மத்திய பட்ஜெட்டில் தமி ழகத்தை முற்றிலுமாக புறக்கணித்து தமிழர்களை பழி தீர்த்திருக்கிறார் மோடி! மத்திய அரசின் இந்த பாராமுகத்தை இந்தியா கூட்டணித் தலைவர்கள் கடுமையாக கண்டித்திருக் கின்றனர்.
இதில், ஒரு படி மேலே சென்று, விறுப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால் தனிமைப்பட்டுப்போவீர்கள் என்று மோடிக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! இதனால் தேசிய அரசியலில் ஏகத்துக்கும் பரபரப்பு ஏற் பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் மோடியின் அமைச்சரவையில் நிதியமைச்சராக தொடரும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இதனைக் கண்டித்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் மோடி அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. நாடாளுமன்றத்தின் உள்ளேயும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் பட்ஜெட்டுக்கு எதிராக ஆர்ப்பரித்தனர்.
இந்த நிலையில், மோடிக்கு அட்வைஸ் செய்யும் விதத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ”"தேர்தல் முடிந்துவிட்டது; இனி நாட்டைப் பற்றி சிந்திப்போம் என்று சொன்னீர்கள். ஆனால், உங்கள் பட்ஜெட் உங்கள் அரசை காப்பாற்றுமே தவிர நாட்டைக் காப்பாற்றாது. அரசை பொதுவாக நடத்துங்கள். தோற்கடித்தவர்களை பழி வாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால் தனிமைப்பட்டுப் போவீர்கள்'’என்று காட்ட மாகப் பதிவு செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஸ்டாலினின் காட்டமான இந்த எச்சரிக்கை டெல்லியை அதிர்ச்சியடைய வைத்திருக் கிறது. இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும், சரியான நேரத்தில் சரியான கோணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எச்சரிக்கை என ஸ்டாலினின் பதிவை கொண்டாடிவருகின்றனர்.
பொருளாதார அறிஞர்கள் சிலரிடம் நாம் விவாதித்தபோது, "இந்திய நாட்டின் நிதிநிலை அறிக்கை யில் (பட்ஜெட்) எதிர்க் கட்சிகளின் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளும் திட்டங் களும் இல்லாமலே இருப்பது துரதிர்ஷ்டவசமானதுதான். குறிப்பாக, தமிழ்நாட்டை முற்றிலுமாக புறக்கணித் துள்ளது மத்திய பட்ஜெட்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இடைக் கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில், தமிழகத்திற்கு சுமார் 6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பா.ஜ.க. தரப்பில் வியாக்கியானம் செய்யப்படுகிறது. அந்த இடைக்கால பட்ஜெட்டில்கூட எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை.
தேர்தலுக்குப் பிறகு மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் இடைக்கால பட்ஜெட்டில் சொல்லப்பட்ட நிதி விபரங்களின் தன்மைகள் முழுமையாக முழு பட்ஜெட்டில் விவரிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அப்படி எதுவுமே இல்லை என்கிறபோதுதான், மத்திய அரசின் பழிவாங்கும் போக்கு அம்பலமாகிறது. அதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கூட்டணிக்கு தமிழகத்திலிருந்து சில எம்.பி.க்கள் கிடைப்பார்கள் என மனக்கணக்குப் போட்டது பா.ஜ.க. தலைமை.
ஆனால், மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியினை ஏற்கவில்லை என்பதற்கான அடையாளமாக தி.மு.க. கூட்டணிக்கு 40 இடங்களையும் வாரி வழங்கியது தமிழகம். இதனை பா.ஜ.க. தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் இந்த பட்ஜெட்டில் தமிழகம், தமிழ்நாடு என்கிற பெயர் கூட பதிவாகக்கூடாது என தமிழகத்தை வஞ்சித்திருப்பதாகத் தோன்றுகிறது. தேர்தலின் வெற்றி தோல்வியை மனதில் வைத்து ஒரு மாநில மக்களை பழி தீர்ப்பது ஆரோக்கியமானதாகக் கருத முடியாது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
பா.ஜ.க. பழி தீர்க்கிறது என்பதை நிரூபிப்பது போல, பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. தலைவரும் எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டுமானால் எங்களுக்கு 25 இடங்களில் (பா.ஜ.க. கூட்டணிக்கு) வெற்றியைத் தந்திருக்கவேண்டும் என ஆவேசப் பட்டுள்ளார். இதிலிருந்தே தமிழகத்தை பா.ஜ.க. பழி வாங்குவதை உணரமுடியும் என்கிறார்கள்.
இதற்கிடையே, மத்திய மோடி அரசின் பழி வாங்கும் போக்கினை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போர்க்குரல் உயர்த்தின. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இந்த பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. புறக்கணிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. நாற்காலியை காப்பாற்றும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கிறது''’என்று கடுமையாக விமர்சித்தார்.
