பேச்சாளர், ராஜ்யசபா உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், கைத்தறித் துறை அமைச்சர் என அ.தி.மு.க.வில் சீரான வளர்ச்சியைக் கண்டவர் கோகுல இந்திரா. அ.தி.மு.க.வில் தற்சமயம் ஓ.பி.எஸ்.ஸுக்கும் இ.பி.எஸ்.ஸுக்குமான தலைமைப் பதவிக்கான போட்டியில் இ.பி.எஸ். தரப்பைத் தேர்ந் தெடுத்ததுடன், கட்சி அலுவல கத்தைக் கைப்பற்றும் ஓ.பி. எஸ்.ஸின் முயற்சியை சுடுசொற் களால் விமர்சித்தவர். தற்போ தைய அ.தி.மு.க. நிலவரங்கள் குறித்து நக்கீரன் இதழுக்காக அவருடன் மேற்கொண்ட சுவாரசியமான ஒரு கலந்துரை யாடலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே.

கட்சி அலுவலகத்தின் சாவி இ.பி.எஸ். வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது; நீங்கள் அலுவலகத்திற்குச் சென்றீர்களா?

தொண்டர்கள் அலுவலகம் செல்லக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், செல்லவில்லை. ஆனால், தீர்ப்பு வந்ததன் பிறகு மறுநாள் காலை இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியைச் சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றேன். அப்போது, கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு சி.வி.சண்முகம் மற்றும் அ.தி.மு.க.வினர் உள்ளே சென்றதை தொலைக்காட்சியில் பார்த்தேன். அதில் மிகவும் மகிழ்ச்சி. அதேசமயம், கோயில் போன்று கருதக்கூடிய தலைமைக் கழகத்தின் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தது வருத்தமாக இருந்தது.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. அலுவலகம் பூட்டப் பட்டது. அப்போது தி.மு.க. ஆட்சி. ஜெயலலிதா தலைமை அலுவல கத்திற்குச் சென்றார். "உடைத்துத் திறக்கலாமா' என்று கேட்டபோது ஜெயலலிதா, "தலைமைக் கழகம் கோயில் போன்றது. நாம் தர்ணா நடத்தி திறக்க வலியுறுத்துவோம்' என்றுதான் சொன்னார்.

Advertisment

அலுவலகம் பூட்டப்படாமல் இருந்திருந்தால் இந்தச் சம்பவமே நடந்திருக்காது என்கிறார்களே?

பொதுக்குழு தொடர்பாக 9 மணிக்கு நீதிமன்றத்தின் உத்தரவு வந்தது. அதற்கு முன்னதாக நாங்கள் மண்டபத்தில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறோம், இ.பி.எஸ். வந்துகொண்டிருக்கிறார்.

ஓ.பி.எஸ்.ஸுக்கு பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. கட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடியவர் கட்சி அலுவலகத்திற்கு செல்லும்போது அறிவிக்கவேண்டாமா?, தலைமை அலுவலகப் பொறுப்பாளர்கள் உட்பட அனைவரும் பொதுக்குழுவின் காரணமாக ஸ்ரீவாரு மண்டபத்தில் இருந்தனர். இது அவருக்கும் நன்றாக தெரியும்.

Advertisment

gg

ஏற்கனவே நடந்த பொதுக்குழுவில் அவருக்கு அவமரியாதைதானே நடந்தது?

இ.பி.எஸ். உள்பட யாரும் அதனை வரவற்கவில்லை. அது யாரும், யாருக்கும் சொல்லிக் கொடுக்கவில்லை. அனைத்து நிர்வாகிகளின் தன்னெழுச்சியான உணர்வு.

11-ஆம் தேதி பொதுக்குழு நடப்பதற்கு முன்பு ஓ.பி.எஸ். தலைமை அலுவலகம் செல்கிறார். அதேபோல், நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே இ.பி.எஸ். பொதுக்குழுவுக்கு செல்கிறாரே?

நீதிமன்றத் தீர்ப்பை மதித்து 23-ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் நாங்கள் ஒற்றைத் தலைமை விவகாரத்தை விவாதத்திற்கு எடுத்துகொள்ளவில்லை. ஆனால், நீங்கள் நீதிக்கு தலைவணங்காமல், உத்தரவு வருவதற்கு முன்பாகவே அலுவலகத்திற்குச் செல்வேன் என்று கிளம்பிச் செல்வது எப்படி நியாயமாகும்? தீர்ப்புக்குப் பிறகுதான் இ.பி.எஸ். மண்டபத்திற்குள் வந்தார். அன்று பொதுக்குழு நடத்த தடை விதித்திருந்தால், நிச்சயமாக பொதுக்குழு மேடைக்கு இ.பி.எஸ். வந்திருக்கமாட்டார்.

