Skip to main content

‘தில்வாலே புச்...’ டூ 'கிருப கிருப' - சோகத்திலும் சிரிக்க வைத்த 2020 மீம்கள்!

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

meme

 

 

மீம்ஸ்... இந்த வார்த்தை தமிழர்களின், இல்லை மனிதர்களின் வாழ்வில் சமீபத்திய அங்கமாகிப்போன வார்த்தை. எவ்வளவு பெரிய துயரத்தையும், கோபத்தையும், கொதிப்பையும் மக்கள் மீம்ஸைக் கொண்டு கடந்து செல்கின்றனர். எவ்வளவு பெரிய ஆளுமைகளையும் பிரபலங்களையும் தலைவர்களையும் மக்கள் மீம்ஸைக் கொண்டு கீழே தள்ளுகின்றனர். பெரிய கருத்துகளை, அரசியல் சித்தாந்தங்களை, அறிவியலை மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கும் ஆக்கபூர்வமான கருவியாகவும் சில நேரங்களில் மீம்கள் விளங்குகின்றன. எந்த வகையிலும் பயன்படாமல் நேரத்தை அழிக்கும் கருவியாகவும் மீம்கள் இருக்கின்றன. எப்படி பார்த்தாலும் மீம்கள் இணைய வாழ்வில் அங்கமாகிவிட்டன. 2020ஆம் ஆண்டில் தமிழ் இணைய உலகில் வைரல் ஆன மீம்கள் சிலவற்றை காணலாம்.  

 

2020 famous meme templates

 

வடசென்னை மீம்கள்

“செந்தில், குணா, வேலு, தம்பி இவங்க எல்லாரையும் அன்பு வாழ்க்கையோடு இணைக்கிறது ராஜன்” - இந்த வடசென்னை பட டயலாக்கை வெற்றிமாறனோட குரல்ல தியேட்டரில் கேட்குறப்போ பார்க்குறவங்களுக்கு ஒரு சிலிர்ப்பை கொடுத்தது. இப்படிப்பட்ட ஒரு மாஸான விஷயத்தை அப்படியே தமாஸாக்கின பெருமை மீம் கிரியேட்டர்களை சேரும். லாக்டவுனில் ரொம்ப ட்ரெண்டாகி, ஒரு கட்டத்தில் ‘போதும்டா சாமி ஆளவிடுங்க’ன்னு சொல்ற அளவுக்கு இந்த மீம் டெம்பிளேட்டை ட்ரெண்ட் செய்தனர். வாட்ஸப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் என எல்லாவற்றிலும் செந்தில், குணா... செந்தில், குணா என வசனத்தை கேட்டு, மீமாகப் பார்த்து தூக்கத்தில் கூட அந்த டயலாக் வந்தது. ‘ஏலக்காய், மசாலா, சிக்கன், ரைத்தா இவங்க எல்லாரையும் என் கூட இணைக்கிறது பிரியாணிதான்’ என்பது இந்த டெம்பிளேட்டில் வந்த மீம்களில் ஒரு உதாரணம். இதுபோல எல்லா ஜானர்களிலும் புகுந்து இந்த டெம்பிளேட்டால நம்மை சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தனர்.

 

சீம்ஸ் மீம்கள்


இந்த வருடம் தமிழ்ப் படங்களிலிருந்து மட்டும் மீம் டெம்பிளேட்கள் இறக்குமதி செய்யாமல், ஃபாரீனிலிருந்து இம்போர்ட் செய்யப்பட்டவை சீம்ஸ் வகையறா மீம்கள். முழுக்க முழுக்க காமெடி மட்டும்தான். இதுவரை மீம்ஸ்கள் ஏதாவது படத்திலிருக்கும் காட்சி அல்லது வசனத்தை மையமாக வைத்தே உருவாக்கப்படும். ஆனால், சீம்ஸ் மீம்ஸ் முற்றிலும் வித்தியாசமானவை. அதில் சீம்ஸ், வால்டர், பெர்ரோ, டாகி உள்ளிட்ட நான்கு நாய்களுக்கு என்று ஒவ்வொரு குணாதிசயத்தை வைத்து பல சமூக விஷயங்கள், ரசிகர்கள் சண்டை, ட்ரெண்ட் விஷயங்களை கலாய்ப்பதுதான் இந்த சீம்ஸ் மீம்ஸ்களின் சுவாரஸ்யம். 2013ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டில் இவை மீம்ஸ்களாக வலம் வர தொடங்கிவிட்டன. ஆனால், தமிழ் மீம் உலகில் லாக்டவுன் காலகட்டத்தில்தான் பிரபலமாகின. இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கும் இந்த சீம்ஸ்க்கும் பெர்ரோவுக்கும் இன்னும் ரசிகர் மன்றம் ஆரம்பிக்காததுதான் குறை.

