காலையில் மக்கள் கண்விழிப்பது வாட்ஸ்ஆப் முகத்தில்தான். அந்தளவுக்கு தாக்கம் ஏற்படுத்தியுள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட ரகசியங்களை திருடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சுமார் 340 மில்லியன் மக்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர்.
வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய நிபந்தனைகள்படி, நமது உரையாடல்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை சேமித்து அவற்றை மேலாண்மை செய்வதற்கான உரிமை வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு இருப்பதாகக் குறிப்பிட்டு இதற்கு ஒப்புதல் கொடுக்குமாறு ஒவ்வொரு வாடிக்கை யாளரையும் கேட்கிறது வாட்ஸ்ஆப்.
கடந்த சில தினங்களாக மேம்படுத்தப்பட்ட விதி முறைகள் செல்போன் திரையில் தோன்றி, அதை ஏற்பது (Agree) அல்லது பின்னர் முடிவு செய்வது Now) என்ற இரு முடிவில் ஏதேனும் ஒன்றை முடிவு செய்யுமாறு கேட்டு வருகிறது. அதில் பயனாளர்கள் பின்னர் முடிவு செய்வது (Not Now) என்று கொடுத்தால் மறைந்துவிடும். ஆனால், பலரும் ஏற்பது (Agree) என்பதை தேர்ந்தெடுத்துக் கடந்து சென்று விடுகின்றனர். லா க்வாட்ரேச்சர் டு நெட் எனும் அமைப்பின் வழக்கறிஞரான ஆர்தர் மெஸ்ஸாட் என்பவர், "தனிமனிதனின் தனிப்பட்ட தகவல்களை நிர்பந்திப்பதும், வாட்ஸ்ஆப் புதிய மேம்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்காதவர்களை செயலியில் இருந்து வெளியேற்றுவதும் சட்ட விரோதமானது'' என்று கூறியிருக்கிறார்.
பத்தாண்டுகளுக்கு முன் அதிகபட்சம் தினமும் 100 எஸ்.எம்.எஸ்.தான் என்று வாழ்ந்த இளைஞர்களுக்கு வாட்ஸ்ஆப் மிகபெரிய புரட்சியையே உருவாகியது. பலமுறை வாட்ஸ்ஆப் ஹாக் செய்யப்படுகிறது, அதன் தகவல்கள் திருடப்படுகிறது என பல செய்திகள் வந்தபோதும் தன்னுடைய வாடிக்கையாளர்களை இழக்காமல் அவ்வப்போது புதிய புதிய அப்டேட்டுகளை கொடுத்து வந்ததது வாட்ஸ்ஆப் நிறுவனம்.
2014ல் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் நிறுவனத்தை வாங்கியது. அதற்குபிறகு வாட்ஸ்ஆப்பின் பாதுகாப்பு தன்மைகளும் அதிகரிக்கப்பட்டது. கல்லூரி மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள், தொழில் முனைவோர்கள் என அனைவருக்கு மான செயலியாக வெற்றிநடை போட்டுவந்த வாட்ஸ்ஆப் செயலி தற்போது புதிய மேலாண்மை அறிவிப்பால் தங்களின் வாடிக்கையாளர்களை இழந்துவருகிறது. வாட்ஸ்ஆப்புக்கு பதில் டெலிகிராம் எனும் செயலியும், சிக்னல் எனும் செயலியும் மக்களை ஈர்த்துவருகின்றன.
இதுகுறித்து சைபர் சமூக ஆர்வலர் வினோத் ஆறுமுகம் நம்மிடம், ""இந்தியா என்பது ஒரு வணிக சந்தை. அதில் வாட்ஸ்ஆப் நிறுவனம் ஏற்கனவே பல நாடுகளில் தன் மேலாண்மை திட்டத்தை துவங்கிய நிலையில் தற்போது இந்தியாவில் தன் வியாபாரத்தை துவங்கி இருக்கிறது. வாட்ஸ்ஆப் தன்னுடைய புதிய திட்டம் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பர், எவ்வளவு சிக்னல் (signal)உள்ளது, பேட்டரியின் அளவு, நீங்கள் என்ன பிரௌசர் Browser பயன்படுத்துகிறீர்கள் என்றும் சேகரிப்பார்கள். உங்கள் கைபேசியின் ஐபி அட்ரஸ், டைம் சோன், பயன்படுத்தும் மொழி போன்ற பல தகவல்களை சேகரிப்பார்கள். இதனோடு வாட்ஸ்ஆப் பயனாளர்கள் பரிமாறிக்கொள்ளும் செய்திகள், புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் சேகரிப்பார்கள். இப்படி சேகரிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் விவாதித்துக்கொள்ளும் விஷயங்கள் தொடர்பான விளம்பரங்களை அவர்களுக்கே அனுப்புவார்கள்.
மக்களால் வாட்ஸ்ஆப்பை நிராகரித்துவிட்டு அவ்வளவு எளிதில் வேறு செயலிக்குள் நுழைந்துவிடமுடியாது. காரணம்... முன்பெல்லாம் பண்டிகை காலத்தில் நாம் சாதாரண எஸ்.எம்.எஸ். மூலம் வாழ்த்து சொல்லவேண்டும் என்றால் அதிக கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். அப்படியான தடையை உடைத்ததுதான் வாட்ஸ்ஆப். எனவே வாட்ஸ்ஆப் நிறுவனம் தற்போது அறிவித்துள்ள தகவல் சேகரிப்பு என்பதுகூட எந்திரம்தான் சேகரிக்கும். நாம் உரையாடும் வார்த்தைகளுக்கு ஏற்ப விளம்பரத்தை நமக்கு அனுப்பிய பின் அதை அந்நிறுவனமே அழித்துவிடும்'' என்று கூறினார் உறுதியாக.
வாட்ஸ்ஆப் நிறுவனமும் மக்களிடம் "தவறான தகவல்களை பலரும் பரப்புவதாகவும், எப்போதும்போல தங்கள் செயலியைப் பயன்படுத்தலாம்' என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனாலும், மக்களிடம் அச்சம் விலகவில்லை. ""நவீன உலகில் ஆண்ட்ராய்டு கைபேசி பயன்படுத்தும் மக்கள் ப்ரைவசி என்ற வார்த்தையை பயன்படுத்துவதே அர்த்தமற்ற தாகும். நாம் கைபேசியில் இண்டர்நெட்டை ஆன் செய்துவிட்டு வீட்டிற்குள் ஏதேனும் பொருள் வாங்கவேண்டும் என்று உரையாடினால் அடுத்த நாளே அது, நாம் பயன்படுத்தும் ஏதேனும் செயலிமூலம் விளம்பரமாக காட்டப்படும். எனவே நாம் எங்கு செல்கிறோம், யாரிடம் என்ன பேசுகிறோம், நமது தேவை என்ன என்பதை நாம் பதிவிறக்கம் செய்திருக்கும் செயலி மூலமே ஒட்டுக் கேட்டு அதை விளம்பரமாக்கி நம்மை வாங்க கட்டா யப்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்'' என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள்.
சைபர் வலையில் மொத்தமாக சிக்கி யிருக்கிறது மனித குலம்.