Skip to main content

மக்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்த 200 ஆண்டுகள் பழமையான நெற்களஞ்சியம்!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

200 years old granary intertwined with people's lives!

 

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் மக்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்த 200 ஆண்டுகள் பழமையான நெற்களஞ்சியம் அழியும் நிலையில் உள்ளது. அதை பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்க ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

இந்தியா முழுவதும் இருந்து ராமேஸ்வரம் வருபவர்களுக்காக சேதுபதி மன்னர்கள் பல சத்திரங்களைக் கட்டியுள்ளனர். இத்தகைய சத்திரங்களுக்கு உணவுக்குரிய நெல் வழங்குவதற்காக ஆங்காங்கே நெற்களஞ்சியங்களையும் அமைத்துள்ளனர். 

 

நெற்களஞ்சியங்கள்:

நெற்களஞ்சியத்தை ‘இரையாயிரம் கொண்டான்' எனவும் அழைப்பர். ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் இரையாயிரம் கொண்டான் என்ற ஒரு பெரிய நெற்களஞ்சியம் இருந்துள்ளது. ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், அழகர்கோயில், திருப்பாலைத்துறை உள்ளிட்ட சில கோயில்களில் பழமையான நெற்களஞ்சியங்கள் தற்போதும் உள்ளன.

 

சேதுநாட்டில் அதிகமான நெல் விளைச்சல் இருக்கும் கிழக்கு கடற்கரைப் பகுதிகளிலும், பாம்பன், ராமேஸ்வரத்திலும் சிறிய நெற்களஞ்சியங்கள் இருந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. இந்நிலையில், மண்டபத்தில் மக்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்த 200 ஆண்டுகாலம் பழமையான, அழியும் நிலையில் உள்ள ஒரு நெற்களஞ்சியம் இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளது  என்பது ஆச்சரியமானது.

 

200 years old granary intertwined with people's lives!

 

இதை ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இதுபற்றிக் கூறியதாவது, 

 

மண்டபம் நெற்களஞ்சியம்:

“தனுஷ்கோடி செல்லும் யாத்திரிகர்களுக்காக மண்டபத்தில் 2 சத்திரங்கள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. இந்த சத்திரத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில், ராமேஸ்வரம் செல்லும் வழியில், சாலை மற்றும் ரயில் பாதையின் இடையில் இந்த நெற்களஞ்சியம் அமைந்துள்ளது. இதன் அருகில் பிராமணர்கள் குடியிருப்பும் இருந்திருக்கிறது. 

 

மண்டபத்தில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பகுதிகளில் அதிக அளவில் சத்திரங்கள் இருந்துள்ளன. இப்பகுதியில் நெல் விளைச்சல் இல்லை. எனவே சேது நாட்டின் பிற பகுதிகளில் விளைந்த நெல்லை, சேமித்து வைத்து இப்பகுதிகளில் உள்ள சத்திரங்களுக்கு வழங்குவதற்காக இங்கு நெற்களஞ்சியம் அமைத்திருக்கலாம்.

 

 

200 years old granary intertwined with people's lives!

 

அமைப்பு!

 

இது சுமார் 15 அடி உயரமும் 50 அடி சுற்றளவும் கொண்டுள்ளது. வெயில், மழை, கடல் காற்றால் பாதிக்காத வகையில் வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது கீழே அகன்றும் மேலே குறுகியும் ஒரு குதிர் போன்ற அமைப்பில் உள்ளது. இதன் சுவர் 3 அடி அகலத்தில் உள்ளது. கடற்கரைப் பாறைக் கற்கள், சுண்ணாம்புச் சாந்து கொண்டு கட்டப்பட்டுள்ளது.

 

200 years old granary intertwined with people's lives!

இதன் நடுவில் ஒரு சுவர் கட்டி இரு பகுதியாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு  பகுதியிலும் ஒரு ஜன்னல் உள்ளது. இதன் வடக்குப்பகுதியில் உள்ளே செல்ல 3 அடி உயரம் 2 அடி அகலத்தில் ஒரு வாசல் உள்ளது. இதே அளவிலான வாசல் நடுவில் உள்ள சுவரிலும் உள்ளது.

 

கூம்பு வடிவிலான இதன் மேற்கூரை இடிந்து விழுந்துவிட்டது. இதன் உள்ளே மரங்கள் வளர்ந்துள்ளன. மழைநீர் சுவரில் படாமல் வழிந்தோடும் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாசல் பகுதியின் முன்னால் வளைவான சுற்றுச்சுவர் கடற்கரைப் பாறைக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் வெளிப்பகுதியில் விளக்கேற்ற ஒரு மாடக்குழி உள்ளது.

 

200 years old granary intertwined with people's lives!