 

‘தில்வாலே புச்...’ மீம்கள்

இந்தியில் வெளியான ஒரு ஆல்பத்திலிருந்து ஒரு சின்ன ஆடியோ க்ளிப்பை வைத்து உருவாக்கப்பட்ட இந்த மீம்ஸ், ஒரு பெரிய கூட்டத்தையே சிரிக்க வைத்துள்ளன. ஏமாறுவது, ஒன்றை எதிர்பார்த்து மற்றொரு விஷயம் நடப்பது போன்ற சம்பவங்களுக்கு இந்த 'தில்வாலே...' தான் பிஜிஎம். தொடக்கத்தில் நடிகர் அப்பாஸ் நடித்த படத்திலிருந்து ஒரு சீனுக்குப் போடப்பட்ட இந்த பிஜிஎம், அடுத்தடுத்து பல மீம்களில் பயன்படுத்தப்பட்டுவிட்டது. இது எல்லாவற்றையும் தாண்டி அதில் வரும் ‘ஓஓஓஓஓஒ...’ என்னும் ராகத்தைப் போட்டே ரக ரகமாக மீம்ஸ்களை அள்ளித் தெளித்தனர்.

 

கோபி சுதாகர் மீம்கள்

கோபி சுதாகர் வெளியிடும் ஒவ்வொரு புதிய வீடியோக்களும் சிரிக்கும்படியாக ரசிக்கும்படியாக இருக்கிறதா என்பதை தாண்டி ஒவ்வொரு வீடியோவிலும் ஒரு டெம்பிளேட்டாவது நம்மை சிரிக்க வைக்க மீம் கிரியேட்டர்களின் வலையில் சிக்கிவிடுகிறது. டிக்டாக் செய்பவர்களை கலாய்த்து வெளியிட்ட வீடியோவில் சிக்கிய  ஒரு டெம்பிளேட், ‘எனக்காக நான் இங்கு நிக்குறேன் ஆனா அவள் எனக்காக இங்க நிக்கலைடா’ என்று சுதாகர் சொல்லிவிட்டு கோபியை கடந்து செல்லும் அந்த டெம்பிளேட் பல மீம்களை உருவாக்கியது. கரோனா லாக்டவுன் சமயத்தில் அனைவரும் நமக்கு கரோனா இருக்குமோ என்ற பீதியில் இருப்பதை நகைச்சுவையாக, ‘ஒரு வேளை இருக்குமோ’ என்று சுதாகர் நடித்ததும் ட்ரெண்டானது. சமீபத்தில் நம்மை பீதியடையச் செய்த நிவர் புயலின்போது வெளியிட்ட வீடியோவில் புயலின் நடுவே நின்று ரிப்போர்ட் செய்யும் கோபியின் காமெடி ட்ரெண்டானது. இப்படி இவர்களின் ஒரு வீடியோவில் பல மீம்கள் இருக்கின்றன. இதனிடையே நடைபெற்ற ஐபிஎல் காலகட்டத்தில் சென்னை தோல்வியை தம்தே பாடி கொண்டாடிய பெண்களின் வீடியோவிலிருந்து ‘கண்ணன் தேவன் டீ பொடி’ வைரலானது. அதை இவர்கள், ஜெயம் ரவி நடிச்ச படம் பூமி, ஜாதவ் எங்க குலசாமி என்று கலாய்த்ததும் கூட மீமானது.

 

'சூரரைப் போற்று' மீம்கள்

'ஆமாங்கய்யா...', 'என்னால முடியாம் ஆனா பண்ண மாட்டேன்...', 'தாம்பரத்தில ஃப்ளைட்ட இறக்குடா...' என்ற நீண்ட லிஸ்ட் சூரரைப்போற்று படத்திலிருந்து சமீபத்தில் ட்ரெண்டானது. படம் எந்தளவிற்கு வெற்றியோ அந்தளவிற்கு இப்படத்தின் காட்சிகளை பயன்படுத்தி வெளியான மீம்களும் அனைத்து விதமான ஜானர்களிலும் வெற்றிபெற்றது. என்னடா மீமில் ஜானரா என்று பார்க்காதீங்க, மீம் கலாச்சாரத்துல தற்போது பல விதமான கருத்து சொல்ற மீம், காமெடி, சமூக அக்கறை, சீரியஸ் போன்ற அனைத்து வகைகளிலும் மீம் வர தொடங்கிவிட்டது. அதைத்தான் அப்படி சொல்லியிருக்கிறேன். சூர்யா நடித்த 7ஆம் அறிவு படத்தில் போதி தர்மரை வைத்து வந்த, 'உணர்கிறார்...' என்கிற மீம்களும் ட்ரெண்டாகி வருகிறது.

