சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, இந்தமுறை கிராமப்புற வாக்குகள் வழக்கத்தை விட அதிகமாகப் பதிவாகி உள்ளன. அதனால், இது யாருக்கு சாதகமாக இருக்குமோ என்கிற பதட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் இருக்கிறார்கள்.
சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நா.த.க. என நான்கு முனைப் போட்டி நிலவிய போதிலும் ஆளும் தரப்புக்கும், அ.தி.மு.க.வுக்கும்தான் நேரடிப் போட்டி.
தி.மு.க. தரப்பில் டி.எம்.செல்வகணபதி களத்தில் இறக்கப்பட்டார். அ.தி.மு.க. தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த காண்ட்ராக்டர் பரமசிவத்தின் மகன் விக்னேஷ் களம்கண்டார்.
சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தலைவருமான எடப்பாடியின் சொந்த சட்டமன்றத் தொகுதியான எடப்பாடியில் அதிகபட்சமாக 84.71 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளரின் சொந்த சட்டமன்ற தொகுதியான ஓமலூரிலும் 82.93 சதவீத வாக்குகள் பதிவாக, வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் 84.68 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
கிராமப் புறங்கங்களைக் கொண்ட மேற்கண்ட தொகுதிகளில் நிலவரம் இப்படி என்றால், சேலம் நகர்ப்புறத்தில் தி.மு.க.வின் கோட்டையாகப் பார்க்கப்படும் சேலம் வடக்கில் 70.50 சதவீதமும், சேலம் மேற்கில் 70.70 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேசமயம், அ.தி.மு.க.வின் செல்வாக்குமிக்க சேலம் தெற்கில் 75.49 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
வன்னியர்கள் மற்றும் கொங்கு வெள் ளாள கவுண்டர்கள் கணிசமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி சட்டமன்ற தொகுதிகளில் சராசரி யாக 84.10 சதவீதம் வாக்குகள் பதிவாகி யுள்ளதுதான் தி.மு.க., அ.தி.மு.க. கட்சி களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடம் நாம் கேட்டபோது "தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியிருக்கும் முன்னாள் அமைச்சரான டி.எம்.செல்வகணபதிக்கு எதிராக, இலைத் தரப்பில் 31 வயது இளைஞரான விக்னேஷ் களமிறக்கப்பட்டார். இதைப் பார்த்ததும், தி.மு.க. எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்ற பேச்சு எழுந்தது. நாங்களும் அப்படித்தான் நம்பினோம். எங்கள் அ.தி.மு.க.வின் இலக்கும்கூட 2026 சட்டமன்றத் தேர்தல்தானே தவிர, இந்த நாடாளுமன்றத் தேர்தல் அல்ல. ஆனாலும், எடப்பாடியாரின் சொந்த மண்ணில் அ.தி.மு.க. தோற்றுப் போய்விடக்கூடாது என்பதால் எல்லோருமே ஒருங்கிணைந்து தீயாக வேலை செய்தோம். அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்ட ஒரே வாரத்தில், இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவது அத்தனை சுலபமானது அல்ல என்ற நிலையை ஏற்படுத்தினோம்.
வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் மேற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அந்த சமூக பிரமுகர்களை எடப்பாடி, நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி சேர்ந்ததில் அந்தக் கட்சித் தொண்டர்களுக்கே உடன்பாடு இல்லை. அவர்களின் அதிருப்தி எங்களுக்கு சாதகமாக மாறியது. மேலும், அ.தி.மு.க. ஆட்சியில்தான் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு தரப்பட்டது. அதனால் இந்தமுறை வன்னியர் சமூக வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கூடுதலாக பதிவாகியிருக்கும் என்று நம்புகிறோம்'' என்றனர் உற்சாகமாக. நாம் களத்தில் இறங்கி மேலும் விசாரித்தபோது...
"அதிகமாக வாக்குப்பதிவு நடந் தால், ஆளுங் கட்சிக்கு எதிரான தாகத்தான் இருக் கும் என்ற யூகத்தைச் சொல்லும் இலைக் கட்சி ர.ர.,க்கள், கிராமப்புற வாக்கு கள் தங்களுக்குதான் சாதகமாக இருக்கும்'' என்றும் கூறு கின்றனர்.
அதேபோல் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடமும் நாம் விசாரித்தோம். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில், இதே சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. மண்ணைக் கவ்வியிருக்கிறது. அதனால் சேலத்தை அக்கட்சியின் கோட்டை என்பதை ஏற்க முடியாது. தி.மு.க. தரப்பில் மக்களுக்கு நன்கு அறிமுகமான வேட்பாளரை நிறுத்தினோம். மேலும் எங்கள் தரப்பில், தேர்தல் களத்தில் வேறு பல வியூகங்களும் வகுக்கப்பட்டன. பெண்களுக்கு இலவசப் பேருந்து திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் ஆகியவை பெரிய அளவில் "ரீச்' ஆகியிருக்கின்றன. அதனால் ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து வந்த பெண் வாக்காளர்களின் கவனம், இந்தமுறை கணிசமாக தி.மு.க. பக்கம் திரும்பியிருக்கிறது. அதனால்தான் சேலம் தொகுதியில் கிராமப் புறத்தில் வாக்குப்பதிவு அதிகமாக நடந்துள்ளது. எனவே, கள நிலவரம் எங்கள் தி.மு.க.வுக்குதான் சாதகமாக உள்ளது'' என்றார்கள் உறுதியான குரலில்.
இது ஒருபுறம் இருக்க, புறநகர் பகுதிகளில் தி.மு.க. தரப்பில் 70-75 சதவீத வாக்காளர்களுக்கு 500 ரூபாய் வீதம் பாய்ந்திருக்கிறது. சேலம் நகர்ப்புற வாக்காளர்களில் 65 சதம் பேருக்கும் இதேபோன்ற பட்டுவாடா நடந்திருக்கிறதாம். மிச்சம் பேருக்குப் பாயவேண்டிய கரன்சிப் பாசனத்தை, நிர்வாகிகள் சிலர் தங்கள் பக்கம் பாய்ச்சிக்கொண்டார்களாம்.
இதேபோல் இலைத்தரப்பும் எடப்பாடி பகுதி வாக்காளர்களுக்கு தலா 500-ம், மற்ற சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு தலா 250 ரூபாயும் வழங்கியிருக்கிறதாம். எனினும் கூட்டணி பலம் காரணமாக, தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கே சாதகமாக இருக்கும்'' என்கிறார்கள் பலரும்.
இதற்கிடையே "முதல் தலைமுறை வாக்காளர்களில் கணிசமானோர் நாம் தமிழர் கட்சிக்கு இந்தமுறை ஆர்வத்தோடு வாக்களித்த தால், பதிவின் விகிதம் கூடியிருக்கிறது'' என்கிறார்கள் சீமானின் தம்பிகள்.
எனினும், சேலத்தில் கூடுதலாகப் பதிவான கிராமப்புற வாக்குகள் யாரை ஆதரித்திருக்கின்றன என்ற கேள்வி, அனைவரையும் சஸ்பென்சிலேயே வைத்திருக்கின்றது.