியாக கட்சி துவங்கும்போது எடப்பாடிக்கு எதிராக 35 எம்.எல்.ஏ.க்கள் திரண்டு வந்தார்கள். பின்பு, பாஜ.க அவர்கள் பக்கம் இருந்ததால் அது சுருங்கி 18 ஆனது. இப்போது எடப்பாடியை பா.ஜ.க விரும்பாத நிலையில், 30 எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக திரண்டாலே போதுமானது. மற்ற எம்.எல்ஏக்கள் தானாக வந்துவிடுவார்கள்” என சசிகலாவுக்கு களநிலவரத்தை விளக்கியுள்ளனர்.

 

பொறுமையாக கேட்டுக்கொண்ட சசிகலா, "நான் 30 ஆண்டு காலம் அரசியலில் இருந்தவள். நான் வெளியில் வந்தால் சும்மா இருப்பேன் என எடப்பாடி நினைக்கிறாரா?'' என கோபத்துடன் கேட்டுவிட்டு, "நான் வெளியே வந்தவுடன் அக்காவின் சமாதிக்கு செல்ல வேண்டும். அங்கு மீண்டும் புதிய சபதங்களை ஏற்க இருக்கிறேன்'' என சொல்லிவிட்டு "அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்'' என உத்தரவிட்டார்.

 

சசிகலாவின் புதிய அரசியல் வியூகங்களைப் பற்றி கேள்விப்பட்ட எடப்பாடி, "யாரும் சசிகலா பக்கம் போய் விடாதீர்கள். நீங்கள் சம்பாதித்த பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்கள்மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன். மேலும் தேவையென்றால் நான் தருகிறேன்'' என வாக்குறுதி அளித்துவருகிறார். அ.தி.மு.க.வை எடப்பாடி தலைமையிலிருந்து மீட்பது, இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோருவது, தேவைப்பட்டால் அதை முடக்குவது, எம்.எல்.ஏக்களை இழுப்பது, அதன்மூலம் கவர்னர் ஆட்சி கொண்டுவருவது என அனைத்து விதமான ஏவுகணைகளுடனும் சசிகலா புறப்பட்டு வருகிறார். அதற்கான ஆலோசனைகள் அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனையிலேயே தொடங்கிவிட்டது என்கிறார்கள் அவரது சொந்தபந்தத்தினர்.

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.