Skip to main content

மதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு!

Published on 04/08/2020 | Edited on 04/08/2020
1000 year old raja raja chola scriptures and Mahavira statue found near madurai

 

1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம், ராஜராஜ சோழன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகில் காரைக்கேணி ஊராட்சிக்குட்பட்ட செங்கமேடு பகுதியில் கி.பி.9ஆம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிற்பமும், கி.பி.10ஆம் நூற்றாண்டை சேர்ந்த முதலாம் ராஜராஜசோழன் வட்டெழுத்துக் கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

1000 year old raja raja chola scriptures and Mahavira statue found near madurai

 

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்று துறை தலைவர் முனைவர் து.முனீஸ்வரன், வரலாற்றுத்துறை மாணவர் ம.மணி, தமிழ்த்துறை மாணவர் நீ.பழனிமுருகன், வழக்கறிஞர் மோ.நாகபாண்டியன் ஆகியோர் கொண்ட குழுவினர், தேவட்டி முனியாண்டி கோவில் அருகில் செங்கமேடு பகுதியில் பாழடைந்த நிலையில் இருந்த பழமையான சத்திரம், கிணறு ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, அவற்றின் சுவரில் உள்ள கற்களில் பழமையான தமிழ் மற்றும் வட்டெழுத்து கல்வெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கல்வெட்டாய்வாளர் ஒருவரின் உதவியுடன் படிக்கப்பட்டதில் இவை முதலாம் இராஜராஜசோழன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டுகள் எனத் தெரியவந்தது.

 

அங்கிருந்து 500மீ தூரத்தில் ஒரு மகாவீரர் சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

1000 year old raja raja chola scriptures and Mahavira statue found near madurai

 

இது குறித்து முனைவர் து.முனீஸ்வரன் கூறியதாவது, சத்திரத்தின் சுவர்ப் பகுதியில் சிறு சிறு துண்டுகளாய் இருந்த தமிழ்க் கல்வெட்டுகளில் உள்ள சொற்களை கொண்டு, அவை கி.பி.13ஆம் நூற்றாண்டை சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்திக் கல்வெட்டு என அறியமுடிகிறது. வட்டெழுத்து கல்வெட்டு சத்திரம் மற்றும் கிணற்றில் 8 வட்டெழுத்து துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. இவை காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி என்ற விருது பெயருடன் தொடங்கும் முதலாம் இராஜராஜசோழனின் 13ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தவை. இதன் காலம் கி.பி.998 ஆகும். கிரந்த எழுத்து கலந்து எழுதப்பட்டுள்ள இதில், செங்குடி நாட்டில் உள்ள திருஉண்ணாட்டூர் என்ற ஊர் கோவிலில் விளக்கு எரிக்க கொடுத்த கொடை சொல்லப்பட்டுள்ளது. இக்கோவிலின் பெயர் "அர்ஹா" எனத் தொடங்குகிறது. அக்கல்வெட்டின் மீதிப்பகுதி சத்திரத்தில் உள்ள தூணின் அடிப்பகுதியில் மறைந்துள்ளது. சமஸ்கிருதத்தில் உள்ள இதனை அருகன் எனக் கொண்டால் இதை சமணப்பள்ளியாகக் கருதலாம்.

 

இதன் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 24வது சமணத் தீர்த்தங்கரரான மகாவீரரின் கருங்கல் சிற்பமும் இதை உறுதியாக்குகிறது. மகாவீரர் சிற்பம் இச்சிற்பம் 3¼ அடி உயரமும், 2¼ அடி அகலமும் உள்ளது. இதன் பீடத்தில் மூன்று சிங்கங்கள் உள்ளன. அதன் மேல் இருபுறமும் நின்ற நிலையிலான இரு சிங்கங்கள் தாங்கியுள்ள சிம்மாசனத்தில் அர்த்த பரியங்க ஆசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். சிம்மாசனத்தில் உள்ள திண்டின் இருபுற முனைகளும் மகரத் தலைகளாக உள்ளன. மகாவீரரின் இருபுறமும் சாமரம் வீசும் இரு இயக்கர்கள் உள்ளனர். அவர் தலைக்கு மேல் முக்குடையும், பின்புறம் பிரபாவளி என்னும் ஒளிவட்டமும் உள்ளன. சிங்கம் மகாவீரரின் வாகனம் ஆகும். இதன் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டாக கருதலாம். மகாவீரர் சிற்பம் மற்றும் கல்வெட்டுகள் மூலம், கி.பி.9ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரையில் இங்கு ஒரு சமணப்பள்ளி வழிபாட்டில் இருந்து அழிந்ததை அறியமுடிகிறது.

 

1000 year old raja raja chola scriptures and Mahavira statue found near madurai

 

இவ்வூர் அருகிலுள்ள காரைக்கேணியில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளதும் கருதத்தக்கது. இப்பகுதியில் சிதறிக்கிடக்கும் செங்கற்கள் மூலம் இங்கு இருந்த சமணப்பள்ளி முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டதாக இருந்திருக்கும் எனக் கருதலாம். கல்வெட்டில் இப்பகுதி செங்குடி நாட்டில் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

 

இதில் செங்குடி என்பது விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரம் ஆகும். கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திருஉண்ணாட்டூர் எனும் ஊர்தான் இப்பகுதியில் இருந்து அழிந்துபோன ஊராக இருக்கலாம். இங்கு இடைக்காலப் பானை ஓடுகள், செங்கற்கள் அதிகளவில் சிதறி கிடக்கின்றன. சேதமடைந்த நிலையில் இருந்த சமணப் பள்ளியின் கற்களைப் பெயர்த்தெடுத்து பிற்காலத்தில் அவற்றை சத்திரத்திலும் கிணற்றிலும் பயன்படுத்தியுள்ளனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.