நீங்கள் விரும்பியபடி இ.பி.எஸ். இடைக்கால பொதுச்செயலாளராகவும், எம்.ஜி.ஆர். மாளிகையும் இ.பி.எஸ். பக்கம் வந்துவிட்டது. தற்போது அ.தி.மு.க.வில் பிரச்சினை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

அ.தி.மு.க.வுக்கு கொங்கு மண்டலத்தில் நல்ல வெற்றி கிடைத்தது. ஓ.பி.எஸ். தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஓ.பி.எஸ். இன்னமும் வேலை செய்து, தென் மாவட்டங்களில் வெற்றியைக் கொண்டுவந்திருக்கலாம். அவர் மாவட்டத்தி லேயே நடந்த இடைத்தேர்தலில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் தோல்வி. அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும் ஓ.பி.எஸ்.ஸைத் தவிர்த்து அனைவரும் தேனி மாவட்டத்தில் தோல்வி.

ஸ்டாலின் வந்தால்கூட பரவாயில்லை. எடப்பாடி வந்துவிடக்கூடாது என்று அவர் நினைத்ததுபோல்தான் இப்போ எங்களுக்குத் தோன்றுகிறது. இ.பி.எஸ். தலைமையில் இனி கட்சி வளர்ச்சியை நோக்கிச் செல்லும். கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும்.

அ.தி.மு.க.விலிருந்து விலகியிருப்பவர்கள், நிர்வாகிகளை விலை கொடுத்து இ.பி.எஸ். வாங்கியுள்ளார். அவர்கள்தான் அவருடன் இருக்கிறார்கள். உண்மையான தொண்டர்கள் அவர் பக்கம் இல்லை. ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டார் என்கிறார்களே?

எத்தனை பேரை விலை கொடுத்து வாங்கமுடியும். அனைவரையும் தொடர்ந்து கண்காணிக்க முடியுமா? பொதுக்குழுவுக்கு வந்து கலந்துகொண்டார்கள், அதன் பிறகு அவர்கள் மாவட்டங்களில் கிளைகளில் கட்சிப் பணியைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இது அனைவரும் இணைந்து ஆத்மார்த்தமாக எடுத்த முடிவு. ஓ.பி.எஸ். சில காரணங்களுக்காக தி.மு.க. மீது அனுசரணையாக இருக்கிறாரோ என அனைவரும் எண்ணியதால் இந்த அளவுக்கு ஸ்திரமாக ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள்.

gg

பா.ஜ.க. சில மாநிலங்களில், அங்கு வலுவாக இருக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து அந்தக் கட்சியையே உடைக்கும் வேலைகளை எல்லாம் செய்கிறது எனச் சொல்லப்படுகிறது. அதேபோல், அ.தி.மு.க.வில் நடக்கக்கூடிய இந்த விஷயங்களையும் பா.ஜ.க.தான் செய்கிறது என சொல்லப்படுகிறதே?

ரவீந்திரநாத், ஸ்டாலினைச் சந்தித்து மனு கொடுத்து சிறப்பான ஆட்சி என்று சொன்னதை யாரும் விரும்பவில்லை. சட்டமன்றத்தில் இவர் (ஓ.பி.எஸ்.), பராசக்தி (கலைஞர்) வசனத்திற்கு ரசிகர் என்று பேசியதையும் யாரும் விரும்பவில்லை.

இதே சட்டமன்றத்தில், எடப்பாடி புகழ்ந்து பேசினார். உதயகுமார், செங்கோட்டையன் முதலில் இந்த ஆட்சி நல்லபடியாக நடந்துகொண்டிருக்கிறது என்று பேசினார்களே?

மரியாதையுடன், மதிப்புடன் பேசுவது வேறு. நாம் அந்த ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு பேசக்கூடாது. இவர்கள் ஆட்சிக்கு வந்த நேரத்தில் கொரோனா வேகமாக பரவிவந்தது. அதை அவர்கள் சிறப்பாகக் கையாண்டார்கள் என்பதைத்தான் உதயகுமார் சொல்லியிருக்கிறார். எங்கள் அ.தி.மு.க. வரலாற்றில், தி.மு.க. முதலமைச்சரை சந்தித்து எங்கள் தொகுதிக்கு இவ்வளவு வேண்டும் எனக் கேட்டதில்லை.

