சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அப்பாவையும், மகனையும் அடித்துக் கொன்ற போலீஸ் விவகாரம் ஐ. நா. மனித உரிமை மன்றம் வரை சென்ற நிலையில், அந்த காவல் நிலையத்திற்கு பக்கத்திலே இருக்கின்ற தட்டார்மடம் காவல் நிலையத்திலோ ரூ. 6கோடி நிலப்பிரச்சனைக்காக எம்.எல்.ஏ. ஆதரவுடன் ஆளுந்தரப்பு பிரமுகருக்காக, இன்ஸ்பெக்டர் தலைமையிலான டீம் நடத்திய விசாரணைப் படுகொலை ஏற்படுத்திய கோப அலை அத்தனை எளிதாக ஓயவில்லை.
செல்வன் என்பவரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேலும் அவருக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனும் இருந்ததுதான் இந்த மர்ம மரணத்தின் பின்னணி. வியாழனன்று சரியாக மதியம் 1.28 மணியளவில் தட்டார்மடம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கொழுந்தட்டு அருகில் ராபர்ட் என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடை அருகில் எங்கிருந்தோ வந்த இரண்டு இன்னோவா கார்கள், ஒரு எர்டிகா கார் என மூன்று கார்களும் லாரியில் தண்ணீர் ஏற்றி அதனை விற்பனை செய்து வந்த சாத்தான்குளம் தாலுகா கொம்மடிக் கோட்டை சொக்கன் குடியிருப்பை சேர்ந்த தனிஷ்லாஸின் மகனான செல்வனின் இருசக்கர வாகனம்மீது மோதி, நிலை தடுமாற செய்ய வைத்து கீழே விழுந்த செல்வனை வலுக்கட்டாயமாக இழுத்து தங்களுடைய வாகனங்களில் ஏற்றி அருகிலுள்ள தேரிக்காட்டுப்பகுதியான காட்டுக்குளத்திற்கு சென்றது என தட்டார்மட காவல் நிலையத்திற்கு புகார் வந்த நிலையில், திசையன்விளை அரசு மருத்துவமனையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார் செல்வன். அவருடைய நிலத்தை அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் அபகரிக்க முயல, அதற்கு செல்வன் எதிர்ப்பு தெரிவித்ததன் பின்னணியில்தான் இந்த மரணம் நிகழ்ந்தது என்பதை கடந்த இதழில் விரிவாக எழுதியிருந்தோம்.
கொலையுண்ட செல்வனின் தாயார் எலிசபெத் கொடுத்த புகாரின் பேரில் 364, 302 ஆகிய பிரிவுகளின் கீழ் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணனை முதன்மைக் குற்றவாளி யாகவும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் திருமணவேலை இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்த்து வழக்கு பதிவு செய்தார் திசையன்விளை காவல் நிலைய எஸ்.ஐ.மகேஸ்வரி. கொலையுண்ட செல்வனின் சொந்த ஊரான சொக்கன்குடியிருப்பில் சனிக்கிழமையன்று ஆலயமணி அடித்து திரண்ட ஊர்க்காரர்கள், ""போலீசின் அடியாள்தனத்தால் கொலையான செல்வனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், அரசு நிதி உதவியும் செய்யவேண்டும். அதே வேளையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளையும், கூலிப்படையினரையும் கைது செய்ய வேண்டும்'' என கோரிக்கை வைக்க, மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரே நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலைமை உருவானது.
கொலையுண்ட செல்வன் கடத்தப்பட்ட கொழுந்தட்டு பகுதியும், அடித்து வீசப்பட்ட காட்டுக்குளமும் தூத்துக்குடி மாவட்ட தட்டார்மட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி, அப்புறம் ஏன் நெல்லை மாவட்ட திசையன்விளை அரசு மருத்துவமனையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்..? அவரை அங்கு கொண்டு சேர்த்தது யார்..? என்ற கேள்வியும், அவசரம் அவசரமாக இன்ஸ்பெக்டர்மீது உடனடியாக கொலை வழக்குப் பதிய காரணமென்ன.? என்ற கேள்வியும் தொக்கி நிற்க, உளவுத்துறை அதிகாரி ஒருவர் அதற்கு விடை பகிர்ந்தார்.
""இது முழுக்க முழுக்க இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் போட்ட ஸ்கெட்ச். திருமணவேல், தாமரைமொழி இசக்கி, குருந்தக்கோட்டை பிரபு... இவங்க மூன்று பேருமே பெரிய அளவில் வட்டித்தொழில் செய்து வருபவர்கள். இவர்களுக்கு முழு ஆதரவாளராகவே மாறிய இன்ஸிற்கு ஷேர்மார்க்கெட்டிங் மீது மிகப்பெரும் ஆர்வமும், அறிவும் இருந்ததால் ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளனர் மேற்கண்ட மூவரும்.! இதே வேளையில் பங்காரு, பீட்டர் மற்றும் செல்வன் ஆகியோர் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் விஸ்வாஸ் திருமண மண்டபம் அருகிலும், ஏப்ரல் மாதத்தில் படுக்கப்பத்து தோட்டம் அருகிலும், ஆகஸ்ட் மாதத்தில் காந்திநகர் அருகிலும் திருமணவேலை அட்டாக் செய்துள்ளனர். இனிமேல் இவர்களை உயிரோடு விட்டால் நமக்கு நல்லதில்லை. அதனால் நாம் அட்டாக் செய்தால் அவர்கள் ஒதுங்கி விடுவார்கள் என இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஸ்கெட்ச் போட, நாகர்கோவில் பகுதியினை சேர்ந்த கூலிப்படையினரை கொண்டு வந்து செல்வனை கடத்தி கொலை செய்துள்ளனர்.
