எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
செய்யாறு அருகே சிறுவயது திருமணம் நடைபெறவிருந்த நிலையில் சைல்டு ஹெல்ப்லைனுக்கு தகவல்கொடுத்து திருமணத்தை தடுத்துநிறுத்தியிருக்கிறாரே சிறுமி?
உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய விஷயம். தனது விருப்பமின்மையைக் கூறியபின்னும் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்த நிலையில், மனம் தளர்ந்துவிடாமல், பிறரின் தயவை எதிர்பார்க்காமல் செல்போன்மூலம் தகவல் கொடுத்து தனது திருமணத்தை தடுத்துநிறுத்தியிருக்கிறார். தடுத்துநிறுத்தியதோடு நின்றுவிடாமல், பெற்றோர், உறவினர் மூலம் அந்தச் சிறுமிக்குத் தொந்தரவு வராமல் அதிகாரிகள் உறுதிசெய்வதோடு, அந்தப் பெண்ணின் படிப்பு தொடர்கிறதா என்பதையும் கண்காணிக்கவேண்டும்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
தமிழக அரசு முடங்கிப்போய்விட்டதாக அண்ணாமலை கூறுகிறாரே?
எதிர்க்கட்சியின் வேலை ஆளும்கட்சியைக் குற்றம்சாட்டுவது. ஆளுங்கட்சியின் வேலை குற்றம்சாட்ட இடமில்லாத வகையில் நிர்வாகத்தையும், நல்லாட்சியையும் தருவது. அண்ணாமலை, எடப்பாடி எல்லாரும்தான் சொல்வார்கள். அப்படி ஏதாவது முடங்கியிருக்கிற தென்றால், அவை ஆளுநர் ஆண்டுக்கணக்கில் நிறுத்திவைத்து நிறைவேறாத மசோதாக்கள்தான்.
பாலசுப்ரமணியன், மன்னார்குடி
பிரிஜ்பூஷன் விவகாரம் என்னவாயிற்று?
மக்களின் மனநிலை கொதிநிலையி லேயே இருக்கமுடியாது. ஒரே விவகாரத்தில் நீடிக்கமுடியாது. இதை அரசியல் அனுபவஸ்தர்கள் அறிவார்கள். அதனால்தான் சிக்கலான விவகாரங்களில் விசாரணை ஆணையம் அமைத்து ஒத்திப்போட்டுவிடுகிறார்கள். அல்லது விசாரணை என்ற பெயரில் நாளை கடத்திவிடுவார்கள். சர்வதேச மல்யுத்த ஆணையம், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்கு குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தல் நடத்தாததால் தடைவிதித்தது. இதனால் சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் இந்திய தேசியக் கொடியுடன் விளையாட முடியாமலானது. எதற்கெடுத்தாலும் தேசபக்தி வியாபாரம் பண்ணும் கட்சி, தங்கள் கட்சியின் உறுப்பினரா... தேசபக்தியா எனும்போது தன் கட்சிக்காரரையே தேர்வுசெய்தது. இன்னும் கொஞ்சநாளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்ற ஹோதாவுடன் பிரிஜ்பூஷன், மீண்டும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்குத் தலைவரானாலும் ஆச்சரிய மில்லை.
அ. யாழினிபர்வதம், சென்னை-78
அரசியலமைப்புச் சட்டம் முழுமைபெறாத ஆவணம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி சொல்வது சரியா?
அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணம் என்றால், இனி வரும் அரசுகள், தேவையெனில் அதி அத்தியாவசியமான திருத்தங்களை மேற்கொள்ளும், மேம்படுத்தும் என்பதுதான். அதற்காக இப்போதிருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கவேண்டாம் என அதற்குப் பொருளில்லை. பா.ஜ.க. ஆட்சியில் பல ஆளுநர்களின் முயற்சி, ஆட்சியிலிருக்கும் அரசுகளைச் சீண்டுவதாகவும், மறைமுகமாக அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகவும்தான் இருக்கிறது.
ரா.ராஜ்மோகன், முட்டியூர்.
மகளிர் திட்டங்களால் செல்வாக்கு அதிகரித்துள்ளதால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கைகாட்டுபவரே பிரதம ராக வேண்டும் என்கிறாரே முதல்வர். மு.க.ஸ்டாலின்?
ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் சில நம்பிக்கைகள், எதிர்பார்ப்பு இருக்கும். முதல்வர் ஸ்டாலின் சொல்வது அதனைத்தான். மற்றபடி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. 39 இடங்களில் வென்றது. ஆனால், அவர்கள் ஆதரித்த காங்கிரஸ் மத்தியில் வரமுடிந்ததா? தொண்டர் களையும் கட்சியினரையும் உற்சாகப்படுத்த, உத்வேகமூட்ட பேசும் பேச்சும், யதார்த்தமும் எல்லா நேரமும் ஒன்றாக இருக்கமுடியாது. ஸ்டாலினின் கனவு பலிக்க, இந்தியா கூட்டணி பெருவாரியாக வெற்றிபெறவேண்டும், அது ஆட்சியமைக்க தி.மு.க.வின் ஆதரவு அத்தியாவசியமாகவேண்டும்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
இந்தியா, சீனாவிலிலிருந்து மலேசியா செல்ல விசா தேவையில்லை.. என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளதே..?
இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து நாட்டு மக்கள் மலேசியா வர விசா தேவையில்லை என சோதனை அடிப்படையில் மலேசியா அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா மூலம் பொருளாதார வளர்ச்சியை எதிர்நோக்கி அறிவிக்கப்பட்டிருக்கலாம். இதில் வரும் லாப- நட்டங்களையும், பிரச்சனைகளையும் பார்த்து திட்டம் மேலும் விஸ்தரிக்கப்படலாம். அல்லது மொத்தமாகக் கைவிடப்படலாம். பையில் காசிருந்தால் விமானம் ஏறிவிட வேண்டியதுதானே!