Skip to main content

சசி-எடப்பாடி சமரசம்! புது ரூட் போடும் சொந்தங்கள்!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020
Sasikala

 

கடந்த 11ஆம் தேதி தஞ்சாவூர் பக்கத்தில் சுவாமிமலை ரிசார்ட்டில் தினகரனின் மகள் ஜெய ஹரிணிக்கும், துளசி அய்யா வாண்டையார் பேரன் ராமநாதனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்துக்கு திவாகர் அழைக்கப்படவில்லை. 14ஆம் தேதி தினகரனின் மாமனாரும் அனுராதா, பிரபா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரின் அப்பாவுமான சுந்தரவதனம் மரணமடைந்தார். பல நாட்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடல்நலம் சரியில்லாமல் இருந்த சுந்தரவதனம், சசிகலாவின் சகோதரர்.

 

சசிகலாவின் குடும்பத்தில் மூத்தவரான சுந்தரவதனத்தின் மறைவு சசிகலாவை ரொம்பவே பாதித்தது. விவேகானந்தனின் மறைவுக்காக சசிகலா பரோலில் வர முயற்சி செய்தார். உடனடியாக அவருக்கு பரோல் தரமுடியாது என சிறை நிர்வாகத்தின் தரப்பில் வாய்மொழியாக சொல்லப்பட்டது. சசிகலா வரவில்லை. ஆனால் ஒட்டுமொத்த மன்னார்குடி குடும்பமே அந்த இறுதி நிகழ்வில் பங்கெடுத்தது. சென்னையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஒருநாள் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெயா டி.வி பாஸ்கரனை தவிர மற்ற அனைவரும் அந்த துக்க நிகழ்வில் பங்கெடுத்தனர். டிடிவி தினகரன், அனுராதா, பிரபா அவரின் கணவர் டாக்டர்.சிவகுமார், திவாகரன் அவரது மகன் ஜெய் ஆனந்த், சுதாகரனின் மனைவி, பாஸ்கரனின் மனைவி என ஒட்டுமொத்தமாக மன்னார்குடியே தஞ்சாவூரில் உள்ள சசிகலாவின் வீட்டில் திரண்டிருந்தது.

 

ddd

                                                                                  சுந்தரவதனம்

 

திவாகரனும், தினகரனும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் திவாகரனின் மனைவியும், தினகரனின் மனைவியும், மறைந்த சுந்தரவதனத்தின் மகளுமான அனுராதாவிடம் பேசினார். அதேபோல் ஜெயா டி.வி எம்.டியான விவேக், தினகரனுடன் சமீபகாலமாக பேசாமல் இருந்தார். அவரும் தினகரனோடு பேசினார். இப்படி மன்னார்குடி சொந்தங்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து பேசிய பேச்சு அரசியல் பக்கம் திரும்பியது. சொந்தபந்தங்கள் அரசியல் பேசவேண்டாம் என்ற சசிகலாவின் கட்டளையை மீறி இது நடந்தது.

 

சசிகலா வெளியே வந்தால் என்ன நடக்கும் என்ற பேச்சு அங்கு எழுந்தது. சசிகலாவுக்காக தி.நகரில் ஒரு புத்தம் புதிய மாளிகை ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள வசதிகள் பற்றி பேச்சு வந்தது. அதன்பிறகு எடப்பாடி ஆட்சி, பற்றியும், அமைச்சர் துரைக்கண்ணு மரணம், கைப்பற்றப்பட்ட கோடிகள் என பேச்சில் சுவாரசியம் அதிகரித்தது. இனி எடப்பாடியுடன் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி மன்னார்குடி சொந்தங்களுடன் ஒரு பட்டிமன்றமே நடந்தது.

 

ddd

                         விவேக்            ஜெய் ஆனந்த்         தினகரன்      திவாகரன் 

 

தினகரன் தரப்பு, அ.ம.மு.க. உடன் கூட்டணி சேர்ந்து மூன்றாவது அணியை உருவாக்க காங்கிரஸ் தரப்பிலிருந்து அழைப்புகள் வருகிறது என்று தெரிவித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திவாகரன் தரப்பினர் எடப்பாடி பழனிச்சாமி திவாகரனுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசுகிறார். அமைச்சர்கள் எல்லோரும் நல்லபடியே இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தூண்டிவிட்டுதான் வருமானவரித்துறை அதிகாரிகள் சசிகலாவின் 1,500 கோடி சொத்துக்களை மடக்கினார்கள். அதெல்லாம் இப்பொழுது மாறிவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவுக்கு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறார் என்றார்கள். ஆனால் இதைப்பற்றி எல்லாம் வெளியில் பேசுவதற்கு சசிகலா அனுமதித்ததில்லை என தினகரன் தரப்பினரும், திவாகரன் தரப்பினரும் பேசிக்கொண்டார்கள்.

 

அதேநேரத்தில் சசிகலாவின் ஆஸ்தான தளபதிகளாக இருந்த ராவணன் போன்றோர் கொங்குமண்டல அமைச்சர்கள் தங்களிடம் சசிகலாவுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக வாக்களித்திருக்கிறார்கள் என பதிவு செய்தனர். இப்படி ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலா தரப்பிடம் பணிந்து நிற்கிறது என்பது போன்ற இமேஜ் அந்த மரண வீட்டிற்கு வந்த வந்தவர்கள் மத்தியில் உருவாகியிருந்தது என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமான மன்னார்குடி வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.

 

ddd

 

இதற்கிடையே ஓபிஎஸ் எப்படி இருக்கிறார் என்கின்ற சிறு பட்டிமன்றமும் அங்கு நடைபெற்றது. சசிகலா விஷயத்தில் பா.ஜ.க. இணக்கமாகவே இருக்கிறது. ஜனவரி மாதம் ரிலீஸ் ஆவதற்கு க்ரீன் சிக்னல் காட்டி விட்டது. பாஜக ஒத்துழைக்கும் நேரத்தில் ஓபிஎஸ்ஸும் சசிகலாவுக்கு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறார். சசிகலா வந்ததுமே எடப்பாடி முதல்வராக தொடர்வாரா என்கின்ற சந்தேகம்தான் இப்பொழுது எழுந்துள்ளது. அதிமுகவை தனது முழு கட்டுப்பாட்டில் எடப்பாடி வைத்திருக்கிறார். எனவே எடப்பாடிக்கு யாராவது தொந்தரவு கொடுத்தால் அது சசிகலாவிற்கு எதிரானதாக மாறிவிடும் என்கின்ற வாதமும் எடுத்து வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனின் மகன் பிரவீனின் திருமணம் வருகின்ற 27ஆம் தேதி சேலத்தில் நடைபெற இருக்கின்றது. மகாதேவனுக்கு நெருக்கமான இளங்கோவன், சசிகலா குடும்பத்துடன் நல்ல அறிமுகத்தை கொண்டவர். அவரது மகனின் திருமணத்திற்கு சசிகலாவின் உறவினர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தத் திருமணத்தில் எடப்பாடியும் கலந்து கொள்கிறார். அந்த திருமணத்தின் போது எடப்பாடிக்கும், சசிகலாவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை வலுப்பெறும் என மன்னார்குடி சொந்தங்கள் நம்பிக்கை தெரிவித்தபடி கலைந்து சென்றார்கள்.

 

-தாமோதரன் பிரகாஷ்,
துரை மகேஷ்

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.