porkalam

குழந்தைகளுக்கு மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை!

-எஸ்.டி.எஃப். வெறியாட்டம்!

Advertisment

சம்பு மனைவி வள்ளியம்மா தொடர்ந்து பேசுறாரு..

Advertisment

1995ஆம் வருசம் நீதிபதிகிட்ட கூட்டிட்டுப் போறதுக்கு முன்னாடி வரைக்கும் ஒர்க்ஷாப்புல வச்சு போலீஸ்காரங்க என்ன சித்ரவதை செஞ்சுக்கிட்டே இருந்தாங்க. ஜெயமாருதி வெங்கடேசமூர்த்தி, மூடலய்யா, அசோக்குமார், பாவா, குமாரசாமி இவங்கள்லாம் என் வீட்டுக்கு வந்து என்னயும் என் வீட்டுக்காரரையும் போலீஸ ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டுப் போனப்பதான் நான் அவங்கள முதன்முறையா பாத்தேன். தமிழ்நாடு போலீஸ்காரங்களும், அவங்களோட பல போலீஸ் அதிகாரிங்களும் என் வீட்டுக்கு வந்தாங்க.''

துரைசாமி மனைவி நல்லம்மா

""என்னப் பெத்தவங்க, ரெண்டு மகன்களோட நான் சங்கபாடியில் குடியிருக்கேன். கல்யாணம் ஆன ரெண்டுபேரு என்கூடப் பொறந்தவங்க இருக்காங்க. என் கணவர எட்டு வருஷத்துக்கு முன்னால போலீஸ்காரங்க கொன்னுட்டாங்க. ஓசூர்ல "உன் கணவர் இறந்துட்டார்'னு சொல்லி அவரோட படத்த போலீஸ்காரங்க காமிச்சாங்க. என் கணவர் மரணத்தப் பத்தி, நான் எம்.எம்.ஹில்ஸ் பட்டறையில இருந்தப்ப தெரிஞ்சுக்கிட்டேன். அப்போ நான் எட்டு மாச கர்ப்பமா இருந்தேன். சுமார் எட்டு... ஒன்பது வருசத்துக்கு முன்னால ஒருநாள் ராத்திரி பத்து மணிக்கு போலீஸ்காரங்க எங்க வீட்டுக்கு வந்து என்னயும், என் கணவரையும் இழுத்துட்டுப் போனாங்க. என்ன போலீஸ் ஜீப்லயும், என் கணவர வேன்லயும் கொண்டு போனாங்க. பண்ணாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு என்ன அழைச்சுட்டுப் போனாங்க. அங்க என் வீட்டுக்காரர நான் பாக்கல. ஆறு மாசத்துக்குப் பெறகு மாருதிங்கிற போலீஸ் அதிகாரி என்கிட்ட பேப்பர்ல வந்திருந்த போட்டோவ காட்டி, "உன் புருஷன மறந்துரு, அவர் இப்போ உசுரோட இல்ல'ன்னு சொன்னாரு.

பண்ணாரிக்கு அழைச்சுட்டுப் போறப்ப, ஒரு பெரிய போலீஸ் ஐந்து பவுன்ல என்கிட்ட இருந்த நகைய எடுத்துக்கிட்டாரு. போலீஸ் அதிகாரி குமாரசுவாமி என்மேல கரண்ட் வச்சி என் விரலயெல்லாம் சிதைத்துக் காயப்படுத்துனாரு. பெறகு என்ன எம்.எம்.ஹில்ஸýக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்க உள்ள ஒர்க்ஷாப்லதான் நான் குழந்த பெத்தேன். எனக்கு மருத்துவ சிகிச்சை எதுவுமே தரல. லட்சுமிங்கிறவங்கதான் எனக்கு பிரசவ சமயத்துல உதவி பண்ணுனாங்க. அவரும் என்னப்போல அந்த ஒர்க்ஷாப்புக்கு கொண்டுவரப்பட்டவருதான்.

பிரசவம் முடிஞ்சு பதினைஞ்சு நாளு ஆன அந்த சமயத்துலயும் போலீஸ்காரங்க என் மேல் கரண்டு வச்சி சித்ரவத செஞ்சாங்க. ஒரு வருசம் ஐந்து மாசம் அங்கயே இருந்தேன். ஒருநாள் விட்டு ஒருநாள் என் உடம்புல மின்சாரம் வைப்பாங்க. வீரப்பன் பத்துன கேள்விகளுக்கு, "அவர தெரியாது'ன்னு சொன்னதுனால என்ன கடுமையா சித்ரவத செஞ்சாங்க. போலீஸ் குமாரசுவாமியும், மூடலய்யாவும்தான் என்னை சித்திரவதை செஞ்சாங்க. ஒரு வருசம் ஐந்து மாதத்துக்குப் பிறகு, என் பெத்தவங்கள வரச்சொல்லி என் குழந்தைய அவங்களோட அனுப்பி வச்சாங்க. பெறகு என்ன மைசூர் நீதிபதி முன்னால ஆஜர்படுத்தி, தடா கைதியா ஜெயிலுக்கு அனுப்புனாங்க.

