சென்னையில் மட்டும் ஒரு மாதத்தில் ஐந்து டன்னுக்கு மேல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை திருட்டுத்தனமாக, ரேஷன் கடைகளிலிருந்தும், புரோக்கர்கள் மூலமாகவும், இலவச அரிசி வாங்கும் மக்களிடமிருந்தும் மூட்டை, மூட்டையாக அரிசி கடத்தப்படுகிறது. பாலீஸ் போடப்பட்ட ரேசன் அரிசி, மீண்டும் அதிக விலைக்கு விற்கப் படுவது நடக்கிறது.
சென்னையில், செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் நிறைய அரிசி குடோன்கள் இருக்கின்றன. அந்த குடோன்கள் சிலவற்றில்தான் ரேஷன் அரிசியை மூட்டை மூட்டை யாகப் பதுக்கி வைக்கிறார்களாம். ஆனால் வெளிப்பார்வைக்கு விற் பனைக்கான அரிசி குடோன்களைப் போலிருக்கும்.
1970களில், பெரும்பான்மை மக்கள் ரேஷன் அரிசிச் சாப்பாடுதான் உட்கொண்டனர். கடைகளில் அரிசி வாங்கும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. எனவே அப்போது ரேசன் அரிசிக் கடத்தல் இல்லை. ஆனால் படிப்படியாக ரேசன் அரிசிப் பயன்பாடு குறையக் குறைய, ரேசன் அரிசியும் இலவச மாகக் கிடைக்கும் சூழலில், கடந்த பத்தாண்டுகளாக ரேசன் அரிசிக் கடத்தலென்பது ஒரு குடிசைத் தொழிலாகவே மாறிவிட்டது. பொது மக்கள் அதிகமாக ரேசன் அரிசியை வாங்காததால், ரேசன் கடைகளில் மூட்டை மூட்டையாகத் தேங்கும் அரிசி கடத்தப்படுகின்றது.
ரேசன் அரிசி வாங்குபவர் களுக்கு மட்டும் தான் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுமென்று அரசு உத்தரவிட் டுள்ளது. அதற்காகவே பொதுமக்கள் ரேசனில் அரிசி வாங்குகின்றனர். ரேசன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை, 90 சதவீதம் பேர், கிலோ 10 ரூபாய்வரை விலைவைத்து விற்கின்றனர். இந்த அரிசி கைமாறி கடத்தல்காரர்களிடம் செல்கிறது. அவர்களிடமிருந்து ஆந்திரா காக்கிநாடாவில் கிலோ 33 ரூபாய்க்கும், சூலூர்பேட்டையில் கிலோ 25 ரூபாய்க்குமாக விற்கப்படுகிறது. அங்குள்ள மில்களில் அரிசி பாலிஷ் போடப்பட்டு மீண்டும் தமிழகத்தில் கிலோ 63 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த ரேசன் அரிசியை சிறுகுறு வியாபாரிகள் மக்களிடம் நேரடியாக வாங்கி, புரோக்கர் களான வியாசர்பாடி அலிபாய், திருவொற்றியூர் பால்ராஜ் கண்ணன், நங்கநல்லூர் ரமேஷ், அரும்பாக்கம் பட்டாணி, காவாங்கரை விக்கி, செங்குன்றம் அருண், ஆவடி வேலு, திருவள்ளூர் குடோன் கதிர் ஆகியோரிடம் மொத்தமாகக் கொடுத்துவிடுவார்கள். அந்த அரிசியை அவர்கள் செங்குன்றத்திலுள்ள அரிசி குடோனுக்கு அருகிலுள்ள சாய் கிருஷ்ணா எடை மேடைக்கு இரவு நேரத்தில் கொண்டுவந்து அரிசியை எடை போட்டு, அங்கிருந்து ரைஸ் மில் குடோனுக்கு அனுப்பி வைப்பார்களாம்.
அதன்பிறகு அரிசியை பாலீஷ் போட்டு, போலி கம்பெனி பெயருடன் அரிசியை செங்குன்றத்திலிருந்து ஆந்திராவில் காக்கிநாடா பகுதிக்கு சாலை மார்க்கமாக, ஒரு நாளைக்கு இரண்டு லாரி அளவுக்கு கடத்துகிறார்கள். ஒரு லாரிக்கு சுமார் 25 டன் அரிசி வீதம் 2 லாரிக்கு 50 டன் அரிசி கடத்தப்படுகிறது. ஆந்திராவைப்போல் மற்ற மாநிலங்களுக்கும் 25 கிலோ மூட்டை அரிசி 900 முதல் 1100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விற்பனைக்கெல்லாம் ஒற்றை ராஜாவாக செங்குன்றத்தை சேர்ந்த கதிரேசன் இருக்கிறார். இப்பகுதியில் இவரை அறியாதவரே இருக்க முடியாது. இவர் ரேஷன் அரிசி கடத்திய வழக்குகளில் கைதாகி சிறைக்குச் சென்று வெளிவந்துள்ளார். உணவுப் பொருள் விற்பனை அதிகாரியை தன் கையில் வைத்துக் கொண்டு நினைத்தை சாதித்துக்கொள்வது இவரது பாணி யாம். அந்த வகையில்தான் தற்போது பணிபுரியும் டி.எஸ்.பி. சம்பத் என்ற அதிகாரியை கையில் போட்டுக்கொண்டு அரிசிக்கடத்தலை சாதித்துவருகிறாராம். அவ்வப்போது கணக்கு காட்டவே கீழ்மட்டத்தில் உள்ள வியாபாரிகளை மட்டும் பிடித்து வழக்குப் பதிவுசெய்து, உடனடியாக அவர் களை இவர்களே ஜாமீனில் வெளிக்கொண்டுவருவார்களாம்.
இந்த மாதத்தில் மட்டும் பல வழக்குகள் பதிவு செய் யப்பட்டாலும், குண்டாஸ்கள் போடப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் சிறுகுறு வியாபாரிகளிடம் அரிசி வாங்கிக்கொடுப்பவர்களே தவிர, கடத்தல் மன்னன்கள் யாரும் கைது செய்யப்படுவதில்லை என அங்கே பணிபுரியும் அதிகாரிகளே குற்றம்சாட்டுகின்றனர். மாதாமாதம் பல லட்சங்களை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு கண்டும்காணாமல் இருப்பதாலேயே பெரிய முதலைகள் அரிசிக்கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டபடி இருப்பார்கள்.
இந்த வருடத்தில் மட்டும் 3,885 குவிண்டால் அரிசி கைப்பற்றப்பட்ட தோடு, 4,091 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். 30 பேர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. 600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்படி திட்டமிட்டுச் செயல்படும் ஐ.ஜி.க்கு அவப்பெயர் உண்டாகும்படி கடத்தலுக்கு உதவும் அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட அதிகாரி களைக் களையெடுத்தால் இந்த ரேசன் அரிசிக்கடத்தலில் பெரிய முதலைகளும் நிச்சயம் பிடிபடுவார்கள் என்கிறார்கள்.
இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமாரிடம் கேட்டபோது, " நிச்சயம் இதுபோன்று தவறுகள் நடக்க வாய்ப்புகள் இல்லை. அப்படி இருந்தால் நிச்சயம் விசாரித்து அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். ஏழை மக்களுக்கான ரேசன் அரிசியைக் கடத்தும் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்.