அதாவது, மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் மோடி அரசு ஆட்சி அமைத்ததற்கு காரணம், பா.ஜ.க. கூட்டணியிலுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபுவும், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் தான். அதனால் அவர்கள் சார்ந்த மாநிலங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுகள் வாரி வழங்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டத்தான், நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளும் பட்ஜெட் என விமர்சித்துள்ளார் மல்லிகார்ஜுன கார்கே.
தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன், "தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டை பற்றிய நினைவு வரும். தமிழனாய் பிறக்க வேண்டும்; தமிழைக் கற்க வேண்டும் என்றெல்லாம் மோடி சொல்வார். திருக்குறளை மேற்கோள் காட்டுவார். தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலத்துக்குச் சென்றால் தமிழ்நாட்டுக்கு எதிராக பேசுவார். மோடியின் இந்த துரோகத்தை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவே மாட்டார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்போதும், தமக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல ; வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே பாடுபடுவேன் என்பார். ஆனால், பிரதமர் மோடி தமக்கு வாக்களித்த மக்களுக்கு கூட எதுவுமே செய்ததில்லை. மைனாரிட்டி மத்திய அரசு, தனது கூட்டணி ஆட்சியை காப்பாற்ற வேண்டிய நெருக்கடி இருப்பதால் பீகாருக்கு நிதியை அள்ளித் தந்துள்ளது''’என்று குற்றம்சாட்டினார்.
இப்படி கடுமையான குற்றச்சாட்டுகளை மோடி அரசு மீது எதிர்க்கட்சிகள் வைத்துவிட்டு வெளிநடப்பு செய்தன.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் மறுத்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "எந்த மாநிலத்தையும் பட் ஜெட்டில் புறக்கணிக்கவில்லை. மாநிலங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லையெனில், அது புறக்கணிப்பாகிவிடாது. எதிர்க் கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றன''’என்று தெரிவித்திருக்கிறார்.
பட்ஜெட்டில் இப்படி மாநிலங் களுக்கிடையே பாரபட்சம் ஏன் காட்டப்பட வேண்டும்? என்று டெல்லியில் உள்ள தமிழக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "கடந்த நிதியாண்டில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் எவ்வளவு செலவு செய்துள்ளது என்கிற விவரங்களைச் சேகரித்துள்ளது மத்திய நிதியமைச்சகம். மேலும், தமிழகத்தில் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அந்த வகையில், தேர்தலை மையப்படுத்தி தி.மு.க. அரசு நிறைய நிதி சேமிப்பில் ஈடுபடும். அதாவது, மத்திய அரசு வழங்கும் நிதியை வைத்து போடப்படும் திட்டங்களில், 20 சதவீதம் கமிசனாக தி.மு.க. ஆட்சியாளர்கள் எடுத்துக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. இதனை கவனத்தில் கொள்ளலாம் என மத்திய அரசுக்கு சில புள்ளி விவரங்களை அதிகாரிகள் தரப்பிலிருந்தே தந்துள்ளனர்.
இது தவிர, தமிழகத்தின் நிதி நிலைமை ஆரோக்கியமாக இல்லை. இதனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கார்ப்பரேசன்கள், போர்டுகள், உள்ளாட்சி அமைப்புகள் சேமித்து வைத்துள்ள கோடிக்கணக்கான தொகையை தனது கஜானாவுக்கு மாநில அரசு திருப்பிக் கொண்டிருக்கிறது.
நிதிப் பற்றாக்குறை அதிகரிக்க அதிகரிக்க நிர்வாகத்தை வழி நடத்துவதே தமிழக அரசுக்கு பெரும் போராட்டமாக இருக்கும். சொந்த வரி வருவாயிலிருந்துதான் சமாளிக்க வேண்டிய திருக்கும். அது போதுமானதாக இருக்காது. இதனை சமாளிக்க வரி உயர்வு, கட்டண உயர்வு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கும் நெருக்கடிகளுக்கும் தி.மு.க. அரசு தள்ளப்படும். அது அரசியல் ரீதியாக டெல்லிக்கு உதவக்கூடும் என்றெல்லாம் மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்திருக்கிறார்கள் சில பொருளாதார அறிவுஜீவிகள்.
அதனால் கடந்த நிதியாண்டில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? அதனை எப்படி செலவு செய்தோம்? என்கிற புள்ளிவிபரங்களை ஒவ்வொரு துறைவாரியாகப் பெற்று மத்திய மோடி அரசுக்கு பதிலடி தரும் வகையில் தமிழக முதல்வர் நீண்ட அறிக்கையை வெளியிட்டால் பா.ஜ.க.வின் உண்மை முகம் மக்களுக்குத் தெரியவரும். இதனை நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜ.க.வின் முகமூடியை முதல்வர் கிழித் தெறிந்திருக்க வேண்டும். இதைத் தவிர்த்து, நாங்கள் இவ்வளவு கோடிகள் கேட்டோம்; மத்திய அரசு எதையும் தரவில்லை எனச் சொல்வது அரசியல் ரீதியாகவோ, நிர்வாக ரீதியாகவோ எடுபடாது என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்!