வெங்கடேஷ்ங்கிற காவல்துறை அதிகாரி என்னப் பெத்தவங்களோட குழந்தைய அனுப்பி வச்சப்ப 300 ரூவா குடுத்து அனுப்புனாரு. மைசூர்ல நீதிபதி முன்னால என்ன ஆஜர்படுத்துறதுக்கு முன்னால "நீதிபதிட்ட எதுவும் சொல்லக்கூடாது'ன்னு போலீஸ்காரங்க எச்சரிக்கை செஞ்சாங்க. மீறி நான் நீதிபதிட்ட எதாவது சொன்னா, "உன் கணவருக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் ஆகும்'னும் உன் போட்டோ பேப்பர்ல வரும்னும் மிரட்டுனாங்க. நீதிபதி கேட்டா "மூணு நாளுக்கு முன்னாலதான் கைது செஞ்சாங்கன்னு சொல்லணும்'னும் மிரட்டுனாங்க. அவங்க சொன்னதுபோல நீதிபதிகிட்ட நடந்துக்கிட்டேன்.

நான் ஒர்க்ஷாப்பில் இருந்தப்ப "உன் வீட்டுக்கு தீ வச்சது பத்தி தெரியுமா?'ன்னு சிறப்பு அதிரடிப்படையில உள்ளவங்க குமாரசுவாமிங்கிற ஆபீஸரு கேட்டாரு. எம்மேல மின்சாரம் செலுத்துனதுனால பல வியாதியால அவஸ்தப்படுறேன். எனக்கு அப்பதான் தெரியும், என் வீட்டுக்கு தீ வச்சுட்டாங்க இந்தப் படுபாவிங்கன்னு. எனக்கு அடிக்கடி ரத்தப்போக்கு ஏற்படுது. ஆனா இதுக்கான மருத்துவ சான்று எதுவுமே எங்கிட்ட இல்லன்னு சொன்னேன். 5 மாசத்துக்கு முன்னனாலதான் என்ன விடுதலை பண்ணுனாங்க...''

பொன்னுசாமி மனைவி முனியம்மா

""என் மகன் பழனிசாமிக்கு 18 வயசு. பண்ணாரி முகாம்ல அவன நிர்வாணப்படுத்தி சங்கிலியால கட்டி வச்சிருந்தாங்க. அவன் கண்ணுல மிளகாப் பொடிய தூவி, விட்டத்துல கட்டி தொங்கவுட்டு மின்சாரத்த செலுத்துனாங்க. இதப்போல மூணுநாளு அவன சித்ரவதை செஞ்சாங்க. அடுத்த மூணு நாளுக்கு அதேமாதிரி என்னையும் சித்ரவதை செஞ்சாங்க. என் மகன பண்ணாரி முகாம்ல இருந்து வேற எங்கயோ கொண்டுட்டுப் போச்சு போலீசு. மூணுநாளுக்குப் பிறகு அவனோட படத்த காமிச்சு, "உன் மகன் புகைப்படத்தத்தான் நீ இனிமேல் பார்க்க முடியும்... அவன் இறந்துட்டான்'னு சொன்னாங்க. ரெண்டு மாசத்துக்குப் பெறகு திரும்பவும் என்ன எம்.எம்.ஹில்ஸýக்கு கொண்டுபோனப்ப, அங்கவச்சு என் கணவர் படத்தையும், 16 வயசான என் இரண்டாவது மகன் மயில்சாமியின் படத்தையும் காட்டி, "இனிமேல் நீ இதைத்தான் பார்த்துக்கணும்'னு சொன்னாங்க. என்கிட்ட காட்டுன படத்துல இருந்தது என் கணவர், மகன் ரெண்டுபேரோட சடலங்களும்தான்...''

