seeman

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி, அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி ஆங்காங்கே மூன்றாமிடம் பிடித்ததோடு, தமிழகத்தில் தனித்து களம் கண்டு 8.19 சதவீதம் வாக்குகளைப் பெற்று மாநில கட்சி அந்தஸ்தையும் பெற்றுள்ளது.

Advertisment

நாம் தமிழர் கட்சி தொடங்கி 14 ஆண்டுகள் கடந்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் வழக்கம்போல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கூட்டணியைத் தவிர்த்து தனித்தே களம் கண்டது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகள் பெண்களுக்கும், 20 தொகுதிகள் ஆண்களுக்கும் என சீமான் சமமாகப் பிரித்து வழங்கினார். வழக்கமாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு, கரும்பு விவசாயி சின்னத்தை முறையாகப் பதிவுசெய்யவில்லை என்ற காரணத்தைக் கூறி முன்னுரிமை அடிப்படையில் கர்நாடகாவைச் சேர்ந்த கட்சிக்கு வழங்கியது தேர்தல் ஆணையம்.

வேட்புமனு தாக்கல் இறுதிநாள் வரையிலும் சீமான் சட்டப்போராட்டம் நடத்தியும் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காததால், புதிய சின்னமான மைக் சின்னத்தில் வேட்பாளர்களைக் களம்காணச் செய்தார். இறுதி நேரத்தில் சின்னத்தை மூலைமுடுக்குகளில் கொண்டுசென்று சேர்ப்பதில் சற்று சிரமத்தை சந்தித்தனர்.

Advertisment

நாம் தமிழர் கட்சி 40 தொகுதியிலும் தோல்வியடைந்திருந்தாலும், வேறுபல விஷயங்களில் சாதித்திருக்கிறது. 12 தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. 6 தொகுதிகளில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., த.மா.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடத்தைப் பிடித்து சாதித்திருக்கிறது. கன்னியாகுமரியில் அ.தி.மு.க.வை பின்னுக்குத் தள்ளி மூன்றாமிடத்தைப் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரியா ஜெனிஃபர் பிடித்திருக்கிறார். நாகப்பட்டினத்தில் பா.ஜ.க.வை பின்னுக்குத் தள்ளி கார்த்திகா மூன்றாவது இடத்தைப் பிடித்தார். மயிலாடுதுறை, திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி என 12 தொதிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யாராணி வீரப்பன் 1,07,083 வாக்குகளைப் பெற்று புருவம் உயரச் செய்திருக்கிறார். மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் 8 விழுக்காடு வாக்குகள் பெறவேண்டும். அந்த வகையில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.58 சதவீதம் வாக்குகளே பெற்று, அந்த அந்தஸ்தை இழந்ததின் விளைவாகவே விவசாயி சின்னம் பறிபோனது. இந்தத் தேர்தலில் 8.19 சதவீத வாக்குளைப் பெற்று மாநில கட்சி அந்தஸ்தை ஈட்டியுள்ளது நாம் தமிழர் கட்சி.