மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

2021-ல் மாவலியால் மறக்க முடியாத நிகழ்வு எது?

கொரோனா போன்ற பேரிடர்களை எதிர்கொண்டு இந்த உலகம் மீண்டு வரும், மீண்டும் மீண்டும் வரும் என உரக்கச் சொன்ன டோக்கியோ ஒலிம்பிக்ஸ்.

கே.ஆர்.ஸ்ரீராமன், பெங்களூரு 77

Advertisment

அ.தி.மு.க.வில் இருந்து தன்னால் விலகி இருக்க முடியவில்லை என்கிறாரே முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான அன்வர் ராஜா?

பொதுவாழ்வும் அரசியலும் நமது பார்வைக்கு ஆடம்பரம்-பகட்டு. அதிலேயே ஈடுபட்டிருந்தவர்களுக்கு அதுதான் வாழ்க்கை. ஆதாயம் பார்த்தவர்களாக இருந்தாலும், தியாகங்கள் செய்தவர்களாக இருந்தாலும் அதனை விட்டுவிட்டு இருக்க முடியாது. அன்வர்ராஜா அ.தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர். எம்.ஜி.ஆர். காலத்திலேயே முக்கியத்துவம் பெற்றவர். அந்தக் கட்சியின் சிறுபான்மை சமுதாயத்தின் முகமாக இருந்தவர். இன்றைய அ.தி.மு.க.வின் பவர் பாகப்பிரிவினைக்கிடையே அவர் சிக்கிக்கொண்டு, கட்டம் கட்டப்பட்டுவிட்டார். அவர் ஆதரிக்கும் நபர்களுக்கும் கட்சிக்குள் இடமில்லை. அமைச்சராக இருந்தபோதும் எம்.பி.யாக இருந்த போதும் அவரைத் தேடி வந்த கட்சிக்காரர்கள்கூட இப்போது கண்டுகொள்ள மாட்டார்கள். அதுதான் அரசியல். கவிஞர் வைரமுத்துவின் ஒரு மாஜி மந்திரியின் பகல் பொழுது கவிதையைப் படித்துப் பாருங்கள். அன்வர்ராஜா உங்கள் கண்களுக்குத் தெரிவார்.

ம.ரம்யா ராகவ், -குப்பம் -ஆந்திரா

Advertisment

தி.மு.க. ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் காலம் வெகுதொலைவில் இல்லை என்கிறாரே ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா?

தி.மு.க.வை மக்கள் அனுப்புவது இருக்கட்டும். உடன்பிறவா சகோதரியின் போயஸ் கார்டனுக்குள்ளும் கட்சிக்குள்ளும் இவரது வளர்ப்புகளே இவரை அனுப்ப மறுக்கிறார்களே!

வாசுதேவன், பெங்களூரு

ஒருநாள் பந்தயத்தில் அன்று கேப்டன், இன்று ஆட்டக்காரர் விராத் கோலி?

விளையாட்டில் தலைமைப் பண்பைவிட ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப்தான் சிறப்பானது. கேப்டனாக இருந்தாலும், வழக்கமான ஆட்டக்காரராக இருந்தாலும் அணியின் வெற்றிக்கான பங்களிப்பு என்ன என்பதைத்தான் ரசிகர்கள் கவனிப்பார்கள்.

mm

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

சாகித்ய அகாடமி விருது?

தமிழில் இந்தமுறை பெண் எழுத்தாளருக்கு கிடைத்திருப்பது சிறப்பானது. அம்பை நெடுங்காலமாக எழுதி வருபவர். தனக்கான தனித்துவமான எழுத்து நடையையும் கதைக்களத்தையும் கொண்டவர். அவரது "சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற புத்தகம் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது. அதுபோலவே, சிறுவர்களுக்குரிய படைப்புகளுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது, ஹைகூ கவிதையில் அசாத்திய சாதனைகள் புரிந்த கவிஞர் மு.முருகேஷின் கதைக்குக் கிடைத்திருக்கிறது. இருவருக்குமான விருதுகள், தமிழ் இலக்கிய உலகில் புதிய படைப்பாளர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்.

dd

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

கர்நாடக இசை மட்டுமே ஒலித்த மியூசிக் அகடமியில் இயக்குநர் பா. ரஞ்சித் குழு திருமாவளவன் தலைமையில் முதல் முறையாக "பறை' ஓசை ஒலித்தது பற்றி?

சபாக்களில் தமிழிசை பாடுவதே தீட்டாக இருந்த காலம் உண்டு. ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுகால படிப்படியான முன்னெடுப்புகளால்தான் தமிழ்ப் பாடல்களை கர்நாடக சங்கீத வித்வான்கள் பாடினார்கள், பாடுகிறார்கள். வயலின், மிருதங்கம் அளவுக்கு தவில், நாதசுரம் கூட சபாக்களில் அனுமதிக்கப்படாமல் இருந்தது. பின்னர் அதிலும் மாற்றம் வந்தது. ராஜா சர் அண்ணாமலை செட்டியார் தொடங்கிய தமிழ் இசை மன்றம், பெரியார் முன்னெடுத்த தமிழிசை விழாக்கள், ராஜாஜி -கல்கி போன்றவர்களால் சபாக்களில் நுழைந்த தமிழ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை சங்கமம் உள்ளிட்ட அமைப்புகளின் தொடர்ச்சியான நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், இவையெல்லாம் மெல்ல மெல்ல காலத்தைக் கனிய வைத்தது. டிசம்பர் சீசனில் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி நடத்துவதுதான் பெருமை என நினைத்திருந்த சிலரின் காதுகளில் அறையும் வகையில், மியூசிக் அகாடமியில் பறையை அதிர வைத்திருக்கிறது ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டுக் குழு நடத்திய மார்கழியில் மக்கள் இசை.

மஞ்சு வாசுதேவன்,பெங்களூரு

பொங்கல், மாட்டுப் பொங்கல். ஒப்பிடுக..!

உழைப்பின் விளைச்சலைக் கொண்டாடும் தமிழர் திருநாள், பொங்கல். அந்த விளைச்சலுக்கான உழைப்பைக் கொடுக்கும் உயிரினத்தை நன்றி மறவாமல் கொண்டாடும் தமிழரின் பண்பாடு, மாட்டுப் பொங்கல்.