ஷேர்மார்க்கெட் முதலீடும், இவர்களுக்கிடையேயான மொபைல் எண் பதிவுகளும் உறுதியான ஆதாரமாக சிக்கியதாலே இன்ஸ்பெக்டரை முதன்மைக் குற்றவாளியாக்கி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைவிட முக்கியமான ஒன்று கொலை நடந்த நாளில், இன்ஸ்பெக்டரின் மொபைல் எண்ணுடன், திருமணவேலின் மொபைல் எண்ணும் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவரின் எண்ணும் ஒன்றாக உரையாடிருப்பதாகவும் பதிவுகள் உள்ளது. விரைவில் அவரும் இந்த வழக்கில் கொண்டு வரப்படுவார். திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு செல்வனின் உயிரற்ற உடலை கொண்டு சென்றது ஒரு போலீஸ்காரர் என முதற்கட்ட விசாரணையில் தெரிகின்றது. எனினும் இதன் பின்னணியில் உள்ள அனைவரும் கைது செய்யப் படுவது நிச்சயம்'' என்கிறார் அவர்.
காவல் ஆய்வாளர் மற்றும் அதிமுக பிரமுகரால் படுகொலை செய்யப்பட்ட செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு சொக்கன் குடியிருப்பில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர் பொதுமக்கள். நிலைமை மிகவும் சீரியசாக இருப்பதாக உளவுத்துறை மூலம் கோட்டைக்கு தகவல் போய்க் கொண்டிருந்தது.
குற்றவாளிகள் மீது எவ்வித கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை காவல்துறை. மாறாக இன்ஸ்பெக்டரை மட்டும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்ததை மக்கள் ஏற்கவில்லை. ""கொலைக்குக் காரணமான குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே கொலையுண்ட செல்வனின் உடலைப் பெற்றுக் கொள்வோம்'' என போராட்டத்தினை துவங்கினர் செல்வனின் உறவினர்கள். மாவட்ட எஸ்பி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டத்தினை கைவிடவில்லை சொக்கன் குடியிருப்பு வாசிகள். இதேவேளையில், ஆளுங்கட்சிக்காக களமிறங்கிய குறிப்பிட்ட அமைப்பினர், ""உடலை பெற்றுக்கொள்ளுங்கள்.. பணம் வாங்கித் தருகிறோம்'' என பஞ்சாயத்து நடத்தியும் பார்த்தனர். எதற்கும் அசையவில்லை அம்மக்கள்.
இந்நிலையில், ஞாயிறன்று மாலை வேளையில் மக்களோடு மக்களாக சேர்ந்து செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தினை துவக்கினார் திமுகவின் தூத்துக்குடி தெற்கு மா.செ-வாகவும், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ. வுமான அனிதா ராதாகிருஷ்ணன். போராட்டத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. கலந்து கொண்டதால் ஆளுந்தரப்புக்கு நெருக்கடி அதிகமானது. தி.மு.கவினரும் சுற்றுப்பட்டு பொது மக்க ளும் போராட்டத்தில் இணைய, போராட்டம் வீரியமானது.
எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனும் அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் தண்டுபத்துவிலுள்ள அனிதா ராதாகிருஷ்ணனின் வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரை இரு நபர்கள் உடைத்து எறிந்தனர். இது அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிய நிலையில் மெய்ஞான புரம் காவல் நிலையத்தார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். ""கொலையுண்ட செல்வனின் உடலை பஞ்சாயத்து பேசி ஒப்படைக்கலாம் என முயற்சியில் இறங்கிய ஆட்களே இதனை செய்திருக்கலாம்'' என்ற கோணத்தில் அந்த குறிப்பிட்ட அமைப்பினரை நோக்கி விசாரணை பார்வையை திருப்பினர்.
அனிதா ராதாகிருஷ்ணனின் கார் தாக்கப்பட்டதையடுத்து, தூத்துக்குடி எம்.பி.யும் தி.மு.க.வின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, "தமிழகத்தில் எம்.எல்.ஏ.விற்கே பாதுகாப்பு இல்லையா..? உட்கட்சி மோதல்களில் முழு கவனத்தையும் செலுத்தும் முதல்வர், சட்டம் ஒழுங்கையும் கவனிப்பாரா?' என்ற கேள்வியை ட்வீட்டரில் எழுப்ப, அது வைரலானது.
நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருப்பது முதல்வர் வரை தெரியவர, சாத்தான்குளம் இரட்டைக் கொலையின் ரத்தப் பிசுபிசுப்பு இன்னும் மறையாத நிலையில், தட்டார்மடம் விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆளுந்தரப்பில் ஆலோசிக்கப்பட்டது. இன்ஸ் பெக்டர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப் பட்டார். ஆளுங்கட்சி பிரமுகரான திருமணவேல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாக, அவர் கோர்ட்டில் சரணடைந்தார்.
ஆரம்பகட்ட நடவடிக்கைகளை ஏற்று போராட்டத்தின் வேகம் தணிந்தது. எனினும், நீதி கிடைக்கும்வரை இதனை விடப்போவதில்லை என வரிந்து கட்டுகிறது தட்டார்மடம்.
-நாகேந்திரன்