பி.மணி, வெள்ளக்கோவில்
சினிமாவில் ரஜினி பாணி -கமல் பாணியோடு ஒப்பிடுக?
எதற்காக இருவரையும் ஒப்பிட வேண்டும்? இருவரும் தொடக்க காலத்தில் சில ஆண்டுகள் சேர்ந்து நடித்தார்கள். அப்போது கமல் முன்னிலையில் இருந்தார். பிறகு, இருவரும் தனித்தனியாக நடிக்கும்போது ரஜினி அதிக அளவில் ரசிகர்களை ஈர்த்தார். வசூலைக் குவித்தார். சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைப் பெற்று, இன்றுவரை அதனைத் தக்க வைத்திருக்கிறார். அரசியலில் அவருக்கு ஆர்வம் கிடையாது. ஆனால், அவரது ஆன்மிக நம்பிக்கைகளை வைத்து அரசியல் செய்ய நினைத்தவர்கள், எப்படியாவது இழுத்துக்கொண்டு வந்துவிட வேண்டும் என பெரும் முயற்சி செய்தார்கள். மேடைகளில் ஏற்றினார்கள். பெரியாரை விமர்சிக்க வைத்தார்கள். எம்.ஜி.ஆரைப் புகழ வைத்தார்கள். எப்படி டைரக்டர்கள் சொன்னதுபோல டயலாக் பேசுவாரோ அதுபோல, தன்னால் தவிர்க்க முடியாத அரசியல் பிரமுகர்களின் விருப்பத்திற்கேற்ப சில டயலாக்குகளை பேசிவிட்டு, ‘உங்க பொங்கச் சோறும் வேண்டாம். பூசாரித்தனமும் வேண்டாம்’’ என்று அரசிய லுக்கு கும்பிடு போட்டுவிட்டார் ரஜினி. கமல்ஹாசனோ காதல் இளவரசன் என்ற பட்டத்துடன் ரொமான்டிக் ஹீரோவாக தனது ரசிகர்களைக் கவர்ந்தார். மூன்றாம் பிறை படத்தில் முதல் தேசிய விருது வாங்கிய பிறகு அவருடைய கதாபாத்திரங்களில் புதுமைகள் செய்தார். நாயகன் படத்திற்குப் பிறகு அவருடைய படங்கள் தனித்தன்மை வாய்ந்தனவாக அமைந்தன. ஆஸ்கர் விருதுப் பட்டியலில் நுழைந்துவிட வேண்டும் என ஆசைப்பட்டார். அதனால் திரைப்படத் தயாரிப்புகளில் நஷ்டப்பட்டார். சிலரை நஷ்டப்படுத்தினார். உலக நாயகன் எனக் கொண் டாடப்பட்டார். பட வாய்ப்புகள் குறைந்தபோது பிக் பாஸ் ஆனார். கலைஞரும் ஜெயலலிதாவும் அரசியலில் இல்லை என்றதும் தனிக்கட்சி தொடங்கினார். போட்டியிட்டுக் காயம் பெற்றார். திரையிலும் அரசியலிலும் தொடர் தோல்விகள் சூழ்ந்த நிலையில், தொலைக்காட்சி அவரை வீடுதோறும் கொண்டு சேர்த்து, 2ஃ ஃண்க்ள்வரை பெயர் பெறச் செய்தது. அது விக்ரம் 2 படத்தின் பெருவெற்றியாக அமைந்தது. எனவே, கமலும்-ரஜினியும் தனித்தனி பாணி. அதை ஒப்பிட முடியாது. அவர்கள் இருவரையும் ஒப்பிடக்கூடிய ஒரே இடம், திரைத்துறையில் ஏறத்தாழ 50 ஆண்டுகள் தாக்குப்பிடித்து நிற்பது மட்டும்தான்.
தே.மாதவராஜ் -கோயமுத்தூர்-45
புதுக்கோட்டை வேங்கைவயலில் நடந்த கொடுமையான சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய முடியாத கையாலாகாத அரசு என்ற சீமானின் ஆவேச பேச்சு பற்றி?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், குருவி சுடுவது போல மக்களை சுட்டுக் கொன்ற கொடூரத்தை டி.வி பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று சொன்ன அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சித்தப்பா, பெரியப்பா என்று உறவுமுறை கொண்டாடிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த ஆட்சியில் உணர்ச்சி யுடன் கோபப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே. கொடியங்குளம், மாஞ்சோலை, மேலவளவு, திண்ணியம், வேங்கைவயல் போன்ற கொடூர நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருப்பதை மனித உணர்வு கொண்ட எவரும் ஏற்க முடியாது. குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கும் கழிசடைகள், சமூகநீதிக் கொள்கையை முன்னிறுத்தும் ஆட்சியில், இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது கடும் எதிர்ப்புக்குள்ளாகி இருக்கிறது.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு கட்சியை சார்ந்து செய்திகளை வெளியிடுவதால் நடுநிலையான பத்திரிகை எது என்பதை எப்படி தெரிந்துகொள்வது?
மூத்த பத்திரிகை யாளர் சின்னகுத்தூசி அவர்களின் கட்டுரைத் தொகுப்புகளை புதையல் என்ற தலைப் பில் 6 பாகங்களாக வெளியிட்டிருக்கிறது நக்கீரன் பப்ளி கேஷன்ஸ். அதில் காலச்சுவடு இதழுக்கு சின்னகுத்தூசி அளித்த நேர்காணல் இடம் பெற்றுள்ளது. கவிஞர் மனுஷ்யபுத்திரனும், காலச்சுவடு கண்ணனும், "40 ஆண்டுகளுக்கு மேலாக விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறீர்கள். உங்கள் எழுத்து நடுநிலை சார்ந்ததா? அல்லது உங்கள் அரசியல் நிலைப்பாடுகளை ஒட்டியதா?' என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு சின்னகுத்தூசி அளித்த பதில் இதுதான்... “"எழுத்துகளில் ஒருபோதும் நடுநிலைக்கு இடமேயில்லை. அரசியல் கட்சிகளுக்குக் கொள்கைகள் எவ்வளவு முக்கியமோ அப்படியே அரசியல் விமர்சகர் களுக்கும் கொள்கைகள் இருப்பது மிக அவசியம். இல்லாவிடில் அவர்களது அர சியல் விமர்சனமாக இருக்காது. அரசியல் கச்சேரியாகத்தான் இருக்கும். யாரும் நடுநிலையாளராக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது'’’எனத் தெளிவாக வரையறுத்துக் கூறுகிறார். எந்த ஒரு செய் திப் பத்திரிகைக்கும் ஒரு கண்ணோட்டம் உண்டு. அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளும் பத்திரிகைகள், காட்டிக்கொள்ளாத பத்திரிகைகள் -ஊடகங்கள் என்று வேண்டுமானால் வகைப்படுத்தலாமே தவிர, நடுநிலையான பத்திரிகை -ஊடகம் என்று எதுவும் கிடையாது. உண்மை பக்கம் நிற்கலாம். மக்களின் நியாயம் பக்கம் நிற்கலாம். அநீதிக்கு எதிராக நிற்கலாம். அதை விட்டுவிட்டு, நடுவாலதான் நிற்பேன் என்றால் ஆக்சிடெண்ட்தான் ஆகும்.