சென்னை எழும்பூர் ரயில்வே சாலையின் ஓரமாக வெகுகாலமாக வீடுகள் இல்லாமல் இருந்துவந்த 52 குடும்பங்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு, அத்தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பரந்தாமன் அவ்வீடுகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, சென்னை, எழும்பூர் இர்வின் சாலை ஓரமாக வசித்து வந்தவர்கள், “"எங்களையும் மனிதர்களாகப் பாவித்து, எங்களுக்கும் வீடு வழங்க வேண்டும்'' என்று அத்தொகுதி தி.மு.க. வேட்பாளரான பரந்தாமனிடம் கோரிக்கையை முன்வைத்தனர். அந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் வெற்றிபெற்று அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக வந்தார். அதேபோல தி.மு.க.வும் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி பீடத்தில் ஏறியது.
வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக வந்தவுடன் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வேலையில் இறங்கினார் பரந்தாமன். அப்பகுதி மக்களுக்கு கடந்த 04.01.22-ம் தேதி, எழும்பூர் ராஜா முத்தையா சாலையிலுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற வீடற்றோருக்கான காப்பகத்தில் புளியந்தோப்பு கே.பி. பார்க் அடுக்குமாடிக் குடியிருப்பில், 52 குடும்பங்களுக்கும் எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் வீடு ஒதுக்கினார்.
அதனைத்தொடர்ந்து, 11-ம் தேதி காலையில் 52 குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்காக அரசு அதிகாரிகளின் முன்னிலையில், பயனாளிகளின் கை ரேகை மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதன்பின், யாருக்கு எந்த வீடு என்பதை முடிவு செய்ய குலுக்கல் முறையில் வீடுகளைத் தேர்வுசெய்யும் பணி தொடங்கியது. பயனாளிகளுக் கென ஒதுக்கப்பட்ட வீட்டு எண்களை சீட்டில் எழுதி ஒரு குடத்தினுள் போட்டு குலுக்கி, எந்த எண் யாருக்கு வருகிறதோ, அவர்களுக்கு அந்த வீடு வழங்கப்பட்டு, அவர்கள் அங்கே குடியமர்த்தப் பட்டனர். அவ்வீடுகளில் குடியேறிய மக்கள் அனைவரின் முகத்திலும் பரவசத்தைக் காண முடிந்தது. சாலையோரங்களில், ஒரு மழைக்குக்கூட தாங்காத இருப்பிடத்தில் பல காலமாக வாழ்ந்துவந்த மக்களுக்கு, உரிய மதிப்பளித்து, அவர்களுக்கான இருப்பிடத்தை உறுதிசெய்த புதிய அரசை அனைவரும் வெகுவாகப் பாராட்டினார்கள்.
புதிய குடியிருப்பில் வீடு கிடைத்த உசேன், வைத்தீஸ்வரி ஆகியோரிடம் பேசியபோது, "நாங்கள் காலங்காலமாக சொந்த வீடு இல்லாமல் தெருக்களில் தான் வாழ்க்கையை நடத்திவந்தோம். எங்களுக்கான ஒரு வீடு வழங்குமாறு கடந்த பத்தாண்டுகளாகக் கேட்டுக்கேட்டுச் சலித்துப் போனோம். தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் எங்கள் வாழ்வில் விடியல் கிடைத்துள்ளது. மழைக்காலங்களில் வீடு ஒழுகுவதால், குழந்தைகளோடு தெருக்களின் ஓரத்திலுள்ள கடைகளின் முன்புறத்தில் தங்கலாமென்றால் கடையின் உரிமையாளர்கள் வந்து எங்கள்மீது இரக்கமே இல்லாமல் விரட்டி விடும் அவலம் தான் இருந்தது. அந்த நிலையை மாற்றி, எங்கள் எம்.எல்.ஏ. அவர்கள் இந்த வீட்டைக் கொடுத்துள்ளார்கள். இந்த பேருதவியை நாங்கள் உயிருள்ளவரை மறக்கமட்டோம்" என்றனர்.
"இந்த வீடு ஏற்கனவே தரமற்றது என்ற நிலை யில், இந்த வீட்டினுள் உங்களைக் குடியமர்த்தியது பரவாயில்லையா?" என்றதற்கு, "வீடே இல்லாமல் இருந்த எங்களுக்கு இந்த வீடே பரவாயில்லை" என்று நம்பிக்கையோடு பேசினார்கள். "நாங்கள் இனிமேல் தெருவாசி இல்லை என்ற அந்த சந்தோ சமே போதும்" என்றார்கள்.
வீடு வழங்கிப் பேசிய எம்.எல்.ஏ. பரந்தாமன், "சென்னை முழுவதுமாக ஆங்காங்கே தெருக்களின் ஓரமாகத் தங்கிருந்த மக்களுக்கு தி.மு.க. ஆட்சி வந்தால் நிச்சயம் குடியிருப்பு வழங்கப்படும் என்று தி.மு.க. சார்பில் அறிவித்திருந்த நிலையில், அதில் முதல் கட்டமாக என்னுடைய தொகுதியான எழும்பூர் பகுதியைச் சார்ந்த 52 குடும் பங்களுக்கு தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இன்று வீடு வழங் கப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின் இந்தத் திட்டத் திற்கு உதவி செய்தார். அவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்''’ என்றார்.