ஓ.பி.எஸ். கேக் கொடுத்தபோது... அதை கையில் வாங்கிக்கொள்ளாமல் ஊட்டிவிடச் சொல்லி வாங்கிக்கொண்டவர் நீங்கள். அந்த அளவுக்கு ஓ.பி.எஸ்.ஸுடன் ஒரு சகோதர உறவைக் கொண்டிருந்தவர் நீங்கள். ஒரு கட்சியில் ஒன்றாக இயங்கியவர்கள் பிரிவதும் சேர்வதும் இயல்புதான். இப்போது எதிரணியில் இருப்பதால் அவருக்கு இன்னொரு முகம் இருக்கு, அடுத்தவர் வாழ பொறுக்கமாட்டார் என்றெல்லாம் விமர்சனம் செய்கிறீர்களே?…

ஜெயலலிதா இருந்தவரை சிறப்பாகச் செயல்பட்டார். ஜெயலலிதா இறந்தபிறகு யாருடனும் கலந்தாலோசிக்காமல் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அதன்பிறகு அவருடன் தர்மயுத்தத்திற்கு போனவர்கள் ஏன் போனார்கள் என்பதும் தெரியும். அவர் அப்படி மாறி, மாறி நடந்து கொண்டார். அவர் ஒரு நிலைப்பாட்டில் இல்லாததன் காரண மாகத்தான் இன்று அனைவரும் இந்த நிலைப் பாட்டை எடுத்திருக் கிறார்கள்.

கேக் கொடுத்தபோது ஒரு தங்கையாக, அவரிடம் வாங்கிக்கொண்டேன். விளம்பரங்களில் அவரை முக்கியப்படுத்துவோம். அவங்க வீட்டிற்குச் சென்று பேசியிருக்கிறோம். அ.தி.மு.க.வுக்கு எது நல்லது என முடிவெடுக்கும்போது, ஒருதலைப்பட்சமாக, சுயநலமாக, தி.மு.க.வை வலுவாக எதிர்க்க முடியாமல் இருப்பார். எப்போதும் தர்மயுத்தத் திற்கு தன்னோடு வந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்தார். எப்போதும் தன்னுடன் ஒரு கூட்டத்தை வைத்திருப்பார். அவர்கள் மட்டும்தான் இவர் எங்குச் சென்றாலும் இருப்பார்கள். மற்றபடி எந்த மாவட்டத்திலும், அந்த மாவட்ட அ.தி.மு.க.வினரை முன்னிலைப் படுத்தமாட்டார்.

வெறும் இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் 41 தொகுதிகளை இழந்திருக் கிறோம். முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஒரு போராட்டம். இவர் எப்படி கேட்கமுடியும். என் முயற்சியில் தென்மாவட்டங்களில் 45 எம்.எல்.ஏ.க்களை கொண்டுவந்திருக்கிறேன் என்றால் அது நியாயம். அனைவரும் சேர்ந்து கேட்கலாம். அவங்க எல்லாம் வெற்றி பெற்று, அவங்க எம்.எல்.ஏ.க்களை வைத்து இவருக்கு தூக்கிக் கொடுப்பார்களா? அடுத்தவர் உழைப்பில் பங்குகேட்கலாமா? உட்கட்சித் தேர்தலில் அவர் நடந்துகொண்ட விதம்தான் இனி ஒற்றைத் தலைமை என முடிவெடுக்கும் சூழலைக் கொண்டு வந்தது.

இ.பி.எஸ். தி.மு.க.வை எதிர்த்து போராட்டம் அறிவிக்கிறார். அறிக்கை வெளியிடுகிறார். ஆனால், மத்திய அரசை அவர் எதிர்க்கவே இல்லை என்ற விமர்சனம் வருகிறதே?

மத்திய அரசிடமிருந்து நிலுவைத் தொகை தமிழ்நாட்டுக்கு வரவேண்டியிருக்கிறது என்பதை இ.பி.எஸ். சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். இப்போதில்லை ஆளும்கட்சியாக இருந்தபோதும் சொல்லியிருக்கிறார். அவர் நல்ல உறவோடு இருந்ததால்தான் இங்கு எய்ம்ஸ், அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் வைத்தது எல்லாம் நடந்தது.

தற்போது காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருக்கும்போது, நாங்கள், பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தற்போது அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை கொண்டுவரப் போகிறேன் என்று பா.ஜ.க.விடம் சொல்லிவிட்டா செய்தார். அ.தி.மு.க.வில் நாங்கள் தனித்து முடிவெடுக்கிறோம்.