sirpi

சென்னை புத்தகத் திருவிழா, நக்கீரன் அரங்கில் மறைந்த இலக்கிய ஜாம்பவான்களான கவிக்கோ அப்துல்ரகுமான், எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோரின் நூல்களின் வெளியீட்டு நிகழ்வு, நெகிழ்வோடு அரங்கேறியது.

Advertisment

நக்கீரன் பொதுமேலாளர் சுரேஷ்குமார் வரவேற்க, கவிஞர் ஜெயபாஸ்கரன் தலைமையில் கலைவிமர்சகர் இந்திரன் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கவிக்கோ அப்துல்ரகுமானின் ‘"இரவுக் கிண்ணத்தில் நிலவின் மது', பிரபஞ்சன் எழுதிய "மனு அதர்மம்', "கழுதைக்கு அஞ்சுகால்'’ ஆகிய மூன்று நூல்களையும் கவிவேந்தர் மு.மேத்தா வெளியிட... அதை வானம்பாடிக் கவிஞர் சிற்பி பெற்றுக்கொண்டார். இவற்றில் பிரபஞ்சனின் இரண்டு நூல்களும், நக்கீரனில் ஏற்கனவே தொடர்களாக வெளிவந்து வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற படைப்புகளாகும்.

sirpi

Advertisment

தலைமையுரை ஆற்றிய ஜெயபாஸ்கரன், ""மறைந்த எழுத்தாளர்கள், தங்கள் எழுத்துக்களால் வாழ்கிறார்கள். அவர்களின் நினைவுகளைப் போற்றும்வகையில் இந்த நூல்களை நக்கீரன் வெளியிடுவது பெருமைக்குரியது. அதிலும் கவிக்கோ அப்துல்ரகுமானோடு நெருங்கிப் பழகிய நண்பர்கள் முன்னிலையில், அவருடைய கவிதை நூல் வெளியிடப்படுவது தற்செயலாக அமைந்த பெரும் வாய்ப்பாகும்''’என்றார்.

நூல்களை வெளியிட்டுப் பேசிய மு.மேத்தா, ""மறைந்தாலும் எழுத்தாளன் அவன் எழுத்துக்களால் வாழ்கிறான். கவிக்கோ அவர்கள் இறுதிநாட்களில் எழுதிய கவிதைகள், நூல்வடிவம் பெறுவது மகிழ்வைத் தருகிறது. அந்த வேலையை நக்கீரன் செய்வது பெருமைக்குரியது'' என்றார் பெருமிதமாக.

வானம்பாடிக் கவிஞர் சிற்பி, ""கவிக்கோ அப்துல்ரகுமானின் நினைவுகள் என் மனதிலே வந்து என்னை நெகிழ வைக்கின்றன. அவர் காதலிலும் தத்துவத்திலும் கொடிகட்டிப் பறந்தார். அவரது எந்தக் கவிதையை எடுத்தாலும் அதில் இந்த இரண்டு கூறுகளும் இருக்கும். அவருடன் பழகிய நாட்கள் மனதில் நின்று நிலைத்த நினைவுகளாகும். அவர் மறைந்த பிறகும், அவரது கவிதைகளைத் தேடிப் பிடித்துத் தொகுத்துத் தந்திருக்கும் தமிழ்நாடனைப் பாராட்டுகிறேன். இன்று சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரே பத்திரிகை நக்கீரன்தான். மிகவும் நெஞ்சுரம் கொண்ட தைரியமான பத்திரிகை என்றாலும் அது நக்கீரன்தான். இன்று கருத்துரிமைக்காக நக்கீரன் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். கருத்துரிமையின் அடையாளமாகத் திகழும் நக்கீரன், தமிழ்க் கவிதையின் அடையாளமாகத் திகழும் கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதை நூலை வெளியிடுவது மிகுந்த பாராட்டுக்குரியது. மகிழ்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் உரியது''’ என்றார் அழுத்தமாய்.

நன்றியுரை ஆற்றிய ஆரூர் தமிழ்நாடன், ""கவிக்கோவின் தத்துவக் கவிதைகள் அடங்கிய இன்னொரு நூல் நக்கீரனில் தயாராகிக்கொண்டிருக்கிறது. அது விரைவில் வரும்'' என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், இலக்கிய ஆளுமைகளான பிருந்தாசாரதி, முனைவர் ஆதிராமுல்லை, ஃபைஸ்காதிரி, உஸ்மான், லெக்சு, சூர்யா, கவிக்குழல், ஜாபர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.