 

2020 famous meme templates

 

கிருப கிருப மீம்

‘டேலண்டெல்லாம் இல்ல பிரதர், எல்லாம் கிருபதான்...’ என்று ஒருவர் ஆறு வருடத்திற்கு முன்பு பாடிய பாடலை ஹிட் அடிக்க வைத்து, அவரும் அதற்கு பார்ட்-2 பாடல் ஒன்றை வெளியிட்டதற்கு காரணமாக இருந்தது ஒரு மீம். எல்லாத்துக்கும் காரணம் கிருபதான் என்று நம்மையே நம்ப வைக்கும் அளவிற்கு ட்ரெண்டானது. ஐபிஎல் சமயம் எனபதால் மேலும் ஜெயிக்கிற டீம் பக்கம், சிக்ஸ் அடிக்கிற வீரருக்கு என்று கிருப கிருப டெம்பிளேட்டை பதிவிட்டனர்.

 

ஐபிஎல், பிக்பாஸ் என்று பல விஷயங்களிலிருந்து நிறைய மீம்கள் நம்மை கவர்ந்தன, ட்ரெண்டாயின. சில ரசிக்கவும் வைத்தன, சில கோபத்தை ஏற்படுத்தின. 'ஹாங் ஓவர்' ஆலனை வைத்து வெளியான மீம்களை குறிப்பிடாமல் இருக்க முடியாது. பல மீம்கள் அதில் கிரியேட்டிவ்வாகவும் டைமிங் காமெடியாகவும் இருக்கும். 'உனக்கு சண்டை போட தெரியுமாடா குமரா' என்கிற ஜெயம் ரவியின் பட வசனத்தை வைத்து, அப்பாவுக்கும் மகனுக்கும் நடைபெறும் சம்பவத்தை மீம்களாகப் பதிவிடுகின்றனர்.

 

இப்படி 2020, மீம்கள் நிறைந்த வருடமாகக் கடந்தது. கரோனா கடுந்துயரை கடக்க மீம்கள் பலருக்கு உதவின.

 

 

Next Story

புத்தாண்டு கொண்டாட்டம்; 267 வழக்குகள் பதிவு

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
267 cases registered in night vehicle inspection ahead of New Year

2024 புத்தாண்டு கழிக்கும் வகையில் வேலூர் கோட்டையில் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டைக் கொண்டாடினர். நேற்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு வந்து சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளும் தொடர்ந்து வந்ததால், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அந்த வகையில் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் விதமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் வேலூர் கோட்டை களைகட்டியது.

அதே சமயம், புத்தாண்டையொட்டி மாவட்டம் முழுவதும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டன. அப்போது, வேலூர் சரகத்தில் 112 வழக்குகளும், காட்பாடி சரகத்தில் 138 வழக்குகளும் மற்றும் குடியாத்தம் சரகத்தில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  மாவட்டம் முழுவதும் 267 வழக்குகள் பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 104 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

புத்தாண்டு ‘2024’; தலைவர்கள் வாழ்த்து!

Published on 31/12/2023 | Edited on 01/01/2024
New Year 2024 Greetings leaders

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று மாலை முதல் களைகட்டி வருகின்றன. இதனையொட்டி உலகின் முதல் நாடாக இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தை தொடர்ந்து உலகின் 2 ஆவது நாடாக ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 06.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. சிட்னி நகரில் மக்கள் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் இந்தியாவிலும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. கடற்கரைகள் போன்ற பொது இடங்களில் ஏராளமானவர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தலைவர்கள் பலரும் 2024 ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் “புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஒளிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது. "எல்லார்க்கும் எல்லாம்" என்ற நமது இலட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும். அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “2024 புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.‘புத்தாண்டு 2024’ நம் அனைவருக்கும் மேலும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொடுக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும். அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில் மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்திரராஜன், “நம் பாரத தேச மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டு,புதிய ஆண்டின் தொடக்கமாக மட்டுமல்லாமல் புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாகவும் அமைய வேண்டும். இயற்கை சீற்றங்களால் நாம் சந்தித்த இடர்களைக் கடந்து 2024- புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராவோம். அன்பையும்,வாழ்த்துக்களையும் அனைவரோடும் பரிமாறிக் கொள்வோம். ஒற்றுமை உணர்வோடும் சமத்துவச் சிந்தனையோடும் பாரத தேசம் உலக அரங்கில் பீடுநடை போடும் வகையில் கடமையாற்ற உறுதி ஏற்போம். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வளமும் அனைவரின் வாழ்விலும் நிறைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “ எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.புதிய ஆண்டில் போர்கள் ஓயட்டும்; அமைதி நிலவட்டும்; சகோதரத்துவம் பரவட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.