 

பிரம்மச்சாரிகள்:

 

மன்னர்கள் காலத்தில் இக்களஞ்சியத்தைப் பாதுகாக்க பிரம்மச்சாரி இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு காவலர்களாக இருந்த முனியசாமி சன்னியாசி, பிச்சை, கருப்பையா, தொட்டிச்சி ஆகியோரின் சமாதிகள் களஞ்சியத்தின் அருகில் உள்ளன. இவை களஞ்சியம் கோயிலாக இப்போதும் மக்களால் வழிபடப்படுகின்றன. இதன் நினைவாக இப்பகுதி மக்களிடம் களஞ்சியம், களஞ்சியராஜா, களஞ்சியராணி என  பெயர் வைக்கும் வழக்கமும் உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

Next Story

ஆயுதக் கிடங்காக இருந்த அரண்மனையைப் பாதுகாக்க தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கோரிக்கை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Antiquities Protection Forum request to protect the palace which was a weapons warehouse

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில், சேதுபதி மன்னர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அரண்மனையை பாதுகாக்கவேண்டும் என திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2010 முதல் செயல்பட்டு வரும் இம்மன்றத்தின் தலைவராக, தலைமை ஆசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி உள்ளார். இம்மன்ற மாணவர்கள் 55 பேர் மன்றச் செயலர் வே.ராஜகுரு, பட்டதாரி ஆசிரியர் கௌரி ஆகியோர் தலைமையில் அரண்மனையை பார்வையிட்டனர். 

அப்போது அரண்மனை பற்றி வே.ராஜகுரு கூறியதாவது, “டச்சுக்காரர்கள், கி.பி.1759-ல், கீழக்கரையில் ஒரு நெசவுத் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள செல்லமுத்து சேதுபதியிடம் அனுமதி பெற்று, நாளடைவில் அதை ஒரு கோட்டையாக மாற்ற முயற்சி செய்த போது போர்ப்பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்ட முடிவு செய்த நேரத்தில், செல்லமுத்து சேதுபதி இறந்துவிட்டார். இரண்டு வயதில் முத்துராமலிங்க சேதுபதி மன்னரான போது, அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை இந்த அரண்மனையைக் கட்டியுள்ளார். கி.பி.1767-ல் கொண்ட உடன்பாட்டுக்குப்பின் சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்கமாயினர்

ஆங்கிலேயர்கள் கி.பி.1772-ல் சேதுநாட்டை கைப்பற்றியபிறகு, அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்குத் தெரியாத மறைவான காட்டுப் பகுதியில் இருந்த இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் முத்துராமலிங்க சேதுபதி பயன்படுத்தியுள்ளார்.

தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இதற்கு இரு வாசல்கள் உள்ளன. இதன் உள்ளே சதுர வடிவக் கட்டடங்கள் நான்கு உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் மூலையிலும் கதவு உள்ள நான்கு அறைகளும், நீண்ட நான்கு தாழ்வாரங்களும் என மொத்தம் 16 அறைகளும் 16 தாழ்வாரங்களும் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் நடுவிலும் ஒரு குளம் உள்ளது. இதிலிருந்து கதவு ஜன்னல்களை பிரித்தெடுத்துவிட்டதனால் ஆங்காங்கு மேற்கூரை மற்றும் சில பகுதி சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளன. கட்டடங்களில்  மரங்கள் வளர்ந்துள்ளன.

இதன் மேலே செல்வதற்கு படிக்கட்டுகள் இருப்பதும், மேலே வீரர்கள் நின்று காவல் காக்கும் இடம் இருப்பதும், உள்ளே குளங்கள் உள்ளதும் இது ஆயுதத்  தொழிற்சாலையாக இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இதேபோன்ற ஒரு ஆயுத தொழிற்சாலை அரண்மனை ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து அழிந்துள்ளது. அதன் அடிப்பகுதியையும், ஒரு பகுதி சுற்றுச்சுவரையும் இப்போதும் அங்கு காணலாம். இவ்வாறு அவர் கூறினார். தங்கள் ஊர் வரலாற்று பெருமை சொல்லும் இந்த அரண்மனையை நினைவுச் சின்னமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர் கேட்டுக் கொண்டனர்.

Next Story

ரூ. 112 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; ராமநாதபுரத்தில் பரபரப்பு

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Rs. 112 Crore cannabis seized  to Sri Lanka

தமிழக கிழக்கு கடற்கரை கிராமப் பகுதிகளைக் குறிவைத்து அந்தப் பகுதிகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் நடப்பதும் அதேபோல இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும் வழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், திருச்சி மற்றும் ராமநாதபுர சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் (CIU) சோதனையில் ஈடுபட்டபோது மீமிசல் வெளிவயல் உப்பளம் அருகே நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான் என்பவரது இறால் பண்ணையில் இருந்து ரூ. 110 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில் (அசிஸ்), மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள 874 கிலோ கஞ்சா மூட்டைகள் உட்பட மொத்தமாக ரூ.112 கோடி மதிப்பிலான போதைப் பொருள் வைத்திருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த கடத்தல் தொடர்பாக எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த இருவரையும் மீமிசல் அரசனகரிபட்டினம் பகுதியைச் சேர்ந்த இறால் பண்ணை காவலாளி முஜிபுர் ரஹ்மான் உட்பட மூன்று பேரையும் பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் விசாரணையில், இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது? யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது? இலங்கைக்கு எந்த வழியாக யார் கொண்டு செல்ல இருந்தது என்பதும் மேலும் வேறு கஞ்சா பதுக்கல் குடோன்கள் எங்கெல்லாம் உள்ளது என்றும் விசாரணையில் தெரிய வரும் என்கின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள போதைப் பொருட்களின் உரிமையாளரைத் தேடி வருவதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 112 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மத்திய சுங்கத்துறை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.