பழனியம்மா

""ஹாசனூர் போலீஸ் இன்ஸ்பெக்டரு வெங்கடசுவாமியும் கொள்ளேகால் இன்ஸ்பெக்டரும் திருப்பூர்ல உள்ள எங்க வீட்டுக்கு வந்து விசாரணைன்னு சொல்லி முழு குடும்பத்தையும் எம்.எம்.ஹில்ஸýக்கு கூட்டிட்டுப் போனாரு. நாங்க மொத்தம் பதிமூன்று பேரு. என் குழந்தை, அக்காவோட 3 குழந்தைங்க. (12, 8, 5, 4 வயது அவங்களுக்கு.) எங்கள பட்டறைக்கு அழைச்சுட்டுப் போயி, எல்லாரையும் நிர்வாணப்படுத்தி மின்சாரம் பாய்ச்சி.... குழந்தைகளைக் கூட மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செஞ்சாங்க.

என் குழந்தைய போலீஸ் ஸ்டேஷனிலேயே வச்சிருந்தாங்க. என் தங்கச்சி செல்வியும் சித்ரவதைக்கு ஆளாகி ஒண்ணரை வருசம் கழிச்சுதான் அவள ஜெயிலுக்கு அனுப்புனாங்க. என் அப்பா, அக்கா கணவர் கங்காதர், என் கணவர் மணி, அண்ணன் செல்வராஜ், தம்பி ஆறுமுகம் எல்லாரையும் எம்.எம்.ஹில்ஸýக்கு கொண்டுவந்தாங்க. தம்பி ஆறுமுகத்தையும் அவன் மனைவி சின்னபொண்ணையும் திருப்பூர் வீட்டில இருந்து தமிழ்நாடு போலீஸ் புடிச்சுட்டுப் போனாங்க.

நான் ஜெயிலுக்குக்குப் போனபிறகு, என் தங்கச்சி செல்வியும், அவ கணவர் சேகரும், அண்ணன் செவ்வராஜும், அவரு மனைவி பெருமாதா, அக்கா பெருமா, அவளோட கணவர் கங்காதர் எல்லாரையும் எம்.எம்.ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷன்லயே வச்சு சித்ரவதை செஞ்சாங்க. நான் ஜெயில்ல இருக்குறப்ப அங்க இருந்த ஒரு கைதி, எங்க அப்பா ராமுரு, அண்ணன் செல்வராஜ், தம்பி ஆறுமுகம், மூத்த அத்தான் கங்காதர், என் கணவர் மணி இவங்கள்லாம் போலீசால கொல்லப்பட்டதாக செய்தி வந்திருக்குதுன்னு சொன்னாரு. ஜெயில்ல இருந்த ஒருத்தரு, ரத்னாவின் கணவர் மணி, இன்னொரு சகோதரியான செல்வியின் கணவர் சேகரும் போலீசால கொல்லப்பட்டதாக பேப்பர்ல செய்தி வந்திருக்குதுன்னு சொன்னாரு.

எல்லாருமே எம்.எம்.ஹில்ஸ்ல கொல்லப்பட்டதா பத்திரிகை செய்தி வெளிவந்திருக்கிறதா கேள்விப்பட்டேன். என் அப்பாவும் மத்தவங்களும் கொல்லப்பட்ட செய்தி வந்திருந்த பேப்பர என்கிட்ட காமிச்சாங்க. ஒரு வருடம் ஏழு மாதம் கழிச்சு, நான் அடைக்கப்பட்டிருந்த ஜெயிலுக்கு என் தங்கச்சி செல்வியையும் கொண்டுவந்தாங்க. என் அப்பாவும் மத்தவங்களும் இறந்து ஒம்பது மாசம் கழிச்சுதான் அவள ஜெயிலுக்கு அனுப்புனாங்க. "திருப்பூர்ல இருந்து எம்.எம்.ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டதுல இருந்தே என்ன அங்கயேதான் பிடிச்சு வச்சிருந்தாங்க'ன்னு என்கிட்ட அவ சொன்னா.''

சேகரன் மனைவி செல்வி

""ஆஸ்பத்திரியில போலீஸ்கிட்ட ஏதோ பேசுன பிறகு என் குழந்தையின் இடது கையில டாக்டர் ஊசி போட்டாரு. பத்து நிமிசங்களுக்குள்ள குழந்தை இறந்துடுச்சு. இன்ஸ்பெக்டர் அசோக்குமார் கால்ல விழுந்து கெஞ்சுனேன். பூட்ஸ் காலால உதைச்சாரு. கான்ஸ்டபிள் ஒருத்தரும் என் பின்னால இருந்து பூட்ஸ் காலால ஓங்கி மிதிச்சாரு. போலீசார் ஜீப்ல எங்கள ஒரு கிறித்துவ மயானத்திற்கு கொண்டுபோய், என் குழந்தையை அங்கு புதைச்சாங்க. எங்கள புதைகுழி பக்கத்துல கூட அனுமதிக்கல...

(புழுதி பறக்கும்)